Wednesday, July 24, 2013

திருமூலர் திருமந்திரம் 1-883 - முதல் தந்திரம், இரண்டாம் தந்திரம், மூன்றாம் தந்திரம், 1st,2nd & 3rd Tantra

திருமூலர் திருமந்திரம்

திருமூலரின்  திருமந்திரம் 63 நாயன்மார்களுள் ஒருவராகவும், பதினெண் சித்தர்களுள் ஒருவராகவும், திருவள்ளுவரின் குருவாகவும் அறியப்படும் திருமூலரால் இயற்றப்பட்டது திருமந்திரம் ஆகும். இந்நூல் சைவ திருமுறைகளுள் பத்தாம் சைவ திருமுறையாக போற்றப்படுகிறது. திருவாவடுதுறை யிலிருந்தவாரே இந்நூல் இயற்றப்பட்டதாக வரலாற்றில் காணக்கிடைக்கிறது. 
திருமூலர் இயற்றிய இத்திருமந்திரம் ஒன்பது தந்திரங்களில் (இயல்கள்) மூவாயிரம் பாடல்களை உடையது. 'மூலன் உரை செய்த மூவாயிரந்தமிழ் ஞாலம் அறியவே நந்தியருளது' என்ற திருமூலரின் வாக்கினாலேயே இதனை அறியலாம். 
வேறு பெயர்கள்: திருமந்திர மாலை, மூவாயிரந்தமிழ் என்பன திருமந்திரத்தின் வேறு பெயர்கள் ஆகும். நூல் பெருமை: இந் நூல் பண்டைய இந்திய சித்தர்களின் அறிய கண்டுபிடிப்புகளையும் வாழ்வியல் உண்மைகளையும் விளக்குகிறது. வேதம், ஆகமம் ஆகிய இரண்டிற்கும் இத்திருமந்திரம் அரிய விளக்கமாய்ப் பொலிந்து விளங்குகின்றது. மேலும் இந்தூல் சைவ ஆகமம் எனறு போற்றப்படும் பெருமையினை உடையது. இந் நூல் இறைவனை துதி செய்வதோடு நில்லாமல் பதி, பசு, பாசம் என்பனவற்றின் இணைப்பையும், உயர்ந்த முறையில் வாழ்வாங்கு வாழ உதவும் நல்முறைகளை விளக்கியும், நல் வாழ்க்கை வழிகாட்டி நூலாகவும் சாத்திர நூலாகவும போற்றப்படுகிறது. பண்டைய பாரத சித்தர்கள் கூறிய மனித வளர்ச்சிக்கு உகந்த யோகம் தியானம், குண்டலினி யோகம், மருத்துவம், நல் ஒழுக்கம் போன்றவற்றை விளக்கும் அரிய நூலாகும். அரிய பொருளை எளிய சொற்களால் அனைவரது உள்ளத்தில் பதியும்படி கூறுதல் திருமூலரின் சிறப்பு இயல்பாம். தோத்திரத்திற்குத் திருவாசகம் சாத்திரத்திற்குத் திருமந்திரம் எனச் சான்றோர் கூறுவர். மேலும் சிவன் அன்பு வடிவானவன் என்னும் அரிய உண்மையினை கூறும் திருமூலரின் இத்திருமந்திரமே சைவ சித்தாந்தத்தின் முதல் நூலாகும்.
எல்லாம் வல்ல பரம் பொருளாகிய இறைவருளால் பல ஆயிரம் ஆண்டுகள் யோக நிலையில் இருந்து தவம் செய்தவர். யோகியாகவும் எல்லாம் வல்ல சித்தராகவும், பலகலை அறிந்த ஞானியாகவும், அருள் நிறைந்த நாயன்மாராகவும் விளங்கினார்! இறைவன் பெரிய கருணையினால், உலகுக்கு அளித்த ஆகமப் பொருளை அருந்தமிழ் மறையாய் மூவாயிரம் மந்திரங்களில் நமக்குத் தந்துள்ளார்.
திருமந்திரம் 10ஆம் திருமுறை. தோத்திரமாகவும், சாத்திரமாகவும், யோகநூலாகவும், ஞானநூலாகவும், தந்திர நூலாகவும், மந்திரங்கள் அமைந்த பாராயண நூலாகவும், சமய, சமூக, ஒருமைப்பாட்டு நல்லிணக்க நூலாகவும் திகழ்ந்து உலகுக்கு உயிராக விளங்குகிறது திருமந்திரம். "இறைவனே தமிழொடு - வடமொழியிலும், ஆரியத்தொடு தமிழிலும் உடனே சொல்லிக் காரிகையார்க்குக் கருணை செய்தானே" என்கிறார் முத்தமிழ் வேதம் தத்துவம் சதாசிவம். திருமூலர் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர். இவர் இயற்பெயர் சுந்தரர். தமிழகத்தில் பொதிகை மலையில் - அகத்தியர் - தமிழ்ச் சங்கத்தில் உலக நூல்களைக் கற்றார். பின், கயிலைக் குருகுலம் சென்று, ஞான நூல்களான அருமறைகள், ஆகமங்களை நந்தியெம் பெருமானிடம் கற்றார். நந்தி அருளால் 'நாதன்' என்ற பட்டம் பெற்று, சுந்தர நாதர் ஆகித் தவம் செய்தார்.
கயிலையில் இவருடன் பாடங்கேட்டவர்கள்: சனகர் சனந்தனர் - சானாதனர் - சனற்குமாரர், பதஞ்சலி, வியாக்கிரபாதர், சிவயோக மாமுனிவர் ஆகிய ஏழுபேருடன், தானும் உடனிருந்து கற்றதாக அகச்சான்று கூறுகிறார். பதஞ்சலி - வியாக்கிர பாதருடன் இவர் தில்லைக்கு வந்து திருக்கூத்து தரிசனம் செய்தார். மீண்டும் கயிலை சென்றார். பதஞ்சலி வியாக்கிர பாதர் இருவரும் தில்லையிலே ஆசிரமங்கள் அமைத்துக் தங்கிவிட்டனர். தில்லைக் கோபுரத்தில் - திருமூலர்சிலையை காணலாம். இரண்டாவது முறையாக அகத்தியரைக் காண பொதிகை நோக்கி வருகிறார். 'குறு முனிபால் உற்றதொரு கேண்மையினால் உடன் சில நாள் உறைதற்கு, நற்றமிழின் பொதியமலை நண்ணுதற்கு வழிக் கொண்டார்' என்கிறார் சேக்கிழார். பழமைக்குப் பழமையாகவும், புதுமைக்குப் புதுமையாகவும், விளங்குபவர் இறைவன் இதனை மாணிக்கவாசகர், முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருளே! பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே! என்கிறார் மாணிக்கவாசகர் உடம்பார் அழியின் உயிரால் அழிவர்  திறம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார் உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த்தேனே இந்தப் பாடல் இடம்பெற்றுள்ள திருமந்திரம் என்ற ஒப்பற்ற தத்துவ நூலை இயற்றியவர்தான் திருமூலர். காயமே இது பொய்யடா..  வெறும் காற்றடைத்த பையடாஎன்ற மாயாவாதத்துக்கு எதிராக, அறிவு பூர்வமான யதார்த்த வாதத்தை முன்வைத்த சிந்தனைச் சித்தர்தான் திருமூலர். சங்கன்னர் என்ற சித்தரின் அவதாரமாக கருதப்படும் திருமூலர், சிதம்பரம் தில்லை நடராஜரின் சன்னதியில், நீண்ட காலம் நிட்டையில் அமர்ந்துதான், உலகுக்கு மிகச் சிறந்த தத்துவ நூல்களை வழங்கியுள்ளார். உடலை வருத்தித்தான் ஞானத்தை அடையவேண்டும் என்ற கருத்தை மறுத்த அவர், பலவீனமான உடலை வைத்துக்கொண்டு வலிமையான ஞானத்தை அடைய முடியாது என்பதையும் உறுதிப்படக் கூறியுள்ளார்.
இவர் எழுதிய நூல்களில், திருமந்திரம் தலையாயது எனினும்,
திருமூலர் அறுநூற் றொன்று, திருமூலர் வைத்தியம்,
திருமூலர் ஞானம், திருமூலர் வழலைச் சூத்திரம்,
திருமூலர் பல திரட்டு, திருமூலர் வாதம் இருபத்தொன்று போன்ற
மேலும் பல அரிய நூல்களையும் எழுதியுள்ளர். உடல் சார்ந்த தத்துவக் கோட்பாட்டை நமது ஆன்மீக மரபில் அழுத்தமாகப் பதிய வைத்தவர் திருமூலர்தான். 
உள்ளம் பெரும் கோயில் ஊனுடம்பு ஆலயம் வள்ளல் பிரானுக்கு வாய்கோபுர வாசல் தெள்ள தெளிந்தமாருக்கு சீவன் சிவலிங்கம் கள்ளப் புலன் ஐந்தும் காணா மணி விளக்கே உடலும், அதில் திரண்டுள்ள ஊனும் எம்பெருமான் கோயில் என்று சொல்லும் திருமூலர், வாயைக் கோபுரம் என்றும், உயிரை சிவனென்றும் சித்தரிக்கிறார். புலன்கள் நமது கட்டுப்பாட்டில் இருப்பதில்லை என்பதால் அவற்றை கள்ளப் புலன்கள் என்கிறார். இயல்பான மனித வாழ்வின் மூலமாக மேன்மையை அடைய முடியும் என்பதே திருமூலரின் சாரமான கருத்து என்று சொல்லலாம். இயற்கைக்கு மாறான வெறுப்பும், சலிப்பும், விரக்தியும் மனிதனுக்கு சிறுமைப் பண்புகளைத்தான் அதிகரிக்குமே தவிர, பேரியல்புகளை வளர்க்காது. திருமூலரின் ஞான மார்க்கம் இந்த அடிப்படையில் அமைந்ததுதான்.
பொதுவாக சித்தர்களின் தத்துவமே, மனித வாழ்விலிருந்து இறைமையை நாடுவதுதான். இறை வாழ்வு என்பதே இயற்கையோடு இயைந்த வாழ்வுதான் என்பதே சித்தர்களின் சிந்தனை. திருமூலர், அதைக்கொஞ்சம் அழுத்தமாகவும், விரிவாகவும் சொல்லியிருக்கிறார். அவர் இயற்றியுள்ள திருமந்திரம், நல்வாழ்விற்கு ஒருமந்திரம். என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யு மாறே..என்பது திருமூலரின் பெருமிதம் மிகுந்த பிரகடனம். சித்தர்கள் என்றால், ஏதோ மருத்துவத்தையும் ஆன்மீகத்தையும் மட்டுமே ஆய்ந்தும் தெளிந்தும் உலகுக்கு அளித்தவர்கள் என்ற கருத்துதான் பரவலாக இருந்து வருகிறது.  முற்றிலும் தவறான பதிவு என்றுதான் அதைச் சொல்ல வேண்டும்.   மொழி இல்லாமல் எது நிலைக்கும்தமிழின் முதல் இலக்கண நூலைத் தந்தவரே அகத்தியர்தான் என்பதை ஆன்றோரும் சான்றோரும் ஆணித் தரமாக சொல்லுகிறார்கள்.  ஞானமும் தமிழும் இணைந்த போதுதான் சித்தர்களின் தத்துவம் செழுமை பெற்றது. மொழியை இழந்த சமூகம் வரலாற்றையும் இழந்துவிடும்.  மொழி என்ற வேர்கள் இல்லாமல் சமூகவிருட்சம் தழைக்கவோ, செழிக்கவோ முடியாது.  முக்காலத்தையும் அறிந்த சித்தர்களுக்கு முத்தமிழின் பெருமை தெரியாமலா போய்விடும்! தமிழைப் பாடுவதற்காகவே என்னை இறைவன் படைத்திருக்கிறான் என்று புளங்காகிதம் அடைந்திருக்கும் திருமூலர் தமிழின் பெருமையும் இறைவனின் அருமையும் இரண்டறக் கலந்திருப்பது குறித்து மனம் குழைந்து கூறி இருப்பதைக் கவனியுங்கள்... முத்தியை ஞானத்தை முத்தமிழ் ஓசையை எத்தனை காலமும் ஏத்தவர் ஈசனை நெய்தலைப் பால்போல் நிமலனும் அங்குளன் அத்தகு சோதியது விரும்பாரன்றே” (திருமந்திரம்) அதனால்தான்  “அருமலர் மொழியுஞான அமுதர்த செந்தமிழைச் சொல்வாம்என்கின்றார் ஞானவெட்டியான். ஆம்... தமிழை அவர் வெறும் மொழியாக மட்டும் பார்க்கவில்லை.  ஞானாமிர்தமாகப் பார்க்கிறார். அதுமட்டுமல்ல. சித்தர்களின் சிறப்பை பற்றி சொல்ல வரும்போது, “பண்டுடன் பழகி பைந் தமிழுணர்ந்து  தென்தரை மீதிற் றெளிந்தவர் சித்தரேஎன்றும் பாராட்டுகின்றார்.  தங்களின் தொன்மமான பெருமைகளில் தோய்ந்தது மட்டுமல்லாமல், தமிழையும் உணர்ந்ததாலேயே சித்தர்கள் சிறப்புப் பெற்றார்கள் என்கிறார். பொதிகை மேவு மகத்தீர ராலெனது போதத் தமிழ் வாக்கியம்என கேட்பவரை கிறுகிறுக்க வைக்கும் தன்தமிழ் ஆற்றல், பொதிகையில் வாழும் அகத்தியன் தந்த கொடை என்று போற்றுகிறார். அகத்தியர் தமிழைப் பற்றி என்ன சொல்லுகிறார்? “சிந்தையுறு ஞானத் தெளியவுரை பாடுதற்கு  வந்தபஞ்ச பூதத்தின் வாழ்க்கையே - செந்தமிழ் நூல் காவியந்தானாயிரத்தில் கல்லா யரு நூலும் தேவியென்னும் பூரணியே சீர்” (அகத்தியர் ஞானம் 100) என்று தமிழை பஞ்ச பூதங்களின் சேர்க்கையாகவே சித்தரிக்கின்றார்.
பட்டினத்தாரே, மனித வாழ்வின் முழுமையான தத்துவத்தையும், தமிழின் முச்சங்கங்களின் பெயராலேயே விளக்குகிறார்.
முதற்சங்கம் அமுதூட்டும் மொய்குழலார்  இசை
நடுச்சங்கம் நல்விலங்கு பூட்டும் கடைச் சங்கம் இம்போதது ஊதும் அம்மட்டோ  நாம் பூமி வாழ்ந்த நலம்
இப்படி மூலிகையைச் சொன்னாலும், முக்தி பற்றிச் சொன்னாலும், முத்தமிழில் குழைத்தே சித்தர்கள் சொல்லி இருக்கிறார்கள். சித்தர்கள் சித்தத் தெளிவு மட்டுமல்ல, செந்தமிழ்த் தெளிவும் கொண்டவர்கள் என்பதை இனியேனும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
10ம் திருமுறை
திருமந்திரம் (திருமூலர் அருளியது)
உபதேசம் (1 - 112)
விநாயகர் காப்பு
ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.

பாயிரம்

1. கடவுள் வாழ்த்து

ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்
நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந் தான்ஐந்து
வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்
சென்றனன் தானிருந் தான்உணர்ந் தெட்டே. 1.

போற்றிசைத்து இன்னுயிர் மன்னும் புனிதனை
நாற்றிசைக் கும்நல்ல மாதுக்கும் நாதனை
மேற்றிசைக் குள்தென் திசைக்கொரு வேந்தனாம்
கூற்றுதைத் தானையான் கூறுகின் றேனே. 2

ஒக்கநின் றானை உலப்பிலி தேவர்கள்
நக்கனென்று ஏத்திடும் நாதனை நாள்தொறும்
பக்கநின் றார்அறி யாத பரமனைப்
புக்குநின்று உன்னியான் போற்றிசெய் வேனே. 3

அகலிடத் தார்மெய்யை அண்டத்து வித்தைப்
புகலிடத்து என்றனைப் போதவிட் டானைப்
பகலிடத் தும்இர வும்பணிந் தேத்தி
இகலிடத் தேஇருள் நீங்கிநின் றேனே. 4.

சிவனொடுஒக் கும்தெய்வம் தேடினும் இல்லை
அவனொடுஒப் பார் இங்கு யாவரும் இல்லை
புவனம் கடந்தன்று பொன்னொளி மின்னும்
தவனச் சடைமுடித் தாமரை யானே.5.

அவனை ஒழிய அமரரும் இல்லை
அவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
அவனன்றி மூவரால் ஆவதொன் றில்லை
அவனன்றி ஊர்புகு மாறு அறியேனே.6.

முன்னைஒப் பாயுள்ள மூவர்க்கும் மூத்தவன்
தன்னைஒப் பாய்ஒன்றும் இல்லாத் தலைமகன்
தன்னைஅப் பாயெனில் அப்பனு மாயுளன்
பொன்னைஒப் பாகின்ற போதகத் தானே.7.

தீயினும் வெய்யன் புனலினும் தண்ணியன்
ஆயினும் ஈசன் அருளறி வாரில்லை
சேயினும் நல்லன் அணியன்நல் அன்பர்க்குத்
தாயினும் நல்லன் தாழ்சடை யோனே.8.

பொன்னால் புரிந்திட்ட பொற்சடை யென்னப்
பின்னாற் பிறங்க இருந்தவன் பேர்நந்தி
என்னால் தொழப்படும் எம்இறை மற்றவன்
தன்னால் தொழப்படு வாரில்லை தானே.9.

தானே இருநிலம் தாங்கிவிண் ணாய்நிற்கும்
தானே சுடும்அங்கி ஞாயிறும் திங்களும்
தானே மழைபொழி தையலு மாய்நிற்கும்
தானே தடவரை தண்கட லாமே. 10.

அயலும் புடையும்எம் ஆதியை நோக்கில்
இயலும் பெருந்தெய்வம் யாதுமொன் றில்லை
முயலும் முயலில் முடிவும் மற் றாங்கே
பெயலும் மழைமுகிற் பேர்நந்தி தானே. 11.

கண்ணுத லான்ஒரு காதலின் நிற்கவும்
எண்ணிலி தேவர் இறந்தார் எனப்பலர்
மண்ணுறு வார்களும் வானுறு வார்களும்
அண்ணல் இவன் என்றுஅறியகி லார்களே. 12.

மண்ணளந் தான்மல ரோன்முதல் தேவர்கள்
எண்ணளந் தின்னும் நினைக்கிலார் ஈசனை
விண்ணளந் தாந்தன்னை மேலளந் தாரில்லை
கண்ணளந் தெங்குங் கடந்துநின் றானே. 13.

கடந்துநினின் றான்கம லம்மல ராதி
கடந்துநின் றான்கடல் வண்ணம்எம் மாயன்
கடந்துநின் றான்அவர்க்கு அப்புறம் ஈசன்
கடந்துநின் றான்எங்கும் கண்டுநின் றானே. 14.

ஆதியு மாய்அர னாய்உட லுள்நின்ற
வேதியு மாய்விரிந்துஆர்ந்துஇருந் தான்அருள்
சோதியு மாய்ச்சுருங் காததோர் தன்மையுள்
நீதியு மாய்நித்த மாகிநின் றானே. 15.

கோது குலாவிய கொன்றைக் குழற்சடை
மாது குலாவிய வாள்நுதல் பாகனை
யாது குலாவி அமரரும் தேவரும்
கோது குலாவிக் குணம்பயில் வாரே.16.

காயம் இரண்டுங் கலந்து கொதிக்கினும்
மாயங் கத்தூரி யதுமிகும் அவ்வழி
தேசங் கலந்தொரு தேவனென் றெண்ணினும்
ஈசன் உறவுக் கெதிரில்லை தானே.17.

அதிபதி செய்து அளகை வேந்தனை
நிதிபதி செய்த நிறைதவம் நோக்கி
அதுபதி ஆதரித்து ஆக்கமது ஆக்கின்
இதுபதி கொள்என்ற எம்பெரு மானே.18.

இதுபதி ஏலங் கமழ்பொழில் ஏழும்
முதுபதி செய்தவன் மூதறி வாளன்
விதுபதி செய்தவன் மெய்த்தவம் நோக்கி
அதுபதி யாக அமருகின் றானே. 19.

முடிவும் பிறப்பையும் முன்னே படைத்த
அடிகள் உறையும் அறனெறி நாடில்
இடியும் முழக்கமும் ஈசர் உருவம்
கடிமலர்க் குன்ற மலையது தானே.20.
 

வானப் பெருங்கொண்டல் மாலயன் வானவர்
ஊனப் பிறவி ஒழிக்கும் ஒருவனைக்
கானக் களிறு கதறப் பிளந்தனம்
கோனைப் புகழுமின் கூடலு மாமே. 21.

மனத்தில் எழுகின்ற மாயநன் நாடன்
நினைத்தது அறிவன் என்னில்தான் நினைக்கிலர்
எனக்குஇறை அன்பிலன் என்பர் இறைவன்
பிழைக்கநின் றார்பக்கம் பேணிநின் றானே.22.

வல்லவன் வன்னிககு இறையிடை வாரணம்
நில்லென நிற்பித்த நீதியுள் ஈசனை
இல்லென வேண்டா இறையவர் தம்முதல்
அல்லும் பகலும் அருளுகின் றானே.23.

போற்றிசைத் தும்புகழ்ந் தும்புனி தன்அடி
தேற்றுமின் என்றும் சிவனடிக் கேசெல்வம்
ஆற்றிய தென்று மயலுற்ற சிந்தையை
மாற்றிநின் றார்வழி மன்னிநின் றானே. 24.
 

பிறப்பிலி பிஞ்ஞகன் பேரரு ளாளன்
இறப்பிலி யாவர்க்கும் இன்பம் அருளும்
துறப்பிலி தன்னைத் தொழுமின் தொழுதால்
மறப்பிலி மாயா விருத்தமும் ஆமே. 25.
 

தொடர்ந்துனின் றானைத் தொழுமின் தொழுதால்
படர்ந்துநின் றான்பரி பாரக முற்றும்
கடந்துநின் றாம்கம லம்மலர் மேலே
உடந்திருந் தான்அடிப் புண்ணிய மாமே. 26.

சந்தி எனத்தக்க தாமரை வாண்முகத்து
அந்தமில் ஈசன் அருள்நமக் கேயென்று
நந்தியை நாளும் வணங்கப் படும்அவர்
புந்தியி னுள்ளே புகுந்துநின் றானே. 27.

இணங்கிநின் றான் எங்கும் ஆகிநின் றானும்
பிணங்கிநின் றான்பின்முன் னாகிநின் றானும்
உணங்கிநின் றான்அம ராபதி நாதன்
வணங்கிநின் றார்க்கே வழித்துணை யாமே. 28

காணநில் லாய்அடி யேற்குஉறவுஆருளர்
நாணநில் லேன்உன்னை நான்தழு விக்கொளக்
கோணநில் லாத குணத்தடி யார்மனத்து
ஆணியன் ஆகி அமர்ந்துநின் றானே. 29

வான்நின்று அழைக்கும் மழைபோல் இறைவனும்
தானினறு அழைக்கும்கொல் என்று தயங்குவார்
ஆன்நின்று அழைக்கு மதுபோல்என் நந்தியை
நான்நின்று அழைப்பது ஞானம் கருதியே. 30

மண்ணகத் தான்ஒக்கும் வானகத் தான்ஒக்கும்
விண்ணகத் தான்ஒக்கும் வேதகத் தான்ஒக்கும்
பண்ணகத்து இன்னிசை பாடலுற் றானுக்கே
கண்ணகத் தேநின்று காதலித் தேனே.31
 

தேவர் பிரான்நம் பிரான்திசை பத்தையும்
மேவு பிரான்விரி நீருலகேழையும்
தாவு பிரான்தன்மை தானறி வாரில்லை
பாவு பிரான்அருட் பாடலு மாமே. 32

பதிபல வாயது பண்டுஇவ் வுலகம்
விதிபல செய்தொன்றும் மெய்ம்மை உணரார்
துதிபல தோத்திரம் சொல்ல வல்லாரும்
மதியிலர் நெஞ்சினுள் வாடுகின் றாரே.33

சாந்து கமழுங் கவா஢யின் கந்தம்போல்
வேந்தன் அமரர்க்கு அருளிய மெய்ந்நெறி
ஆர்ந்த சுடரன்ன ஆயிர நாமமும்
போந்தும் இருந்தும் புகழுகின் றேனே. 34

ஆற்றுகி லாவழி யாகும் இறைவனைப்
போற்றுமின் போற்றிப் புகழ்மின் புகழ்ந்திடில்
மேற்றிசைக் கும்கிழக் குத்திசை எட்டொடு
மாற்றுவன் அப்படி ஆட்டவு மாமே. 35

அப்பனை நந்தியை ஆரா அமுதினை
ஒப்பிலி வள்ளலை ஊழி முதல்வனை
எப்பரி சாயினும் ஏத்துமின் ஏத்தினால்
அப்பரி சீசன் அருள்பெற லாமே. 36

நானும்நின் றேத்துவன் நாள்தொறும் நந்தியைத்
தானும்நின் றான்தழல் தான்ஒக்கும் மேனியன்
வானில்நின் றார்மதி போல்உடல் உள்ளுவந்து
ஊனில்நின் றாங்கே உயிர்க்கின்ற வாறே. 37

பிதற்றொழி யேன்பெரி யான்அரி யானைப்
பிதற்றொழி யேன்பிற வாஉரு வானைப்
பிதற்றொழி யேன்எங்கள் பேர்நந்தி தன்னைப்
பிதற்றொழி யேன்பெரு மைத்தவன் தானே. 38

வாழ்த்தவல் லார்மனத் துள்ளுறு சோதியைத்
தீர்த்தனை அங்கே திளைக்கின்ற தேவனை
ஏத்தியும் எம்பெரு மான்என்றுஇறைஞ்சியும்
ஆத்தம் செய் தீசன் அருள்பெற லாமே. 39

குறைந்துஅடைந் தீசன் குரைகழல் நாடும்
நிறைந்துஅடை செம்பொனின் நேர்ஒளி ஒக்கும்
மறைஞ்சடம் செய்யாது வாழ்த்தவல் லார்க்குப்
புறஞ்சடம் செய்வான் புகுந்துநின் றானே. 40

சினஞ்செய்த நஞ்சுண்ட தேவர் பிரானைப்
புனஞ்செய்த நெஞ்சிடை போற்றவல் லார்க்குக்
கனஞ்செய்த வாள்நுதல் பாகனும் அங்கே
இனஞ்செய்த மான்போல் இணங்கிநின் றானே. 41

போய்அரன் தன்னைப் புகழ்வார் பெறுவது
நாயக னான்முடி செய்தது வேநல்கும்
மாயகம் சூழ்ந்து வரவல்ல ராகிலும்
வேயன தோளிக்கு வேந்தொன்றும் தானே. 42

அரனடி சொல்லி அரற்றி அழுது
பரனடி நாடியே பாவிப்ப நாளும்
உரன்அடி செய்துஅங்கு ஓதுங்கவல் லார்க்கு
நிரன்அடி செய்து நிறைந்துநின் றானே. 43

போற்றிஎன் பார்அம ரர்புனி தன்அடி
போற்றிஎன் பார்அசு ரர்புனி தன்அடி
போற்றிஎன் பார்மனி தர்புனி தன்அடி
போற்றிஎன் அன்புள் பொலியவைத் தேனே. 44

விதிவழி அல்லதுஇவ் வேலை உலகம்
விதிவழி இன்பம் விருத்தமும் இல்லை
துதிவழி நித்தலும் சோதிப் பிரானும்
பதிவழி காட்டும் பகலவ னாமே. 45

அந்திவண் ணாஅர னேசிவ னேஎன்று
சிந்தைசெய் வண்ணம் திருந்தடி யார்தொழ
முந்திவண் ணாமுதல் வாபர னேஎன்று
புந்தி வண்ணன்எம் மனம்புகுந் தானே. 46

மனையுள் இருந்தவர் மாதவர் ஒப்பர்
நினைவுள் இருந்தவர் நேசத்துள் நிற்பர்
பனையுள் இருந்த பருந்தது போல
நினையாத வர்க்கில்லை நின்இன்பந் தானே. 47

அடியார் பரவும் அமரர் பிரானை
முடியால் வணங்கி முதல்வனை முன்னிப்
படியால் அருளும் பரம்பரன் எந்தை
விடியா விளக்கென்று மேவிநின் றேனே. 48

நரைபசு பாசத்து நாதனை உள்ளி
உரைபசு பாசததுஒருங்கவல் லார்க்குத்
திரைபசு பாவச் செழுங்கடல் நீந்திக்
கரைபசு பாசம் கடநது எய்த லாமே. 49

சூடுவன் நெஞ்சிடை வைப்பன் பிரான்என்று
பாடுவன் பன்மலர் தூவிப் பணிந்துநின்
றாடுவன் ஆடி அமரர்ப்பி ரான்என்று
நாடுவன் நான்இன் றறிவது தானே. 50

2. வேதச் சிறப்பு
(வேதத்தின் பெருமை)

வேதத்தை விட்ட அறமில்லை வேதத்தின்
ஓதத் தகும்அறம் எல்லாம் உளதர்க்க
வாதத்தை விட்டு மதிஞர் வளமுற்ற
வேதத்தை ஓதியே வீடுபெற் றார்களே. 51

வேதம் உரைத்தானும் வேதியன் ஆகிலன்
வேதம் உரைத்தானும் வேதா விளங்கிட
வேதம் உரைத்தானும் வேதியர் வேள்விக்காய்
வேதம் உரைத்தானும் மெய்ப்பொருள் காட்டவே. 52

இருக்குஉரு வாம்எழில் வேதத்தின் உள்ளே
உருக்குஉணர் வாயுணர் வேதத்துள் ஓங்கி
வெருக்குஉரு வாகிய வேதியர் சொல்லும்
கருக்குஉரு வாய்நின்ற கண்ணனும் ஆமே. 53

திருநெறி யாவது சித்தசித் தன்றிப்
பெருநெறி யாய பிரானை நினைந்து
குருநெறி யாம்சிவ மாம்நெறி கூடும்
ஒருநெறி ஒன்றாக வேதாந்தம் ஓதுமே. 54

ஆறங்க மாய்வரும் மாமறை ஓதியைக்
கூறங்க மாகக் குணம்பயில் வாரில்லை
வேறங்க மாக விளைவுசெய்து அப்புறம்
பேறங்க மாகப் பெருக்குகின் றாரே. 55

பாட்டும் ஒலியும் பரக்கும் கணிகையர்
ஆட்டும் அறாத அவனியில் மாட்டாதார்
வேட்டு விருப்பார் விரதமில் லாதவர்
ஈட்டும் இடஞ்சென்று இகலல்உற் றாரே. 56

3. ஆகமச் சிறப்பு
(ஆகமத்தின் பெருமை)


அஞ்சன மேனி அரிவையோர் பாகத்தன்
அஞ்சொ டிருபத்து மூன்றுள ஆகமம்
அஞ்சலி கூப்பி அறுபத்து அறுவரும்
அஞ்சா முகத்தில் அரும்பொருள் கேட்டதே. 57

அண்ணல் அருளால் அருளும் சிவாகமம்
எண்ணில் இருபத்தெண் கோடிநூ றாயிரம்
விண்ணவர் ஈசன் விழுப்பம் உரைத்தனர்
எண்ணிநின் றப்பொருள் ஏத்துவன் நானே. 58

பண்டிதர் ஆவார் பதினெட்டும் பாடையும்
கண்டவர் கூறும் கருத்தறி வார்என்க
பண்டிதர் தங்கள் பதினெட்டுப் பாடையும்
அண்ட முதலான் அறஞ்சொன்ன வாறே. 59

அண்ணல் அருளால் அருளுந்திவ் யாகமம்
விண்ணில் அமரர் தமக்கும் விளங்கரி
தெண்ணில் எழுபது கோடிநூ றாயிரம்
எண்ணிலும் நீர்மேல் எழுத்தது ஆகுமே. 60

பரனாய் பராபரம் காட்டி உலகில்
தரனாய்ச் சிவதன்மந் தானேசொல் காலத்
தரனாய் அமரர்கள் அர்ச்சிக்கு நந்தி
உரனாகி ஆகமம் ஓங்கிநின் றானே. 61

சிவமாம் பரத்தினில் சத்தி சதாசிவம்
உவமா மகேசர் உருத்திர தேவர்
தவமால் பிரமீசர் தம்மில்தாம் பெற்ற
நவஆ கமமெங்கள் நந்திபெற் றானே. 62

பெற்றநல் ஆகமங் காரணம் காமிகம்
உற்றநல் வீரம் உயர்சிந்தியம் வாதுளம்
மற்றவ் வியாமளம் ஆகும்கா லோத்தரந்
துற்றநற் சுப்பிரம் சொல்லு மகுடமே. 63

அண்ணல் அருளால் அருளும் சிவாகமம்
எண்ணிலி கோடி தொகுத்திடும் ஆயினும்
அண்ணல் அறைந்த அறிவுஅறி யாவிடின்
எண்ணிலி கோடியும் நீர்மேல் எழுத்தே. 64

மாரியும் கோடையும் வார்பனி தூங்கநின்று
ஏரியும் நின்றங்கு இளைக்கின்ற காலத்து
ஆரிய முந்தமி ழும்உட னேசொலிக்
காரிகை யார்க்குக் கருணைசெய் தானே. 65

அவிழ்கின்ற வாறும் அதுகட்டு மாறும்
சிமிட்டலைப் பட்டுயிர் போகின்ற வாறும்
தமிழ்ச்சொல் வடசொல் எனும்இவ் விரண்டும்
உணர்த்தும் அவனை உணரலு மாமே. 66

4. குரு பாரம்பரியம்
(குரு மரபு)


நந்தி அருள்பெற்ற நாதரை நாடிடின்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மன்று தொழுத பதஞ்சலி வியாக்ரமர்
என்றிவர் என்னோ டெண்மரு மாமே.67

நந்தி அருளாலே நாதனாம் பேர்பெற்றோம்
நந்தி அருளாலே மூலனை நாடினோம்
நந்தி அருளாவ தென்செயும் நாட்டினில்
நந்தி வழிகாட்ட நானிருந் தேனே. 68

மந்திரம் பெற்ற வழிமுறை மாலாங்கன்
இந்திரன் சோமன் பிரமன் உருத்திரன்
கந்துருக் காலாங்கி கஞ்ச மலையனோடு
இந்த எழுவரும் என்வழி யாமே. 69

நால்வரும் நாலு திசைக்கொன்று நாதர்கள்
நால்வரும் நானா விதப்பொருள் கைக்கொண்டு
நால்வரும் யான்பெற்ற தெல்லாம் பெறுகென
நால்வரும் தேவராய் நாதர் ஆனார்களே. 70

மொழிந்தது மூவர்க்கும் நால்வர்க்கும் ஈசன்
ஒழிந்த பெருமை இறப்பும் பிறப்பும்
செழுஞ்சுடர் மூன்றொளி யாகிய தேவன்
கழிந்த பெருமையைக் காட்டகி லானே. 71

எழுந்துநீர் பெய்யினும் எட்டுத் திசையுஞ்
செழுந்தண் நியமங்கள் செய்யுமின் என்றண்ணல்
கொழுந்தண் பவளக் குளிர்சடை யோடே
அழுந்திய நால்வர்க்கு அருள்புரிந் தானே.
72

 5. திருமூலர் வரலாறு
(ஆசிரியர் வரலாறு)


நந்தி திருவடி நான்தலை மேற்கொண்டு
புந்தியின் உள்ளே புகப்பெய்து போற்றிசெய்
தந்தி மதிபுனை அரனடி நாள்தொறும்
சிந்தைசெய் தாகமம் செப்பலுற் றேனே. 73

செப்புஞ் சிவாகமம் என்னும்அப் பேர்பெற்றும்
அப்படி நல்கும் அருள்நந்தி தாள்பெற்றுத்
தப்பிலா மன்றில் தனிக்கூத்துக் கண்டபின்
ஒப்பிலா எழுகோடி யுகமிருந் தேனே. 74

இருந்தஅக் காரணம் கேள்இந் திரனே
பொருந்திய செல்வப் புவனா பதியாம்
அருந்தவச் செல்வியைச் சேவித்து அடியேன்
பரிந்துடன் வந்தனன் பத்தியி னாலே. 75

சதாசிவந் தத்துவம் முத்தமிழ் வேதம்
மிதாசனி யாதிருந் தேன்இன்ற காலம்
இதாசனி யாதிருந் தேன்மனம் நீங்கி
உதாசனி யாதுடனே உணர்ந் தோமால். 76

மாலாங்க னேஇங்கு யான்வந்த காரணம்
நீலாங்க மேனியள் நோ஢ழை யாளொடு
மூலாங்க மாக மொழிந்த திருக்கூத்தின்
சீலாங்க வேதத்தைச் செப்பவந் தேனே. 77

நோ஢ழை யாவாள் நிரதிச யானந்தப்
பேருடை யாளென் பிறப்பறுத்து ஆண்டவள்
சீருடை யாள்சிவன் ஆவடு தண்டுறை
சீருடை யாள்பதம் சேர்ந்திருந் தேனே. 78

சேர்ந்திருந் தேன்சிவ மங்கைதன் பங்கனைச்
சேர்ந்திருந் தேன்சிவன் ஆவடு தண்டுறை
சேர்ந்திருந் தேன்சிவ போதியின் நீழலில்
சேர்ந்திருந் தேன்சிவன் நாமங்கள் ஓதியே. 79

இருந்தேன் இக்காயத்தே எண்ணிலி கோடி
இருந்தேன் இராப்பகல் அற்ற இடத்தே
இருந்தேன் இமையவர் ஏத்தும் பதத்தே
இருந்தேன் என்நந்தி இணையடிக் கீழே. 80

பின்னைநின்று என்னே பிறவி பெறுவது
முன்னைநன் றாக முயல்தவம் செய்கிலர்
என்னைநன் றாக இறைவன் படைத்தனன்
தன்னைநன் றாகத் தமிழ்செய்யு மாறே. 81

ஞானத் தலைவிதன் நந்தி நகர்புக்கு
ஊனமில் ஒன்பது கோடி யுகந்தனுள்
ஞானப்பா லாட்டி நாதனை அர்ச்சித்து
நானும் இருந்தேன்நற் போதியின் கீழே. 82

செல்கின்ற வாறறி சிவமுனி சித்தசன்
வெல்கின்ற ஞானத்து மிக்கேள் முனிவராய்ப்
பல்கின்ற தேவர் அசுரர்நரர் தம்பால்
ஒல்கின்ற வான்வழி யூடுவந் தானே. 83

சித்தத்தின் உள்ளே சிறக்கின்ற நூல்களில்
உத்தம மாகவே ஓதிய வேதத்தின்
ஒத்த உடலையும் உள்நின்ற உற்பத்தி
அத்தன் எனக்குஇங்கு அருளால் அளித்ததே. 84

யான்பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
தான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே. 85

பிறப்பிலி நாதனைப் பேர்நந்தி தன்னைச்
சிறப்பொடு வானவர் சென்றுகை கூப்பி
மறப்பிலர் நெஞ்சினுள் மந்திர மாலை
உறைப்பொடுங் கூடிநின்று ஓதலு மாமே. 86

அங்கிமி காமைவைத் தானுடல் வைத்தான்
எங்குமி காமைவைத் தான்உலகு ஏழையும்
தங்குமி காமைவைத் தான் தமிழ்ச் சாத்திரம்
பொங்கிமி காமைவைத் தான்பொருள் தானுமே. 87

அடிமுடி காண்பார் அயன்மால் இருவர்
படிகண் டிலர்மீண்டும் பார்மிசைக் கூடி
அடிகண் டிலேன் என்று அச்சுதன் சொல்ல
முடிகண்டேன் என்று அயன் பொய்மொழிந் தானே. 88

பெற்றமும் மானும் மழுவும் பிரிவற்ற
தற்பரன் கற்பனை யாகும் சராசரத்து
அற்றமும் நல்கி அடியேன் சிரத்தினில்
நற்பத முமளித் தானெங்கள் நந்தியே. 89

நேயத்தை ஞானத்தை ஞாதுரு வத்தினை
மாயத்தை மாமாயை தன்னில் வரும்பரை
ஆயத்தை யச்சிவன் தன்னை யாகோசர
வீயத்தை முற்றும் விளக்கியிட் டேனே. 90

விளக்கிப் பரமாகும் மெய்ஞ்ஞானச் சோதி
அளப்பில் பெருமையன் ஆனந்த நந்தி
துளக்கறும் ஆனந்தக் கூத்தன்சொற் போந்து
வளப்பில் கயிலை வழியில்வந் தேனே. 91

நந்தி அருளாலே மூலனை நாடிப்பின்
நந்தி அருளாலே சதாசிவன் ஆயினேன்
நந்தி அருளால்மெய்ஞானத்துள் நண்ணினேன்
நந்தி அருளாலே நானிருந் தேனே. 92

இருக்கில் இருக்கும் எண்ணிலி கோடி
அருக்கின்ற மூலத்துள் அங்கே இருக்கும்
அருக்கனும் சோமனும் ஆரழல் வீச
உருக்கிய ரோமம் ஒளிவிடுந் தானே. 93

பிதற்றுகின் றேனென்றும் பேர்நந்தி தன்னை
இயற்றுவன் நெஞ்சத்து இரவும் பகலும்
முயற்றுவன் ஓங்கொளி வண்ணன்எம் மானை
இயற்றிகழ் சோதி இறைவனு மாமே. 94

6. அவையடக்கம்

ஆரறி வார் எங்கள் அண்ணல் பெருமையை
யாரறி வார்இந்த அகலமும் நீளமும்
பேரறி யாத பெருஞ்சுடர் ஒன்றதின்
வேரறி யாமை விளம்புகின் றேனே. 95

பாடவல் லார்நெறி பாட அறிகிலேன்
ஆடவல் லார்நெறி ஆட அறிகிலேன்
நாடவல் லார்நெறி நாட அறிகிலேன்
தேடவல் லார்நெறி தேடகில் லேனே. 96

மன்னிய வாய்மொழி யாலும் மதித்தவர்
இன்னிசை உள்ளே எழுகின்ற ஈசனைப்
பின்னை உலகம் படைத்த பிரமனும்
உன்னும் அவனை உணரலு மாமே. 97

தத்துவ ஞானம் உரைத்தது தாழ்வரை
முத்திக்கு இருந்த முனிவரும் தேவரும்
இத்துடன் வேறா இருந்து துதிசெயும்
பத்திமை யால் இப் பயனறி யாரே. 98

7. திருமந்திரத் தொகைச் சிறப்பு

மூலன் உரைசெய்த மூவா யிரந்தமிழ்
ஞாலம் அறியவே நந்தி அருளது
காலை எழுந்து கருத்தறிந் தோதிடின்
ஞாலத் தலைவனை நண்ணுவர் அன்றே. 99

வைத்த பரிசே வகைவகை நன்னூலின்
முத்தி முடிவிது மூவா யிரத்திலே
புத்திசெய் பூர்வத்து மூவா யிரம்பொது
வைத்த சிறப்புத் தருமிவை தானே. 100

8. குரு மட வரலாறு

வந்த மடம்ஏழும் மன்னும்சன் மார்க்கத்தின்
முந்தி உதிக்கின்ற மூலன் மடம்வரை
தந்திரம் ஒன்பது சார்வுமூ வாயிரம்
சுந்தர ஆகமச் சொல்மொழிந் தானே. 101

கலந்தருள் காலாங்கர் தம்பால்அ கோரர்
நலந்தரு மாளிகைத் தேவர்நா தாந்தர்
புலங்கொள் பரமானந் தர்போக தேவர்
நிலந்திகழ் மூவர் நிராமயத் தோரே. 102

9. திரு மும்மூர்த்திகளின் முறைமை

அளவில் இளமையும் அந்தமும் ஈறும்
அளவியல் காலமும் நாலும் உணா஢ல்
தளர்விலன் சங்கரன் தன்னடி யார்சொல்
அளவில் பெருமை அரியயற் காமே. 103

ஆதிப் பிரானும் அணிமணி வண்ணனும்
ஆதிக் கமலத்து அலர்மிசை யானும்
சோதிக்கில் மூன்றும் தொடர்ச்சியில் ஒன்றெனார்
பேதித் துலகம் பிணங்குகின் றார்களே. 1104

ஈசன் இருக்கும் இருவினைககு அப்புறம்
பீசம் உலகல் பெருந்தெய்வம் ஆனது
ஈசன் அதுஇது என்பார் நினைப்பிலார்
தூசு பிடித்தவர் தூரறிந் தார்களே. 105

சிவன்முதல் மூவரோடு ஐவர் சிறந்த
அவைமுதல் ஆறிரண்டு ஒன்றோடு ஒன் றாகும்
அவைமுதல் விந்துவும் நாதமும் ஓங்கச்.106

பயன் அறிந்து அவ்வழி எண்ணும் அளவில்
அயனொடு மால்நமககு அன்னியம் இல்லை
நயனங்கள் மூன்றுடை நந்தி தமராம். 107

ஓலக்கம் சூழ்ந்த உலப்பிலி தேவர்கள்
பாலொத்த மேனி பணிந்தடி யேன் தொழ
மாலுக்கும் ஆதிப் பிரமற்கும் ஒப்புநீ
ஞாலத்து நம்மடி நல்கிடுஎன் றானே. 108

வானவர் என்றும் மனிதர் இவர் என்றும்
தேனமர் கொன்றைச் சிவனருள் அல்லது
தானமர்ந்து ஓரும் தனித்தெய்வம் மற்றில்லை
ஊனமர்ந் தோரை உணர்வது தானே. 109

சோதித்த பேரொளி மூன்று ஐந்து எனநின்ற
ஆதிக்கண் ஆவது அறிகிலர் ஆதர்கள்
நீதிக்கண் ஈசன் நெடுமால் அயனென்று
பேதித் தவரைப் பிதற்றுகின் றாரே. 110

பரத்திலே ஒன்றாய் உள் ளாய்ப்புற மாகி
வரத்தினுள் மாயவ னாய்அய னாகித்
தரத்தினுள் தான்பல தன்மைய னாகிக்
கரத்தினுள் நின்று கழிவுசெய் தானே. 111

தானொரு கூறு சதாசிவன் எம்மிறை
வானொரு கூறு மருவியும் அங்குளான்
கோனொரு கூறுஉடல் உள்நின்று உயிர்க்கின்ற
தானொரு கூறு சலமய னாமே. 112

பாயிரம் முற்றிற்று
10ம் திருமுறை
திருமந்திரம் (திருமூலர் அருளியது)
முதல் தந்திரம் (113 - 336)
1. உபதேசம்

விண்ணின்று இழிந்து வினைக்கீடாய் மெய்க்கொண்டு
தண்ணின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து
உண்ணின்று உருக்கியோர் ஒப்பிலா ஆனந்தக்
கண்ணின்று காட்டிக் களிம்பறுத் தானே. 113

களிம்பறுத் தான்எங்கள் கண்ணுதல் நந்தி
களிம்பறுத் தான்அருள் கண்விழிப் பித்துக்
களிம்பணு காத கதிரொளி காட்டிப்
பளிங்கிற் பவளம் பதித்தான் பதியே.114

பதிபசு பாசம் எனப்பகர் மூன்றில்
பதியினைப் போற்பசு பாசம் அனாதி
பதியினைச் சென்றணு காப்பசு பாசம்
பதியணு கிற்பசு பாசம் நில் லாவே. 115

வேயின் எழுங்கனல் போலேஇம் மெய்யெனும்
கோயி லிருந்து குடிகொண்ட கோன்நந்தி
தாயினும் மும்மலம் மாற்றித் தயாஎன்னும்
தோயம தாய் எழுஞ் சூரிய னாமே. 116

சூரிய காந்தமும் சூழ்பஞ்சும் போலவே
சூரிய காந்தம் சூழ்பஞ்சைச் சுட்டிடா
சூரியன் சந்நிதி யிற்சுடு மாறுபோல்
சூரியன் தோற்றமுன் அற்ற மலங்களே. 117

மலங்கள்ஐந் தாமென மாற்றி அருளித்
தலங்கள்ஐந் தானற் சதாசிவ மான
புலங்களைந் தான்அப் பொதுவினுள் நந்தி
நலங்களைந் தான்உள் நயந்தான் அறிந்தே. 118

அறிவுஐம் புலனுட னேநான் றதாகி
நெறியறி யாதுற்ற நீர்ஆழம் போல
அறிவுஅறி வுள்ளே அழிந்தது போலக்
குறியறி விப்பான் குருபர னாமே. 119

ஆமேவு பால்நீர் பிரிக்கின்ற அன்னம்போல்
தாமே தனிமன்றில் தன்னந் தனிநித்தம்
தீமேவு பல்கர ணங்களுள் உற்றன
தாமேழ் பிறப்பெரி சார்ந்தவித் தாமே. 120

வித்தைக் கெடுத்து வியாக்கிரத் தேமிகச்
சுத்தத் துரியம் பிறந்து துடக்கற
ஒத்துப் புலனுயிர் ஒன்றாய் உடம்பொடு
செத்திட் டிருப்பார் சிவயோகி யார்களே. 121

சிவயோக மாவது சித்தசித் தென்று
தவயோகத் துள்புக்குத் தன்னொளி தானாய்
அவயோகஞ் சாராது அவன்பதி போக
நவயோக நந்தி நமக்களித் தானே. 122

அளித்தான் உலகெங்கும் தானான உண்மை
அளித்தான் அமரர் அறியா உலகம்
அளித்தான் திருமன்றுள் ஆடுந் திருத்தாள்
அளித்தான் போ஢ன்பத்து அருள்வெளி தானே. 123

வெளியில் வெளிபோய் விரவிய வாறும்
அளியில் அளிபோய் அடங்கிய வாறும்
ஒளியில் ஒளிபோய் ஒடுங்கிய வாறும்
தெளியும் அவரே சிவ சித்தர் தாமே. 124

சித்தர் சிவலோகம் இங்கே தரிசித்தோர்
சத்தமும் சத்த முடிவுந்தம் முள்கொண்டோர்
நித்தர் நிமலர் நிராமயர் நீள்பர
முத்தர்தம் முத்தி முதல்முப்பத் தாறே. 125

முப்பதும் ஆறும் படிமுத்தி ஏணியாய்
ஒப்பிலா ஆனந்தத் துள்ளொளி புக்குச்
செப்ப அரிய சிவங்கண்டு தான்தெளிந்து
அப்பரி சாக அமர்ந்திருந் தாரே. 126

இருந்தார் சிவமாகி எங்குந் தாமாகி
இருந்தார் சிவன்செயல் யாவையும் நோக்கி
இருந்தார் முக்காலத்து இயல்பைக் குறித்தங்கு
இருந்தார் இழவுவந்து எய்திய சோம்பே. 127

சோம்பர் இருப்பது சுத்த வெளியிலே
சோம்பர் கிடப்பதும் சுத்த வெளியிலே
சோம்பர் உணர்வு சுருதி முடிந்திடஞ்
சோம்பர் கண் டார்அச் சுருதிக்கண் தூக்கமே. 128

தூங்கிக்கண் டார்சிவ லோகமும் தம்முள்ளே
தூங்கிக்கண் டார்சிவ யோகமும் தம்முள்ளே
தூங்கிக்கண் டார்சிவ போகமும் தம்முள்ளே
தூங்கிக்கண் டார்நிலை சொல்வதெவ் வாறே. 129

எவ்வாறு காண்பான் அறிவு தனக்கெல்லை
அவ்வாறு அருட்செய்வன் ஆதிஅரன் தானும்
ஒவ்வாத மன்றுள் உமைகாண ஆடிடும்
செவ்வானிற் செய்ய செழுஞ்சுடர் மாணிக்கமே. 130

மாணிக்கத் துள்ளே மரகதச் சோதியாய்
மாணிக்கத் துள்ளே மரகத மாடமாய்
ஆணிப்பொன் மன்றில் ஆடுந் திருக்கூத்தைப்
பேணித் தொழுதென்ன பேறுபெற் றாரே. 131

பெற்றார் உலகிற் பிரியாப் பெருநெறி
பெற்றார் உலகிற் பிறவாப் பெரும்பயன்
பெற்றார் அம்மன்றில் பிரியாப் பெரும்பேறு
பெற்றார் உலகுடன் பேசாப் பெருமையே. 132

பெருமை சிறுமை அறிந்தெம் பிரான்போல்
அருமை எளிமை அறிந்தறி வார்ஆர்
ஒருமையுள் ஆமைபோல் உள்ஐந்து அடக்கி
இருமையுங் கேட்டிருந் தார்புரை அற்றே. 133

புரைஅற்ற பாலினுள் நெய்கலந் தாற்போல்
திரைஅற்ற சிந்தைநல் ஆரியன் செப்பும்
உரையற்று உணர்வோர் உடம்பிங்கு ஒழிந்தால்
கரையற்ற சோதி கலந்தசத் தாமே. 134

சத்த முதல் ஐந்துந் தன்வழித் தான்சாரில்
சித்துக்குச் சித்தன்றி சேர்விடம் வேறுண்டோ
சுத்த வெளியிற் சுடா஢ற் சுடர்சேரும்
அத்தம் இதுகுறித் தாண்டுகொள் அப்பிலே.135

அப்பினில் கூர்மை ஆதித்தன் வெம்மையால்
உப்பெனப் பேர்ப்பெற்று உருச்செய்த அவ்வுரு
அப்பினிற் கூடிய தொன்றாகு மாறுபோல்
செப்பினிற் சீவன் சிவத்துள் அடங்குமே. 136

அடங்குபேர் அண்டத்து அணுஅண்டம் சென்றங்கு
இடங்கொண்டது இல்லை இதுவன்றி வேறுண்டோ
கடந்தொறும் நின்ற உயிர்க்கரை காணில்
திடம்பெற நின்றான் திருவடி தானே. 137

திருவடி யேசிவ மாவது தோ஢ல்
திருவடி யேசிவ லோகஞ்சிந் திக்கில்
திருவடி யேசெல் கதியது செப்பில்
திருவடி யேதஞ்சம் உள்தெளி வார்க்கே. 138

தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே. 139

தானே புலன்ஐந்துந் தன்வசம் ஆயிடும்
தானே புலன்ஐந்துந் தன்வசம் போயிடும்
தானே புலன்ஐந்துந் தன்னில் மடைமாறும்
தானே தனித்துஎம் பிரான்தனைச் சந்தித்தே. 140

சந்திப் பதுநந்தி தன்திருத் தாளிணை
சிந்திப் பதுநந்தி செய்ய திருமேனி
வந்திப் பதுநந்தி நாமம்இன் வாய்மையால்
புந்திக்குள் நிற்பது நந்திபொற் பாதமே. 141

போதந் தரும்எங்கள் புண்ணிய நந்தியைப்
போதந் தனில்வைத்துப் புண்ணியர் ஆயினார்
நாதன் நடத்தால் நயனங் களிகூர
வேதந் துதித்திடப் போயடைந்தார் விண்ணே. 142

2. யாக்கை நிலையாமை

மண்ணொன்று கண்டீர் இருவகைப் பாத்திரம்
திண்ணென்று இருந்தது தீவினைச் சேர்ந்தது
விண்ணின்று நீர்விழின் மீண்டுமண் ணானார்ப்போல்
எண்ணின்றி மாந்தர் இறக்கின்ற வாறே. 143

பண்டம்பெய் கூரை பழகி விழுந்தக்கால்
உண்ட அப் பெண்டிரும் மக்களும் பின்செலார்
கொண்ட விரதமும் ஞானமும் அல்லது
மண்டி அவருடன் வழிநட வாதே. 144

ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
போ஢னை நீக்கிப் பிணமென்று போ஢ட்டுச்
சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே. 145

காலும் இரண்டு முகட்டலகு ஒன்றுள
பாலுள் பருங்கழி முப்பத் திரண்டுள
மேலுள கூரை பிரியும் பிரிந்தால்முன்
போலுயிர் மீளப் புக அறி யாதே. 146

சீக்கை விளைந்தது செய்வினை மூட்டிற்ற
ஆக்கை பிரிந்தது அலகு பழுத்தது
மூக்கினிற் கைவைத்து மூடிட்டுக் கொண்டுபோய்க்
காக்கைக் குப்பலி காட்டிய வாறே. 147

அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்
மடக்கொடி யாரொடு மந்தணங் கொண்டார்
இடப்பக்க மேஇறை நொந்தது என்றார்
கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந் தாரே. 148

மன்றத்தே நம்பி மாடம் எடுத்தது
மன்றத்தே நம்பி சிவிகைபெற் றேறினான்
மன்றத்தே நம்பி முக்கோடி வழங்கினான்
சென்றத்தா என்னத் திரிந்திலன் தானே. 149

வாசந்தி பேசி மணம்புணர்ந்து அப்பதி
நேசந் தெவிட்டி நினைப்பொழி வார்பின்னை
ஆசந்தி மேல்வைத்து அமைய அழுதிட்டுப்
பாசந்தீச் சுட்டுப் பலியட்டி னார்களே. 150


கைவிட்டு நாடிக் கருத்தழிந் தச்சற
நெய்யட்டிச் சோறுண்ணும் ஐவரும் போயினார்
மையிட்ட கண்ணாளும் மாடும் இருக்கவே
மெய்விட்டுப் போக விடைகொள்ளு மாறே. 151.


பந்தல் பிரிந்தது பண்டாரங் கட்டற்ற
ஒன்பது வாசலும் ஒக்க அடைத்தன
துன்புறு காலந் துரிசுவர மேன்மேல்
அன்புடை யார்கள் அழுதகன் றார்களே. 152.

நாட்டுக்கு நாயகன் நம்மூர்த் தலைமகன்
காட்டுச் சிவிகையொன்று ஏறிக் கடைமுறை
நாட்டார்கள் பின்செல்ல முன்னே பறைகொட்ட
நாட்டுக்கு நம்பி நடக்கின்ற வாறே. 153

முப்பதும் முப்பதும் முப்பத் தறுவரும்
செப்ப மதிளுடைக் கோயிலுள் வாழ்பவர்
செப்ப மதிலுடைக் கோயில் சிதைந்தபின்
ஒப்ப அனைவரும் ஓட்டெடுத் தார்களே. 154.

மதுவூர் குழலியும் மாடும் மனையும்
இதுவூர் ஒழிய இதணம் தேறிப்
பொதுவூர் புறஞ்சுடு காடது நோக்கி
மதுவூர வாங்கியே வைத்தகன் றார்களே. 155.

வைச்சகல் வுற்றது கண்டு மனிதர்கள்
அச்சக லாதென நாடும் அரும்பொருள்
பிச்சது வாய்ப்பின் தொடர்வுறு மற்றவர்
எச்சக லாநின் றிளைக்கின்ற வாறே. 156.

ஆர்த்தெழு சுற்றமும் பெண்டிரும் மக்களும்
ஊர்த்துறைக் காலே ஒழிவர் ஒழிந்தபின்
வேர்த்தலை போக்கி விறகிட்கு எரிமூட்டி
நீர்த்தலை மூழ்குவர் நீதியி லோரே. 157.
.
வளத்திடை முற்றத்தோர் மாநிலம் முற்றுங்
குளத்தின் மண்கொண்டு குயவன் வனைந்தான்
குடமுடைந் தால் அவை ஓடென்று வைப்பர்
உடலுடைந் தால்இறைப் போதும் வையாரே. 158

ஐந்து தலைப்பறி ஆறு சடையுள
சந்தவை முப்பது சார்வு பதினெட்டுப்
பந்தலும் ஒன்பது பந்தி பதினைந்து
வெந்து கிடந்தது மேலறி யோமே. 159.

அத்திப் பழமும் அறைக்கீரை நல்வித்தும்
கொத்தி உலைபெய்து கூழட்டு வைத்தனர்
அத்திப் பழத்தை அறைக்கீரை வித்துண்ணக்
கத்தி எடுத்தவர் காடுபுக் காரே. 160.

மேலும் முகடில்லை கீழும் வடிம்பில்லை
காலும் இரண்டு முகட்டலக் கொன்றுண்டு
ஓலையான் மேய்ந்தவர் ஊடு வா஢யாமை
வேலையான் மேய்ந்ததோர் வெள்ளித் தளிகையே. 161.

கூடம் கிடந்தது கோலங்கள் இங்கில்லை
ஆடும் இலையமும் அற்றது அறுதலும்
பாடுகின் றார்சிலர் பண்ணில் அழுதிட்டுத்
தேடிய தீயினில் தீயவைத் தார்க்களே. 162.

முட்டை பிறந்தது முந்_று நாளினில்
இட்டது தானிலை ஏதேனும் ஏழைகாள்
பட்டது பார்மணம் பன்னிரண்டி ஆண்டினில்
கெட்டது எழுபதில் கேடறி யீரே. 163.

இடிஞ்சில் இருக்க விளக்கொ஢ கொண்டான்
முடிஞ்ச தறியார் முழங்குவர் மூடர்
விடிஞ்சுஇரு ளாவது அறியா உலகம்
படிஞ்சு கிடந்து பதைக்கின்ற வாறே. 164.

மடல்விரி கொன்றையன் மாயன் படைத்த
உடலும் உயிரும் உருவந் தொழாமல்
இடர்ப்படந்து ஏழா நரகிற் கிடப்பர்
குடர்ப்பட வெந்தமர் கூப்பிடு மாறே. 165.

குடையும் குதிரையும் கொற்றவா ளுங்கொண்டு
இடையும்அக் காலம் இருந்தது நடுவே
புடையு மனிதனார் போக்கும்அப் போதே
அடையும் இடம்வலம் ஆருயி ராமே. 166.

காக்கை கவா஢லென் கண்டார் பழிக்கிலென்
பாற்றுளி பெய்யிலென் பல்லோர் பழிச்சிலென்
தோற்பையுள் நின்று தொழிலறச் செய்தூட்டுங்
கூத்தன் புறப்பட்டுப் போன இக்கூட்டையே. 167.

3.
செல்வம் நிலையாமை

அருளும் அரசனும் ஆனையம் தேரும்
பொருளும் பிறர்கொள்ளப் போவதன் முன்னம்
தெருளும் உயிரொடும் செல்வனைச் சோ஢ன்
மருளும் பினையவன் மாதவ மன்றே. 168.

இயக்குறு திங்கள் இரும்பிழப்பு ஒக்கும்
துயக்குறு செல்வத்தைச் சொல்லவும் வேண்டா
மயக்கற நாடுமின் வானவர் கோனைப்
பெயற்கொண்டல் போலப் பெருஞ்செல்வ மாமே. 169.

தன்னது சாயை தனக்குத வாதுகண்டு
என்னது மாடென்று இருப்பர்கள் ஏழைகள்
உன்னுயிர் போம்உடல் ஒக்கப் பிறந்தது
கண்ணது காணொளி கண்டுகொ ளீரே. 170.

ஈட்டிய தேன்பூ மணங்கண் டிரதமும்
கூட்டிக் கொணர்ந்தொரு கொம்பிடை வைத்திடும்
ஓட்டித் துரந்திட்டு அதுவலி யார்கொளக்
காட்டிக் கொடுத்தது கைவிட்ட வாறே. 171.

தேற்றத் தெளிமின் தெளிந்தீர் கலங்கன்மின்
ஆற்றுப் பெருக்கிற் கலக்கி மலக்காதே
மாற்றிக் களைவீர் மறுத்துங்கள் செல்வத்தைக்
கூற்றன் வருங்கால் குதிக்கலு மாமே. 172.

மகிழ்கின்ற செல்வமும் மாடும் உடனே
கவிழ்கின்ற நீர்மிசைச் செல்லும் கலம்போல்
அவிழ்கின்ற ஆக்கைக்கோர் வீடுபே றாகச்
சிமிழொன்று வைத்தமை தேர்ந்தறி யாரே. 173.

வாழ்வும் மனைவியும் மக்கள் உடன்பிறந்
தாரும் அளவு ஏது எமக்கென்பர் ஒண்பொருள்
மேவும் அதனை விரிவுசெய் வார்கட்குக்
கூவும் துணையொன்று கூடலு மாமே. 174.

வேட்கை மிகுத்தது மெய்கொள்வார் இங்கிலை
பூட்டுந் தறியொன்று போம்வழி ஒன்பது
நாட்டிய தாய்தமர் வந்து வணங்கிப்பின்
காட்டிக் கொடுத்தவர் கைவிட்ட வாறே. 175.

உடம்போடு உயிரிடை விட்டோ டும் போது
அடும்பரிசு ஒன்றில்லை அண்ணலை எண்ணும்
விடும்பரி சாய்நின்ற மெய்ந்நமன் தூதர்
சுடும்பரி சத்தையுஞ் சூழகி லாரே. 176.

4.
இளமை நிலையாமை

கிழக்கெழுந்த் தோடிய ஞாயிறு மேற்கே
விழக்கண்டும் தேறார் விழியிலா மாந்தர்
குழக்கன்று மூத்தெரு தாய்ச்சில நாளில்
விழக்கண்டும் தேறார் வியனுல கோரே. 177.

ஆண்டு பலவுங் கழிந்தன அப்பனைப்
பூண்டுகொண் டாரும் புகுந்தறி வாரில்லை
நீண்டன காலங்கள் நீண்டு கொடுக்கினும்
தூண்டு விளக்கின் சுடரறி யாரே. 178.

தேய்ந்தற் றொழிந்த இளமை கடைமுறை
ஆய்ந்தற்ற பின்னை அரிய கருமங்கள்
பாய்ந்தற்ற கங்கைப் படர்சடை நந்தியை
ஓர்ந்துற்று கொள்ளும் உயிருள்ள போதே. 179.

விரும்புவர் முன்என்னை மெல்லியன் மாதர்
கரும்பு தகர்த்துக் கடைக்கொண்ட நீர்போல்
அரும்பொத்த மென்முலை ஆயிழை யார்க்கும்
கரும்பொத்துக் காஞ்சிரங் காயுமொத் தேனே. 180.

பாலன் இளையன் விருத்தன் எனநின்ற
காலங் கழிவன கண்டும் அறிகிலார்
ஞாலம்கடந்து அண்டம் ஊடறுத் தான்அடி
மேலுங் கிடந்து விரும்புவன் நானே. 181.

காலை ஏழுந்தவர் நித்தலும் நித்தலும்
மாலை படுவதும் வாணாள் கழிவதும்
சாலும்அவ் ஈசன் சலவிய னாகிலும்
ஏல நினைப்பவர்ககு இன்பம்செய் தானே. 182.

பருவூசி ஐந்துமோர் பையினுள் வாழும்
பருவூசி ஐந்தும் பறக்கும் விருகம்
பருவூசி ஐந்தும் பனித்தலைப் பட்டால்
பருவூசிப் பையும் பறக்கின்ற வாறே. 183.

கண்ணதும் காய்கதி ரோனும் உலகினை
உண்ணின்று அளக்கின்றது ஒன்றும் அறிகிலார்
விண்ணுறு வாரையும் வினையுறு வாரையும்
எண்ணுறும் முப்பதில் ஈர்ந்தொழிந் தாரே. 184.

ஒன்றிய ஈரெண் கலையும் உடனுற
நின்றது கண்டு நினைக்கிலர் நீசர்கள்
கன்றிய காலன் கருக்குழி வைத்தபின்
சென்றதில் வீழ்வர் திகைப்பொழி யாரே. 185.

எய்திய நாளில் இளமை கழியாமை
எய்திய நாளில் இசையினால் ஏத்துமின்
எய்திய நாளில் எறிவ து அறியாமல்
எய்திய நாளில் இருந்துகண் டேனே. 186.

5.
உயிர் நிலையாமை

தழைக்கின்ற செந்தளிர்த் தண்மலர்க் கொம்பில்
இழைக்கின்றது எல்லாம் இறக்கின்ற கண்டும்
பிழைப்பின்றி எம்பெரு மானடி ஏத்தார்
அழைக்கின்ற போதுஅறி யாரவர் தாமே. 187.

ஐவர்க்கு ஒருசெய் விளைந்து கிடந்தது
ஐவரும் அச்செய்யைக் காத்து வருவர்கள்
ஐவர்க்கு நாயகன் ஓலை வருதலால்
ஐவரும் அச்செய்யைக் காவல் விட்டாரே. 188.

மத்தளி ஒன்றுள தாளம் இரண்டுள
அத்துள்ளே வாழும் அரசனும் அங்குளன்
அத்துள்ளெ வாழும் அரசன் புறப்பட்டால்
மத்தளி மண்ணாய் மயங்கிய வாறே. 189.

வேங்கட நாதனை வேதாந்தக் கூத்தனை
வேங்கடத் துள்ளே விளையாடு நந்தியை
வேங்கடம் என்றே விரகுஅறி யாதவர்
தாங்கவல் லாருயிர் தாமறி யாரே. 190.

சென்றுணர் வாந்திசை பத்துந் திவாகரன்
அன்றுணர் வால் அளக் கின்ற தறிகிலர்
நின்றுண ரார்இந் நிலத்தின் மனிதர்கள்
பொன்றுணர் வாரிற் புணர்க்கின்ற மாயமே. 191.

மாறு திருத்தி வரம்பிட்ட பட்டிகை
பீறும் அதனைப் பெரிதுணர்ந் தாரிலை
கூறும் கருமயிர் வெண்மயி ராவது
ஈறும் பிறப்புமொ ராண்டெனும் நீரே. 192.

துடுப்பிடு பானைக்கும் ஒன்றே அரிசி
அடுப்பிடு மூன்றிற்கும் அஞ்சொ஢ கொள்ளி
அடுத்தொ஢ யாமற் கொடுமின் அரிசி
விடுத்தன நாள்களும் மேற்சென் றனவே. 193.

இன்புறு வண்டிங்கு இனமலர் மேற்போய்
உண்பது வாச மதுபோல் உயிர்நிலை
இன்புற நாடி நினைக்கிலும் மூன்றொளி
கண்புற நின்ற கருத்துள்நில் லானே. 194.

ஆம்விதி நாடி அறஞ்செய்மின் அந்நிலம்
போம்விதி நாடிப் புனிதனைப் போற்றுமின்
நாம்விதி வேண்டும் அதென்சொலின் மானிடர்
ஆம்விதி பெற்ற அருமைவல் லார்க்கே. 195.

அவ்வியம் பேசி அறங்கெட நில்லன்மின்
வெவ்விய னாகிப் பிறர்ப்பொருள் வவ்வன்மின்
செவ்விய னாகிச் சிறந்துண்ணும் போதொரு
தவ்விகொ டுண்மின் தலைப்பட்ட போதே. 196.

6.
கொல்லாமை

பற்றாய நற்குரு பூசைக்கும் பன்மலர்
மற்றோர் அணுக்களைக் கொல்லாமை ஒண்மலர்
நற்றார் நடுக்கற்ற தீபமும் சித்தமும்
உற்றாரும் ஆவி அமர்ந்திடம் உச்சியே. 197.

கொல்லிடு குத்தென்று கூறிய மாக்களை
வல்லடிக் காரர் வலிக்கயிற் றாற்கட்டிச்
செல்லிடு நில்லென்று தீவாய் நரகிடை
நில்லிடும் என்று நிறுத்துவர் தாமே, 198.

7.
புலால் மறுத்தல்

பொல்லாப் புலாலை நுகரும் புலையரை
எல்லாரும் காண இயமன்றன் தூதுவர்
செல்லாகப் பற்றித் தீவாய் நரகத்தில்
மல்லாக்கத் தள்ளி முறித்துவைப் பாரே. 199.

கொலையே களவுகள் காமம் பொய்கூறல்
மலைவான பாதகமாம் அவை நீக்கித்
தலையாம் சிவனடி சார்ந்தின்பம் சார்ந்தோர்க்கு
இலையாம் இவைஞானா னந்தத் திருத்தலே. 200.

8.
பிறன்மனை நயவாமை

ஆத்த மனையாள் அகத்தில் இருக்கவே
காத்த மனையாளைக் காமுறுங் காளையர்
காய்ச்ச பலாவின் கனியுண்ண மாட்டாமல்
ஈச்சம் பழத்துக்கு இடருற்ற வாறே. 201.

திருத்தி வளர்த்ததோர் தேமாங் கனியை
அருத்தமென் றெண்ணி அறையில் புதைத்துப்
பொருத்தம் இலாத புளிமாங் கொம்பேறிக்
கருத்தறி யாதவர் காலற்ற வாறே. 202.

பொருள்கொண்ட கண்டனும் போதத்தை யாளும்
இருள்கொண்ட மின்வெளி கொண்டுநின் றோரும்
மருள்கொணட மாதர் மயலுறு வார்கள்
மருள்கொண்ட சிந்தையை மாற்றகில் லாரே. 203.

9.
மகளிர் இழிவு

இலைநல வாயினும் எட்டி பழுத்தால்
குலைநல வாங்கனி கொண்டுண லாகா
முலைநலங் கொண்டு முறுவல்செய் வார்மேல்
விலகுறு நெஞ்சினை வெய்துகொள் ளீரே. 204.

மனைபுகு வார்கள் மனைவியை நாடில்
சுனைபுகு நீர்போல் சுழித்துடன் வாங்கும்
கனவது போலக் கசிந்தெழும் இன்பம்
நனவது போலவும் நாடவொண் ணாதே. 205.

இயலுறும் வாழ்க்கை இளம்பிடி மாதர்
புயலுறும் புல்லின் புணர்ந்தவ ரேயினும்
மயலுறும் வானவர் சாரஇரும் என்பார்
அயலுறப் பேசி அகன்றொழிந் தாரே. 206.

வையகத் தேமட வாரொடும் கூடியென்
மெய்யகத் தோடும் வைத்த விதியது
கையகத் தேகரும் பாலையின் சாறுகொள்
மெய்யகத் தேபெரு வேம்பது வாமே. 207.

கோழை ஒழுக்கம் குளமூடு பாசியில்
ஆழ நடுவர் அளப்புறு வார்களைத்
தாழத் துடக்கித் தடுக்ககில் லாவிடில்
பூழை நுழைந்தவர் போகின்ற வாறே. 208.


10.
நல்குரவு

புடைவை கிழிந்தது போயிற்று வாழ்க்கை
அடையப்பட் டார்களும் அன்பில ராயினார்
கொடையில்லை கோளில்லை கொண்டாட்ட மில்லை
நடையில்லை நாட்டில் இயங்குகின் றார்கட்கே. 209.

பொய்க்குழி தூர்ப்பான் புலா஢ புலருதென்று
அக்குழி தூர்க்கும் அரும்பண்டம் தேடுவீர்
எக்குழி தூர்த்தும் இறைவனை ஏத்துமின்
அக்குழி தூரும் அழுக்கற்ற போதே. 210.

கற்குழி தூரக் கனகமும் தேடுவர்
அக்குழி தூர்க்கை யாவர்க்கும் அரியது
அக்குழி தூர்க்கும் அறிவை அறிந்தபின்
அக்குழி தூரும் அழுக்கற்ற வாறே. 211.

தொடர்ந்தெழு சுற்றம் வினையினுந் தீய
கடந்தோர் ஆவி கழிவதன் முன்னே
உடந்தொரு காலத்து உணர்விளக்கு ஏற்றித்
தொடர்ந்துநின்று அவ்வழி தூர்க்கலு ம் ஆமே. 212.

அறுத்தன ஆறினும் ஆனினம் மேவி
அறுத்தனர் ஐவரும் எண்ணிலி துன்பம்
ஒறுத்தன வல்வினை ஒன்றல்ல வாழ்வை
வெறுத்தனன் ஈசனை வேண்டிநின் றானே. 213.

11.
அக்கினி காரியம்

வசையில் விழுப்பொருள் வானும் நிலனும்
திசையும் திசைபெறு தேவர் குழாமும்
விசையும் பெருகிய வேத முதலாம்
அசைவிலா அந்தணர் ஆகுதி வேட்கிலே. 214.

ஆகுதி வேட்கும் அருமறை அந்தணர்
போகதி நாடிப் புறங்கொடுத்து உண்ணுவர்
தாம்விதி வேண்டித் தலைப்படு மெய்ந்நெறி
தாமறி வாலே தலைப்பட்ட வாறே. 215.

அணைதுணை அந்தணர் அங்கியுள் அங்கி
அணைதுணை வைத்ததின் உட்பொரு ளான
இணைதுணை யாமத்து இயங்கும் பொழுது
துணையணை யாயதோர் தூய்நெறி யாமே. 216.

போதிரண் டோ திப் புரிந்தருள் செய்திட்டு
மாதிரண் டாகி மகிழ்ந்துட னேநிற்குந்
தாதிரண் டாகிய தண்ணம் பறவைகள்
வேதிரண் டாகி வெறிக்கின்ற வாறே. 217.

நெய்நின்று எரியும் நெடுஞ்சுட ரேசென்று
மைநின்று எரியும் வகையறி வார்க்கட்கு
மைநின்று அவிழ்தரும் அத்தின மாம் என்றும்
செய்நின்ற செல்வம் தீயது வாமே. 218.

பாழி அகலும் எரியும் திரிபோலிட்டு
ஊழி அகலும் உறுவினை நோய்பல
வாழிசெய்து அங்கி உதிக்க அவைவிழும்
வீழிசெய்து அங்கி வினைசுடு மாமே. 219.

பெருஞ்செல்வம் கேடென்று முன்னே படைத்த
வருஞ்செல்வம் தந்த தலைவனை நாடும்
வருஞ்செல்வதது இன்பம் வரஇருந் தெண்ணி
அருஞ்செல்வத்து ஆகுதி வேட்கநின் றாரே. 220.

ஒண்சுட ரானை உலப்பிலி நாதனை
ஒண்சுட ராகிஎன் உள்ளத்து இருக்கின்ற
கண்சுட ரோன் உலகு ஏழும் கடந்த அத்
தண்சுடர் ஓமத் தலைவனு மாமே. 221.

ஓமத்துள் அங்கியின் உள்ளுளன் எம்மிறை
ஈமத்துள் அங்கி இரதங்கொள் வானுளன்
வேமத்துள் அங்கி விளைவு வினைக்கடல்
கோமத்துள் அங்கி குரைகடல் தானே. 222.

அங்கி நிறுத்தும் அருந்தவர் ஆரணத்
தங்கி இருக்கும் வகையருள்செய்தவர்
எங்கும் நிறுத்தி இளைப்பப் பெரும்பதி
பொங்கி நிறுத்தும் புகழது வாமே. 223.

12.
அந்தண ரொழுக்கம்

அந்தணர் ஆவோர் அறுதொழில் பூண்டுளோர்
செந்தழல் ஓம்பிமுப் போதும் நியமஞ்செய்
தந்தவ நற்கரு மத்துநின்று ஆங்கிட்டுச்
சந்தியும் ஓதிச் சடங்கறுப் போர்களே. 224.

வேதாந்தங் கேட்க விருப்பொடு முப்பதப்
போதாந்த மான பிரணவத் துள்புக்கு
நாதாந்த வேதாந்த போதாந்த நாதனை
ஈதாந்தம் எனாதுகண்டு இன்புறு வோர்களே. 225.
காயத் திரியே கருதுசா வித்திரி

ஆய்தற்கு உவப்பர் மந்திரம் ஆங்கு உன்னி
நேயத் தேரேறி நினைவுற்று நேயத்தாய்
மாயத்துள் தோயா மறையோர்கள் தாமே. 226.

பெருநெறி யான பிரணவம் ஓர்ந்து
குருநெறி யாலுரை கூடிநால் வேதத்
திருநெறி யான கிரியை யிருந்து
சொரூபமது ஆனோர் துகளில்பார்ப் பாரே. 227.

சத்திய மும்தவம் தானவன் ஆதலும்
எய்த்தரும் இந்தியம் ஈட்டியே வாட்டலும்
ஒத்த உயிர்கள் உண்டா யுணர்வுற்று
பெத்தம் அறுத்தலும் ஆகும் பிரமமே. 228.

வேதாந்தங் கேட்க விரும்பிய வேதியர்
வேதாந்தங் கேட்டுந்தம் வேட்கை ஒழிந்திலர்
வேதாந்த மாவது வேட்கை ஒழிந்திடம்
வேதாந்தங் கேட்டவர் வேட்கை விட்டாரே. 229.

நூலும் சிகையும் நுவலிற் பிரமமோ
நூலது கார்ப்பாசம் நுண்சிகை கேசமாம்
நூலது வேதாந்தம் நுண்சிகை ஞானமாம்
நூலுடை அந்தணர் காணும் நுவலிலே. 230.

சத்தியம் இன்றித் தனிஞானம் தானின்றி
ஒத்த விடயம்விட் டோ டும் உணர்வின்றிப்
பத்தியும் இன்றிப் பரன் உண்மை யின்றிப்
பித்தேறும் மூடர் பிராமணர் தாமன்றே. 231.

திருநெறி யாகிய சித்தசித் தின்றிக்
குருநெறி யாலே குருபதம் சேர்ந்து
கரும நியமாதி கைவிட்டுக் காணும்
துரிய சமாதியாந் தூய்மறை யோர்க்கே. 232.

மறையோர் அவரே மறையவர் ஆனால்
மறையோர்தம் வேதாந்த வாய்மையினால் தூய்மை
குறையோர்தன் மற்றுள்ள கோலா கலமென்று
அறிவோர் மறைதெரிந்து அந்தண ராமே. 233.

அந்தண்மை பூண்ட அருமறை அந்தத்துச்
சிந்தைசெய் அந்தணர் சேரும் செழும்புவி
நந்துதல் இல்லை நரபதி நன்றாகும்
அந்தியும் சந்தியும் ஆகுதி பண்ணுமே. 234.

வேதாந்த ஞானம் விளங்க விதியிலோர்
நாதாந்த போதம் நணுகிய போக்கது
போதாந்த மாம்பரன் பாற்புகப் புக்கதால்
நாதாந்த முத்தியும் சித்தியும் நண்ணுமே. 235.

ஒன்றும் இரண்டும் ஒருங்கிய காலத்து
நன்றும் இருந்தும் நலம்பல பேசினும்
வென்று விளங்கும் விகிர்தனை நாடுவர்
சென்று வணங்குந் திருவுடை யோரே. 236.

தானே விடும்பற்று இரண்டும் தரித்திட
நானே விடப்படும் ஏதொன்றை நாடாது
பூமேவு நான்முகன் புண்ணிய போகனாய்
ஓமேவும் ஓர்ஆ குதிஅவி உண்ணவே. 237.

13.
அரசாட்சி முறை (இராச தோடம்)

கல்லா அரசனும் காலனும் நேரொப்பர்
கல்லா அரசனிற் காலன் மிகநல்லன்
கல்லா அரசன் அறம் ஓரான் கொல்லென்பான்
நல்லாரைக் காலன் நணுகநில் லானே. 238.

நாள்தோறும் மன்னவன் நாட்டில் தவநெறி
நாள்தோறும் நாடி அவன்நெறி நாடானேல்
நாள்தோறும் நாடு கெடுமூட நண்ணுமால்
நாள்தோறும் செல்வம் நரபதி குன்றுமே. 239.

வேட நெறிநில்லார் வேடம்பூண் டென்பயன்
வேட நெறிநிற்பார் வேடம்மெய் வேடமே
வேட நெறிநில்லார் தம்மை விறல்வேந்தன்
வேட நெறிசெய்தால் வீடது வாமே. 240.

மூடங் கெடாதோர் சிகைநூல் முதற்கொள்ளில்
வாடும் புவியும் பெருவாழ்வு மன்னனும்
பீடுஒன் றிலனாகும் ஆதலாற் பேர்த்துணர்ந்து
ஆடம் பரநூல் சிகையறுத் தால்நன்றே. 241.

ஞானமி லாதார் சடைசிகை நூல்நண்ணி
ஞானிகள் போல நடிக்கின் றவர் தம்மை
ஞானிக ளாலே நரபதி சோதித்து
ஞானமுண் டாக்குதல் நலமாகும் நாட்டிற்கே. 242.

ஆவையும் பாவையும் மற்றுஅற வோரையும்
தேவர்கள் போற்றும் திருவேடத் தாரையும்
காவலன் காப்பவன் காவாது ஒழிவனேல்
மேவும் மறுமைக்கு மீளா நரகமே. 243.

திறந்தரு முத்தியும் செல்வமும் வேண்டின்
மறந்தும் அறநெறி யேஆற்றல் வேண்டும்
சிறந்தநீர் ஞாலம் செய்தொழில் யாவையும்
அறைந்திடில் வேந்தனுககு ஆறில் ஒன் றாமே. 244.

வேந்தன் உலகை மிகநன்று காப்பது
வாய்ந்த மனிதர்கள் அவ்வழி யாநிற்பர்
போந்திவ் வுலகைப் பிறர்க்கொள்ளத் தாங்கொள்ளப்
பாய்ந்த புலியன்ன பாவகத் தானே. 245.

கால்கொண்டு கட்டிக் கனல்கொண்டு மேலேற்றிப்
பால்கொண்டு சோமன் முகம்பற்றி உண்ணாதோர்
மால்கொண்டு தேறலை உண்ணும் மருளரை
மேல்கொண்டு தண்டஞ்செய் வேந்தன் கடனே. 246.

தத்தம்சமயத் தகுதிநில் லாதாரை
அத்தன் சிவன் சொன்ன ஆகம நூல்நெறி
எத்தண் டமுஞ்செயும் அம்மையில் இம்மைக்கே
மெய்த்தண்டம் செய்வதுஅவ் வேந்தன் கடனே. 247.

14.
வானச் சிறப்பு

அமுதூறு மாமழை நீரத னாலே
அமுதூறும் பன்மரம் பார்மிசை தோற்றும்
கமுகூறு தெங்கு கரும்பொடு வாழை
அமுதூறுங் காஞ்சிரை ஆங்கது வாமே. 248.

வரையிடை நின்றிழி வான்நீர் அருவி
உரையில்லை உள்ளத் தகத்துநின் றூறும்
நுரையில்லை மாசில்லை நுண்ணிய தெண்ணீர்
கரையில்லை எந்தை கழுமணி யாறே. 249.

15.
தானச் சிறப்பு

ஆர்க்கும் இடுமின் அவா஢வர் என்னன்மின்
பார்த்திருந்து உண்மின் பழம்பொருள் போற்றன்மின்
வேட்கை உடையீர் விரைந்தொல்லை உண்ணன்மின்
காக்கை கரைந்துண்ணும் காலம் அறிமினே. 250.

16.
அறஞ்செய்வான் திறம்

தாமறி வார்அண்ணல் தாள்பணி வார்அவர்
தாமறி வார்அறம் தாங்கிநின் றார்அவர்
தாமறி வார்சில தத்துவர் ஆவர்கள்
தாமறி வார்க்குத் தமர்பர னாமே. 251.

யாவர்க்கு மாம்இறை வற்குஒரு பச்சிலை
யாவர்க்கு மாம்பசு வுக்கொரு வாயுறை
யாவர்க்கு மாம் உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்கு மாம்பிறர்க்கு இன்னுரை தானே. 252.

அற்றுநின் றார்உண்ணும் ஊணே அறன்என்னும்
கற்றன போதம் கமழ்பவர் மானிடர்
உற்றுநின்று ஆங்கொரு கூவல் குளத்தினில்
பற்றிவந் துண்ணும் பயனறி யாரே. 253.

அழுக்கினை ஓட்டி அறிவை நிறையீர்
தழுக்கிய நாளில் தருமமும்செய்யீர்
விழித்திருந்து என்செய்வீர் வெம்மை பரந்து
விழிக்கஅன்று என்செய்வீர் ஏழைநெஞ்சீரே. 254.

தன்னை அறியாது தான்நலன் என்னாதுஇங்கு
இன்மை அறியாது இளையர்என்று ஓராது
வன்மையில் வந்திடும்கூற்றம் வருமுன்னம்
தன்மையில் நல்ல தவஞ்செய்யும் நீரே. 255.

துறந்தான் வழிமுதல் சுற்றமும் இல்லை
இறந்தான் வழிமுதல் இன்பமும் இல்லை
மறந்தான் வழிமுதல் வந்திலன் ஈசன்
அறந்தான் அறியும் அளவறி வாரே. 256.

தான்தவம் செய்வதாம் செய்தவத்து அவ்வழி
மான்தெய்வ மாக மதிக்கும் மனிதர்கள்
ஊன் தெய்வ மாக உயிர்க்கின்ற பல்லுயிர்
நான்தெய்வம் என்று நமன்வரு வானே. 257.

திளைக்கும் வினைக்கடல் தீர்வுறு தோணி
இளைப்பினை நீக்கும் இருவழி உண்டு
கிளைக்கும் தனக்கும் அக் கேடில் புகழோன்
விளைக்கும் தவமறம் மேற்றுணை யாமே. 258.

பற்றது வாய்நின்ற பற்றினைப் பார்மிசை
அற்றம் உரையான் அறநெறிக் கல்லது
உற்று உங்களால் ஒன்றும் ஈந்தது வேதுணை
மற்றண்ணல் வைத்த வழிகொள்ளு மாறே.259.

17.
அறஞ்செயான் திறம்

எட்டி பழுத்த இருங்கனி வீழ்ந்தன
ஒட்டிய நல்லறம் செய்யா தவர்செல்வம்
வட்டிகொணடு ஈட்டியே மண்ணில் முகந்திடும்
பட்டிப் பதகர் பயன்அறி யாரே. 260.

ஒழிந்தன காலங்கள் ஊழியும் போயின
கழிந்தன கற்பனை நாளுங் குறுகிப்
பிழிந்தன போலத்தம் போ஢டர் ஆக்கை
அழிந்தன கண்டும் அறம்அறி யாரே. 261.

அறம்அறி யார்அண்ணல் பாதம் நினையுந்
திறம்அறி யார்சிவ லோக நகர்க்குப்
புறம்அறி யார்பலர் பொய்மொழி கேட்டு
மறம்அறி வார்பகை மன்னிநின் றாரே. 262.

இருமலும் சோகையும் ஈளையும் வெப்பும்
தருமஞ்செய் யாதவர் தம்பால தாகும்
உருமிடி நாகம் உரோணி கழலை
தருமம்செய் வார்பக்கல் தாழகி லாவே. 263.

பரவப் படுவான் பரமனை ஏத்தார்
இரவலர்க்கு ஈதலை யாயினும் ஈயார்
கரகத்தால் நீராட்டிக் காவை வளர்க்கார்
நரகத்தில் நிற்றிரோ நல்நெஞ்சி னீரே. 264.

வழிநடப் பாரின்றி வானோர் உலகம்
கழிநடப் பார்நடந் தார்கருப் பாரும்
மழிநடக் கும்வினை மாசற ஓட்டிட்டு
வழிநடப் பார்வினை ஓங்கிநின் றாரே. 265.

கனிந்தவர் ஈசன் கழலடி காண்பர்
துணிந்தவர் ஈசன் துறக்கமது ஆள்வர்
மலிந்தவர் மாளும் துணையும்ஒன் றின்றி
மெலிந்த சினத்தினுள் வீழ்ந்தொழிந் தாரே. 266.

இன்பம் இடரென்று இரண்டுற வைத்தது
முன்பவர் செய்கையி னாலே முடிந்தது
இன்பம் அதுகண்டும் ஈகிலாப் பேதைகள்
அன்பிலார் சிந்தை அறமறி யாரே. 267.

கெடுவதும் ஆவதும் கேடில் புகழோன்
நடுவல்ல செய்து இன்பம் நாடவும் ஒட்டான்
இடுவதும் ஈவதும் எண்ணுமின் இன்பம்
படுவது செய்யின் பசுவது வாமே. 268.

செல்வம் கருதிச் சிலர்பலர் வாழ்வெனும்
புல்லறி வாளரைப் போற்றிப் புலராமல்
இல்லங் கருதி இறைவனை ஏத்துமின்
வில்லி இலக்கெய்த விற்குறி யாமே. 269.

18.
அன்புடைமை

அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே. 270.

பொன்னைக் கடந்திலங் கும்புலித் தோலினன்
மின்னிக் கிடந்து மிளிரும் இளம்பிறை
துன்னிக் கிடந்த சுடுபொடி யாடிக்குப்
பின்னிக் கிடந்ததென் பேரன்பு தானே. 271.

என்பே விறகா இறைச்சி அறுத்திட்டுப்
பொன்போற் கனலிற் பெரிய வறுப்பினும்
அன்போடு உருகி அகங்குழை வார்க்கன்றி
என்போல் மணியினை எய்தஒண் ணாதே. 272.

ஆர்வம் உடையவர் காண்பார் அரன்தன்னை
ஈரம் உடையவர் காண்பார் இணையடி
பாரம் உடையவர் காண்பார் பவந்தன்னைக்
கோர நெறிகொடு கொங்குபுக் காரே. 273.

என்அன் புருக்கி இறைவனை ஏத்துமின்
முன்அன் புருக்கி முதல்வனை நாடுமின்
பின்அன் புருக்கிப் பெருந்தகை நந்தியும்
தன்அன் பெனக்கே தலைநின்ற வாறே. 274.

தானொரு காலம் சயம்பு என் றேத்தினும்
வானொரு காலம் வழித்துணை யாய்நிற்கும்
தேனொரு பால்திகழ் கொன்றை அணிசிவன்
தானொரு வண்ணம்என் அன்பில்நின் றானே. 275.

முன்படைத்து இன்பம் படைத்த முதலிடை
அன்புஅடைத்து எம்பெரு மானை அறிகிலார்
வன்படைத்து இந்த அகலிடம் வாழ்வினில்
அன்புஅடைத் தான்தன் அகலிடத் தானே. 276.

கருத்துறு செம்பொன்செய் காய்கதிர்ச் சோதி
இருத்தியும் வைத்தும் இறைவன் என்று ஏத்தியும்
அருத்தியுள் ஈசனை யாரருள் வேண்டில்
விருத்தி கொடுத்திடும் விண்ணவர் கோனே. 277.

நித்தலும் துஞ்சும் பிறப்பையும் செய்தவன்
வைத்த பரிசு அறிந் தேயும் மனிதர்கள்
இச்சையு ளேவைப்பர் எந்தை பிரானென்று
நச்சியே அண்ணலை நாடுகி லாரே. 278.

அன்பின் உள் ளான்புறத்தான் உட லாயுளான்
முன்பின்உள் ளான்முனி வர்க்கும் பிரானவன்
அன்பின்உள் ளாகி அமரும் அரும்பொருள்
அன்பினுள் ளார்க்கே அணைதுணை யாமே. 279.

19.
அன்பு செய்வாரை அறியும் சிவன்.

இகழ்ந்ததும் பெற்றதும் ஈசன் அறியும்
உகந்தருள் செய்திடும் உத்தம நாதன்
கொழுந்தன்பு செய்தருள் கூரவல் லார்க்கு
மகிழ்ந்தன்பு செய்யும் அருளது வாமே. 280.

இன்பப் பிறவிக்கு இயல்வது செய்தவன்
துன்பப் பிறவித் தொழில்பல என்னினும்
அன்பிற் கலவிசெய்து ஆதிப் பிரான்வைத்த
முன்பிப் பிறவி முடிவது தானே. 281.

அன்புறு சிந்தையின் மேலெழும் அவ்வொளி
இன்புறு கண்ணியொடு ஏற்க இசைந்தன
துன்புறு கண்ணி ஐந் தாடும் துடக்கற்று
நண்புறு சிந்தையை நாடுமின் நீரே. 282.

புணர்ச்சியுள் ஆயிழை மேல்அன்பு போல
உணர்ச்சியுள் ஆங்கே ஒடுங்கவல் லாருக்கு
உணர்ச்சியில் லாது குலாவி உலாவி
அணைத்தலும் இன்பம் அதுவிது வாமே. 283.

உற்றுநின் றாரொடும் அத்தகு சோதியைச்
சித்தர்கள் என்றும் தொ஢ந்தறி வாரில்லை
பத்திமை யாலே பணிந்தடி யார்தொழ
முத்தி கொடுத்தவர் முன்புநின் றானே. 284.

கண்டேன் கமழ்தரு கொன்றையி னான்அடி
கண்டேன் கரியுரி யான்தன் கழலிணை
கண்டேன் கமல மலர்உறை வானடி
கண்டேன் கழலதென் அன்பினுள் யானே. 285.

நம்பனை நானா விதப்பொரு ளாகுமென்று
உம்பரில் வானவர் ஓதுந் தலைவனை
இன்பனை இன்பத் திடைநின்று இரதிக்கும்
அன்பனை யாரும் அறியகி லாரே. 286.

முன்பு பிறப்பும் இறப்பும் அறியாதார்
அன்பில் இறைவனை யாம்அறி வோம்என்பர்
இன்பப் பிறப்பும் இறப்பும் இலான்நந்தி
அன்பில் அவனை அறியகி லாரே. 287.

ஈசன் அறியும் இராப்பக லுந்தன்னைப்
பாசத்துள் வைத்துப் பரிவுசெய் வார்களைத்
தேசுற்று இருந்து செயலற் றிருந்திடில்
ஈசன்வந்து எம்மிடை ஈட்டிநின் றானே. 288.

விட்டுப் பிடிப்பதென் மேதகு சோதியைத்
தொட்டுத் தொடர்வன் தொலையாப் பெருமையை
எட்டும் என் ஆருயி ராய்நின்ற ஈசனை
மட்டுக் கலப்பது மஞ்சனம் ஆமே. 289.

20.
கல்வி.

குறிப்பறிந் தேன்உடல் உயிரது கூடிச்
செறிப்பறிந் தேன்மிகு தேவர் பிரானை
மறிப்பறி யாதுவந்துஉள்ளம் புகுந்தான்
கறிப்பறி யாமிகுங் கல்விகற் றேனே. 290.

கற்றறி வாளர் கருதிய காலத்துக்
கற்றறி வாளர் கருத்திலோர் கண்ணுண்டு
கற்றறி வாளர் கருதி உரைசெய்யுங்
கற்றறி காட்டக் கயல்உள வாக்குமே. 291.

நிற்கின்ற போதே நிலையுடை யான்கழல்
கற்கின்ற செய்மின் கழிந்தறும் பாவங்கள்
சொற்குன்றல் இன்றித் தொழுமின் தொழுதபின்
மற்றொன்று இலாத மணிவிளக் காமே. 292.

கல்வி யுடையார் கழிந்தோடிப் போகின்றார்
பல்லி யுடையார் பாம்பரிந்து உண்கின்றார்
எல்லியுன் காலையும் ஏத்தும் இறைவனை
வல்லியுள் வாதித்த காயமும் ஆமே. 293.

துணையது வாய்வரும் தூயநற் சோதி
துணையது வாய்வரும் தூயநற் சொல்லாம்
துணையது வாய்வரும் தூயநற் கந்தம்
துணையது வாய்வரும் தூயநற் கல்வியே. 294.

நூலொன்று பற்றி நுனியேற மாட்டாதார்
பாலொன்று பற்றினால் பண்பின் பயங்கெடும்
கோலொன்று பற்றினால் கூடாப் பறவைகள்
மாலொன்று பற்றி மயங்குகின் றார்க்களே. 295.

ஆய்ந்துகொள் வார்க்குஅரன் அங்கே வெளிப்படும்
தோய்ந்த நெருப்பது தூய்மணி சிந்திடும்
ஏய்ந்த இளமதி எட்டவல் லார்கட்கு
வாய்ந்த மனமல்கு நூலேணி யாமே. 296.

வழித்துணை யாய்மருந் தாயிருந் தார்முன்
கழித்துணை யாம்கற் றிலாதவர் சிந்தை
ஒழித்துணை யாம்உம் பராய்உல கேழும்
வழித்துணை யாம்பெருந் தன்மைவல் லானே. 297.

பற்றது பற்றில் பரமனைப் பற்றுமின்
முற்றது எல்லா முதல்வன் அருள்பெறில்
கிற்ற விரகிற் கிளரொளி வானவர்
கற்றவர் போ஢ன்பம் உற்றுநின் றாரே. 298.

கடலுடை யான்மலை யான்ஐந்து பூதத்து
உடலுடை யான்பல ஊழிதொ றூழி
அடல்விடை யேறும் அமரர்கள் நாதன்
இடமுடை யார்நெஞ்சத் தில்லிருந் தானே. 299

21.
கேள்வி கேட்டமைதல்.

அறங்கேட்டும் அந்தணர் வாய்மொழி கேட்டும்
மறங்கேட்டும் வானவர் மந்திரங் கேட்டும்
புறங்கேட்டும் பொன்னுரை மேனிஎம் ஈசன்
திறங்கேட்டும் பெற்ற சிவகதி தானே. 300.

தேவர் பிரானைத் திவ்விய மூர்த்தியை
யாவர் ஒருவர் அறிவார் அறிந்தபின்
ஓதுமின் கேள்மின் உணர்மின் உணர்ந்தபின்
ஓதி உணர்ந்தவர் ஓங்கி நின்றாரே. 301.

மயன்பணி கேட்பது மாநந்தி வேண்டின்
அயன்பணி கேட்பது அரன்பணி யாலே
சிவன்பணி கேட்பவர் தேவரும் ஆவர்
பயன்பணி கேட்பது பற்றது வாமே. 302.

பெருமான் இவனென்று பேசி இருக்கும்
திருமானிடர் பின்னைத் தேவரும் ஆவர்
வருமா தவர்க்கு மகிழ்ந்தருள் செய்யும்
அருமா தவத்தெங்கள் ஆதிப் பிரானே. 303.

ஈசன் அருளும் இறப்பும் பிறப்பையும்
பேசி யிருந்து பிதற்றி மகிழ்வெய்தி
நேசமு மாகும் நிகழொளி யாய்நின்று
வாச மலர்க்கந்தம் மன்னிநின் றானே. 304.

விழுப்பமும் கேள்வியும் மெய்நின்ற ஞானத்து
ஒழுக்கமும் சிந்தை உணர்கின்ற போது
வழுக்கி விடாவிடில் வானவர் கோனும்
இழுக்கின்றி எண்ணிலி காலம தாமே. 305.

சிறியார் மணற்சோற்றில் தேக்கிடு மாபோல்
செறிவால் அனுபோகம் சித்திக்கும் என்னில்
குறியாதது ஒன்றைக் குறியாதார் தம்மை
அறியாது இருந்தார் அவராவார் அன்றே. 306.

உறுதுணை யாவது உயிரும் உடம்பும்
உறுதுணை யாவது உலகுறு கேள்வி
செறிதுணை யாவது சிவனடிச் சிந்தை
பெறுதுணை கேட்கிற் பிறப்பில்லை தானே. 307.

புகழநின் றார்க்கும் புராணன்எம் ஈசன்
இகழநின் றார்க்கும் இடும்பைக்கு இடமாம்
மகிழநின் றாதியை ஓதி உணராக்
கழியநின் றார்க்கொரு கற்பசு வாமே. 308.

வைத்துணர்ந் தான்மனத் தொடும்வாய் பேசி
ஒத்துணர்ந் தான்உரு ஒன்றொடொன்று ஒவ்வாது
அச்சுஉழன்று ஆணி கலங்கினும் ஆதியை
நச்சு உணர்ந் தார்க்கே நணுகலு மாமே. 309.

22.
கல்லாமை

கல்லா தவரும் கருத்தறி காட்சியை
வல்லார் எனில்அருட் கண்ணான் மதித்துளோர்
கல்லாதார் உண்மைபற் றாநிற்பர் கற்றோரும்
கல்லாதார் இன்பம் காணுகி லாரே. 310.

வல்லார்கள் என்றும் வழியொன்றி வாழ்கின்றார்
அல்லா தவர்கள் அறிவு பலஎன்பார்
எல்லா இடத்தும் உளன்எங்கள் தம் இறை
கல்லா தவர்கள் கலப்பறி யாரே. 311.

நில்லா நிலையை நிலையாக நெஞ்சத்து
நில்லாக் குரம்பை நிலையென்று உணர்வீர்காள்
எல்லா உயிர்க்கும் இறைவனே ஆயினும்
கல்லாதார் நெஞ்சத்துக் காணஒண் ணாதே. 312.

கில்லேன் வினைத்துய ராக்கும் மயலானேன்
கல்லேன் அரநெறி அறியாத் தகைமையின்
வல்லேன் வழங்கும் பொருளே மனத்தினுள்
கல்லேன் கழியநின்று ஆடவல் லேனே. 313.

நில்லாது சீவன் நிலையன்று எனஎண்ணி
வல்லார் அறத்தும் தவத்துளும் ஆயினார்
கல்லா மனித்தர் கயவர் உலகினில்
பொல்லா வினைத்துயர் போகஞ்செய் வாரே. 314.

விண்ணினின் உள்ளே விளைந்த விளங்கனி
கண்ணினின் உள்ளே கலந்துஅங் கிருந்தது
மண்ணினின் உள்ளே மதித்து மதித்துநின்
றெண்ணி எழுதி இளைத்துவிட் டாரே. 315.

கணக்கறிந் தார்க்கு அன்றிக் காணஒண் ணாதது
கணக்கறிந் தார்க்கு அன்றிக் கைகூடாக் காட்சி
கணக்கறிந்து உண்மையைக் கண்டுஅண்ட நிற்கும்
கணக்கறிந் தார்கல்வி கற்றறிந் தாரே. 316.

கல்லாத மூடரைக் காணவும் ஆகாது
கல்லாத மூடர்சொல் கேட்கக் கடன்அன்று
கல்லாத மூடர்க்குக் கல்லாதார் நல்லராம்
கல்லாத மூடர் கருத்தறி யாரே. 317.

கற்றும் சிவஞானம் இல்லாக் கலதிகள்
சுற்றமும் வீடார் துரிசுஅறார் மூடர்கள்
மற்றும் பலதிசை காணார் மதியிலோர்
கற்றன்பில் நிற்போர் கணக்கறிந் தார்களே. 318.

ஆதிப் பிரான்அம ரர்க்கும் பரஞ்சுடர்
சோதி அடியார் தொடரும் பெருந்தெய்வம்
ஓதி உணரவல் லோம்என்பர் உள்நின்ற
சோதி நடத்தும் தொடர்வறி யாரே. 319.

23.
நடுவு நிலைமை

நடுவுநின் றார்க்கு அன்றி ஞானமும் இல்லை
நடுவுநின் றார்க்கு நரகமும் இல்லை
நடுவுநின் றார்நல்ல தேவரும் ஆவர்
நடுவுநின் றார்வழி நானும்நின் றேனே. 320.

நடுவுநின் றான்நல்ல கார்முகில் வண்ணன்
நடுவுநின் றான்நல்ல நான்மறை யோதி
நடுவுநின் றார்ச்சிலர் ஞானிகள் ஆவோர்
நடுவுநின் றார்நல்ல நம்பனு மாமே. 321.

நடுவுநின் றார்சிலர் ஞானிக ளாவார்
நடுவுநின் றார்சிலர் தேவரு மாவார்
நடுவுநின் றார்சிலர் நம்பனு மாவார்
நடுவுநின் றாரொடு நானும்நின் றேனே. 322.

தோன்றிய எல்லாம் துடைப்பன் அவனன்றி
ஏன்றுநின் றாரென்றும் ஈசன் இணையடி
மூன்றுநின் றார்முதல் வன்திரு நாமத்தை
நான்றுநின் றார்நடு வாகிநின் றாரே. 323.

24.
கள்ளுண்ணாமை

கழுநீர்ப் பசுப்பெறிற் கயந்தொறும் தேரா
கழுநீர் விடாய்த்துத்தம் காயம்சுருக்கும்
முழுநீர்க் கள்ளுண்போர் முறைமை அகன்றோர்
செழுநீர்ச் சிவன்தன் சிவானந்தத் தேறலே. 324.

சித்தம் உருக்கிச் சிவமாம் சமாதியில்
ஒத்த சிவானந்தம் ஓவாத தேறலைச்
சுத்த மதுவுண்ணச் சிவானந்தம் விட்டிடா
நித்தல் இருத்தல் கிடத்தல் கீழ்க் காலே. 325.

காமமும் கள்ளும் கலதிகட் கேயாகும்
மாமல மும்சம யத்துள் மயலுறும்
போமதி யாகும் புனிதன் இணையடி
ஓமய ஆனந்தத் தேறல் உணர்வுண்டே. 326.

வாமத்தோர் தாமும் மதுவுண்டு மாள்பவர்
காமத்தோர் காமக்கள் ளுண்டே கலங்குவர்
ஓமத்தோர் உள்ளொளிக் குள்ளே உணர்வர்கள்
நாமத்தோர் அன்றே நணுகுவர் தாமே. 327.

உள்ளுண்மை ஓரார் உணரார் பசுபாசம்
வள்ளன்மை நாதன் அருளினன் வாழ்வுறார்
தெள்ளுண்மை ஞானச் சிவயோகம் சேர்வுறார்
கள்ளுண்ணும் மாந்தர் கருத்தறி யாரே. 328.

மயக்கும் சமய மலமன்னு மூடர்
மயக்கு மதுவுண்ணும் மாமூடர் தேரார்
மயக்குறு மாமாயை மாயையின் வீடு
மயக்கில் தெளியின் மயக்குறும் அன்றே. 329.

மயங்குந் தியங்கும் கள்வாய்மை அழிக்கும்
இயங்கும் மடவார்தம் இன்பமே எய்தி
முயங்கும் நயங்கொண்ட ஞானத்து முந்தார்
இயங்கும் இடையறா ஆனந்தம் எய்துமே. 330.

இராப்பகல் அற்ற இடத்தே இருந்து
பராக்கற ஆனந்தத் தேறல் பருகார்
இராப்பகல் அற்ற இணையடி இன்பத்து
இராப்பகல் மாயை இரண்டிடத் தேனே. 331.

சத்தியை வேண்டிச் சமயத்தோர் கள்ளுண்பர்
சத்தி அழிந்தது தம்மை மறத்தலால்
சத்தி சிவஞானம் தன்னில் தலைப்பட்டுச்
சத்திய ஞானஆ னந்தத்திற் சார்தலே. 332.

சத்தன் அருள்தரின் சத்தி அருளுண்டாம்
சத்தி அருள்தரின் சத்தன் அருளுண்டாம்
சத்தி சிவமாம் இரண்டும் தன் உள்வைக்கச்
சத்தியம் எண்சித்தித் தன்மையு மாமே. 333.

தத்துவம் நீக்கி மருள்நீக்கித் தானாகிப்
பொய்த்தவம் நீக்கிமெய்ப் போகத்துட் போகியே
மெய்த்த சகமுண்டு விட்டுப் பரானந்தச்
சித்திய தாக்கும் சிவானந்தத் தேறலே. 334.

யோகிகள் கால்கட்டி ஒண்மதி ஆனந்தப்
போத அமுதைப் பொசித்தவர் எண்சித்தி
மோகியர் கள்ளுண்டு மூடராய் மோகமுற்று
ஆகும் மதத்தால் அறிவழிந் தாரே. 335.

உண்ணீர் அமுத முறும் ஊறலைத்திறந்து
எண்ணீர் குரவன் இணையடித் தாமரை
நண்ணீர் சமாதியின் நாடிநீ ரால்நலம்
கண்ணாற் றொடேசென்று கால்வழி காணுமே. 336.

முதல் தந்திரம் முற்றிற்று

10ம் திருமுறை

திருமந்திரம் (திருமூலர் அருளியது)
இரண்டாம் தந்திரம் (337 - 548)

1. அகத்தியம்

நடுவுநில் லாதிவ் வுலகஞ் சா஢ந்து
கெடுகின்ற தெம்பெரு மானென்ன ஈசன்
நடுவுள அங்கி அகத்திய நீபோய்
முடுகிய வையத்து முன்னிரென் றானே. 337.

அங்கி உதயம் வளர்க்கும் அகத்தியன்
அங்கி உதயஞ்செய் மேல்பா லவனொடு
மங்கி உதயஞ்செய் வடபால் தவமுனி
எங்கும் வளங்கொள் இலங்கொளி தானே.338.

2.
பதிவலியில் வீரட்டம் எட்டு

கருத்துறை அந்தகன் தன்போல் அசுரன்
வரத்தின் உலகத் துயிர்க்களை எல்லாம்
வருத்தஞ்செய் தானென்று வானவர் வேண்டக்
குருத்துயர் சூலங்கைக் கொண்டுகொன் றானே.339.

கொலையிற் பிழைத்த பிரசா பதியைத்
தலையைத் தடிந்திட்டுத் தானங்கி யிட்டு
நிலையுல குக்கிவன் வேண்டுமென் றெண்ணித்
தலையை யா஢ந்திட்டுச் சந்திசெய் தானே.340.

எங்கும் பரந்தும் இருநிலந் தாங்கியுந்
தங்கும் படித்தவன் தாளுணர் தேவர்கள்
பொங்கும் சினத்துள் அயன்தலை முன்னற
அங்குஅச் சுதனை உதிரங்கொண் டானே.341.

எங்குங் கலந்துமென் உள்ளத் தெழுகின்ற
அங்க முதல்வன் அருமறை (1) யோதிபாற்
பொங்குன்ய் சலந்தரன் போர்ச்செய்ய நீர்மையின்
அங்கு விரற்குறித் தாழிசெய் தானே.342.

(1)
யோகிபாற்

அப்பணி செஞ்சடை ஆதி புராதனன்
முப்புரம் செற்றனன் என்பர்கள் மூடர்க்கள்
முப்புர மாவது மும்மல காரியம்
அப்புரம் எய்தமை யாரறி வாரே.343.

முத்தீ கொளுவி முழங்கொ஢ வேள்வியுள்
அத்தி யுரியர னாவ தறிகிலர்
சத்தி கருதிய தாம்பல தேவரும்
அத்தீயின் உள்ளெழுந் தன்று கொலையே.344.

மூலத் துவாரத்து மூளும் ஒருவனை
மேலைத் துவாரத்து மேலுற நோக்கிமுற்
காலுற்றுக் காலனைக் காய்ந்தங்கி யோகமாய்
ஞாலக் கடவூர் நலமாய் இருந்ததே.345.

இருந்த மனத்தை இசைய இருத்திப்
பொருந்தி இலிங்க வழியது போக்கித்
திருந்திய காமன் செயலழித் தங்கண்
அருந்தவ யோகங் கொறுக்கை அமர்ந்ததே.346.

3.
இலிங்க புராணம்

அடிசேர்வன் என்னஎம் ஆதியை நோக்கி
முடிசேர் மலைமக னார்மக ளாகித்
திடமார் தவஞ்செய்து தேவர் அறியப்
படியார அர்ச்சித்துப் பத்திசெய் தாளே.347.

திரிகின்ற முப்புரஞ் செற்ற பிரானை
அரியனென் றெண்ணி அயர்வுற வேண்டா
புரிவுடை யாளர்க்குப் பொய்யலன் ஈசன்
பரிவொடு நின்று பரிசறி வானே.348.

ஆழி வலங்கொண் டயன்மால் இருவரும்
ஊழி வலஞ்செய்ய ஒண்சுட ராதியும்
ஆழி கொடுத்தனன் அச்சுதற்க் கவ்வழி
(1)
வாழி பிரமற்கும் வாள்கொடுத் தானே.349.
(1)
வாழிப் பிரமற்கும்

தாங்கி இருபது தோளுந் தடவரை
ஓங்க எடுத்தவன் ஒப்பில் பெருவலி
ஆங்கு நொ஢த்தம ராவென் றழைத்தபின்
நீங்கா அருள்செய்தான் நின்மலன் தானே.350.

உறுவது அறிதண்டி ஒண்மணற் கூட்டி
அறுவகை ஆன்ஐந்தும் ஆட்டத்தன் தாதை
செறுவகை செய்து சிதைப்ப முனிந்து
மறுமழு வால்வெட்டி மாலைபெற் றானே.351.

ஓடிவந் தெல்லாம் ஒருங்கிய தேவர்கள்
வாடி முகமும் வருத்தத்துத் தாஞ்சென்று
நாடி இறைவா நமேன்று கும்பிட
ஈடில் புகழோன் எழுகவென் றானே. .352.

4.
தக்கன் வேள்வி

தந்தைபி ரான்வெகுண் டாந்தக்கன் வேள்வியை
வெந்தழல் ஊடே புறப்பட விண்ணவர்
முந்திய பூசை முடியார் முறைகெட்டுச்
சிந்தினர் அண்ணல் சினஞ்செய்த போதே.353.

சந்தி செயக்கண் டெழுகின் றா஢தானும்
எந்தை யிவனல்ல யாமே உலகினிற்
பந்தஞ்செய் பாசத்து வீழ்ந்து தவஞ்செய்ய
அந்தமி லானும் அருள்புரிந் தானே.354.

அப்பரி சேயய நார்ப்பதி வேள்வியுள்
அப்பரி சேயங்கி அதிசய மாகிலும்
அப்பரி சேயது நீர்மையை யுள்கலந்
தப்பரி சேசிவன் ஆலிக்கின் றானே.355.


அப்பரி சேஅயன் மால்முதல் தேவர்கள்
அப்பரி சேயவ ராகிய காரணம்
அப்பரி சங்கி யுளநாளும் உள்ளிட்
டப்பரி சாகி (1)அலர்ந்திருந் தானே.356.

(1)
அலந்திருந்
(1)
அமர்ந்திருந்

(1)
அலர்ந்திருந் தானென் றமரர் துதிப்பக்
குலந்தரும் கீழங்கி கோளுற நோக்கிச்
சிவந்த பரமிது சென்று கதுவ
உவந்த பெருவழி யோடி வந்தானே.357.

(1)
அலந்திருந்

அரிபிர மந்தக்கன் அருக்க னுடனே
வருமதி வாலை வன்னிநல் இந்திரன்
சிரமுக நாசி (1)சிறந்தகை தோள்தான்
அரனருள் இன்றி அழிந்தநல் லோரே.358.
(1)
சிந்தைகை

செவிமந் திரஞ்சொல்லுஞ் செய்தவத் தேவர்
அவிமந் திரத்தின் அடுக்களை கோலிச்
செவிமந் திரஞ்செய்து தாமுற நோக்குங்
குவிமந் திரங்கொல் கொடியது வாமே.359.

நல்லார் நவகுண்டம் ஒன்பதும் இன்புறப்
பல்லார் அமரர் பரிந்தருள் செய்கென
வில்லாற் புரத்தை விளங்கொ஢ கோத்தவன்
பொல்லா அசுரர்கள் பொன்றும் படிக்கே.360.

தெளிந்தார் கலங்கினும் நீகலங் காதே
அளித்தாங் கடைவதெம் ஆதிப் பிரானை
(1)
விளிந்தா னது தக்கன் வேள்வியை வீயச்
சுளிந்தாங் கருள்செய்த தூய்மொழி யானே
(1)
விளிந்தானத் தக்கனவ் வேள்வியை 361.

5.
பிரளயம்.

கருவரை மூடிக் கலந்தெழும் வெள்ளத்
திருவருங் கோவென் றிகல இறைவன்
ஒருவனும் நீருற ஓங்கொளி யாகி
அருவரை யாய்நின் றருள் புரிந் தானே.362.

அலைகடல் ஊடறுத் தண்டத்து வானோர்
தலைவன் எனும்பெயர் தான்றலை மேற்கொண்டு
உலகார் அழற்கண் டுள்விழா தோடி
அலைவாயில் வீழாமல் அஞ்சலென் றானே.363.

தண்கடல் விட்ட தமரருந் தேவரும்
எண்கடல் சூழெம் பிரானென் றிறைஞ்சுவர்
விண்கடல் செய்தவர் மேலெழுந் தப்புறங்
கண்கடல் செய்யுங் கருத்தறி யாரே. .364.

சமைக்கவல் லானைச் சயம்புவென் றேத்தி
அமைக்கவல் லாரிவ் வுலகத்து ளாரே
திகைத்தெண் ணீரிற் கடலொலி ஓசை
மிகைக்கொள அங்கி மிகாமைவைத் தானே.365.

பண்பழி செய்வழி பாடுசென் றப்புறங்
கண்பழி யாத கமலத் திருக்கின்ற
நண்பழி யாளனை நாடிச்சென் றச்சிரம்
விண்பழி யாத விருத்திகொண் டானே. .366.

6.
சக்கரப்பேறு

மால்போ தகனென்னும் வண்மைக்கிங் காங்காரங்
கால்போதகங் கையினோ டந்தரச் சக்கர
மேல்போக வெள்ளி மலைஅம ராபதி
பார்ப்போக மேழும் படைத்துடை யானே.367.

சக்கரம் பெற்றுநல் தாமோ தரந்தானும்
சக்கரந் தன்னைத் (1)தரிக்கவொண் ணாமையால்
மிக்கரன் தன்னை விருப்புடன் அர்ச்சிக்கத்
தக்கநற் சக்தியைத் தாங்கூறு செய்ததே.368.

(1)
திரிக்கவொண்

கூறது வாகக் குறித்துநற் சக்கரங்
கூறது செய்து கொடுத்தனன் மாலுக்குக்
கூறது செய்து கொடுத்தனன் சத்திக்குக்
கூறது செய்து (1)தரித்தனன் கோலமே.369.

(1)
கொடுத்தனன்

தக்கன்றன் வேள்வி தகர்த்தநல் வீரர்பால்
தக்கன்றன் வேள்வியில் தாமோ தரந்தானுஞ்
சக்கரந் தன்னைச் சசிமுடி மேல்விட
அக்கி உமிழ்ந்தது வாயுக் கரத்திலே.370.

.7.
எலும்பும் கபாலமும்

எலும்புங் கபாலமும் ஏந்தி எழுந்த
வலம்பன் மணிமுடி வானவ ராதி
எலும்புங் கபாலமும் ஏந்தில நாகில்
எலும்புங் கபாலமும் இற்றுமண் ணாமே.371.

8.
அடிமுடி தேடல்

பிரமனும் மாலும் பிரானேநான் என்னப்
பிரமன்மால் தங்கள்தம் பேதைமை யாலே
பரமன் அனலாய்ப் பரந்துமுன் நிற்க
அரனடி தேடி அரற்றுகின் றாரே. .372.

ஆமே ழுலகுற நின்றேம் அண்ணலுந்
தாமே ழுலகில் தழற்பிழம் பாய்நிற்கும்
வானே ழுலகுறும் மாமணி கண்டனை
(1)
நானே அறிந்தேன் அவனாண்மை யாலே
(1)
நானே அறிந்தேனென் ஆண்மையி னாலே.373.

ஊனாய் உயிராய் உணர்வங்கி யாய்முன்னஞ்
சேணாய்வா னோரங்கித் திருவுரு வாய் அண்டத்
தாணுவும் ஞாயிறுந் தண்மதி யுங்கடந்
தாண்முழு தண்டமு மாகிநின் றானே.374.

நின்றான் நிலமுழு தண்டத்துள் நீளியன்
அன்றே யவன்வடி வஞ்சின ராய்ந்தது
சென்றார் இருவர் திருமுடி மேற்செல
நன்றாங் கழலடி நாடவொண் ணாதே. .375.

சேவடி ஏத்துஞ் செறிவுடை வானவர்
மூவடி தாவென் றானும் முனிவரும்
பாவடி யாலே பதஞ்செய் பிரமனுந்
தாவடி யிட்டுத் தலைப்பெய்து மாறே.376.

தானக் கமலத் திருந்த சதுமுகன்
தானக் கருங்(1)கடல் வாழித் தலைவனும்
ஊனத்தின் உள்ளே உயிர்போல் உணர்கின்ற
தானப் பெரும்பொருள் தன்மைய தாமே.377.

(1)
கடலூழித்

ஆலிங் கனஞ்செய் தெழுந்த பரஞ்சுடர்
மேலிங்ஙன் வைத்ததோர் மெய்ந்நெறி முங்கண்
டாலிங் கனஞ்செய் துலகம் வலம்வருங்
கோலிங் கமைஞ்சருள் கூடலு மாமே.378.

வாள்கொடுத் தானை வழிபட்ட தேவர்கள்
ஆள்கொடுத் தெம்போல் அரனை அறிகிலர்
ஆள்கொடுத் தின்பங் கொடுத்துக் கோளாகத்
தாள்கொடுத் தானடி சாரகி லாரே.379.

ஊழி வலஞ்செய்தங் கோரும் ஒருவற்கு
வாழி சதுமுகன் வந்து வெளிப்படும்
வீழித் தலைநீர் விதித்தது தாவென
ஊழிக் கதிரோன் ஒளியைவென் றானே.380.


9.(1)
படைத்தல்
(1)
சிருஷ்டி
(1)
சர்வ சிருஷ்டி

ஆதியோ டந்தம் இலாத (1)பராபரம்
போதம தாகப் புணரும் பராபரை
சோதி யதனிற் பரந்தோன்றத் தோன்றுமாந்
தீதில் பரையதன் பால்திகழ் நாதமே.381.

(1)
பராபரன்

நாதத்தில் விந்துவும் நாதவிந் துக்களில்
தீதற் றகம்வந்த சிவன்சத்தி என்னவே
பேதித்து ஞானங் கிரியை பிறத்தலால்
வாதித்த விச்சையில் வந்தெழும் விந்துவே.382.

இல்லது சத்தி இடந்தனில் உண்டாகிக்
கல்லொளி போலக் கலந்துள் ளிருந்திடும்
வல்லது ஆக வழிசெய்த அப்பொருள்
சொல்லது சொல்லிடில் தூராதி தூரமே.383.

தூரத்திற் சோதி தொடர்ந்தொரு சத்தியாய்
ஆர்வத்து நாதம் அணைந்தொரு விந்துவாய்ப்
பாரச் சதாசிவம் பார்முதல் ஐந்துக்கும்
சார்வத்து சத்திஓர் சாத்துமா னாமே.384.

மானின்கண் வானாகி வாயு வளர்ந்திடும்
கானின்கண் நீருங் கலந்து கடினமாய்த்
தேனின்கண் ஐந்துஞ் செறிந்தைந்து பூதமாய்ப்
பூவின்கண் நின்று பொருந்தும் புவனமே.385.

புவனம் படைப்பான் ஒருவன் ஒருத்தி
புவனம் படைப்பார்க்குப் புத்திரர் ஐவர்
புவனம் படைப்பானும் பூமிசை யானாய்
புவனம் படைப்பானப் புண்ணியன் தானே.386.

புண்ணியன் நந்தி பொருந்தி உலகெங்கும்
தண்ணிய மானை வளர்த்திடுஞ் சத்தியுஞ்
கண்ணியல் பாகக் கலவி முழுதுமாய்
மண்ணியல் பாக மலர்ந்தெழு பூவிலே.387.

நீரகத் தின்பம் பிறக்கும் நெருப்பிடை
(1)
காயத்திற் சோதி பிறக்கும்அக் காற்றிடை
ஓர்வுடை நல்லுயிர்ப் பாதம் ஒலிசத்தி
நீரிடை மண்ணின் நிலைபிறப் பாமே.388.

(1)
காய்கதிர்ச்

உண்டுல கேழும் உமிழ்ந்தான் உடனாகி
அண்டத் தமரர் தலைவனும் ஆதியுங்
கண்டச் சதுர்முகக் காரணன் தன்னொடும்
பண்டிவ் வுலகம் படைக்கும் பொருளே.389.

ஓங்கு பெருங்கடல் உள்ளுறு வானொடும்
பாங்கார் கயிலைப் பராபரன் தானும்
வீங்குங் கமல மலர்மிசை மேலயன்
ஆங்குயிர் வைக்கும் அதுவுணர்ந் தானே.390.

காரணன் அன்பிற் கலந்தெங்கும் நின்றவன்
நாரணன் நின்ற நடுவுட லாய்நிற்கும்
பாரணன் அன்பிற் பதஞ்செய்யும் நான்முகன்
ஆரண மாஉல காயமர்ந் தானே.391.

பயன்எளி தாம்பரு மாமணி செய்ய
நயன்எளி தாகிய நம்பன்ஒன் றுண்டு
அயஓளி யாயிருந் தங்கே படைக்கும்
பயனெளி தாம்வய ணந்தெளிந் தேனே.392.

போக்கும் வரவும் புனிதன் அருள்புரிந்
தாக்கமுஞ் சிந்தைய தாகின்ற காலத்து
மேக்கு மிகநின்ற எட்டுத் திசையொடுந்
தாக்குங் கலக்குந் தயாபரன் தானே.393.

நின்றுயி ராக்கு நிமலன்என் னாருயிர்
ஒன்றுயி ராக்கும் அளவை உடலுற
முன்துய ராக்கும் உடற்குந் துணையதா
நன்றுயிர்ப் பானே நடுவுநின் றானே.394.

ஆகின்ற தன்மையில் அக்கணி கொன்றையன்
வேகின்ற செம்பொனின் மேலணி மேனியன்
போகின்ற சீவன் புகுந்துட லாய்உளன்
ஆகின்ற தன்மைசெய் ஆண்டகை யானே.395.

ஒருவன் ஒருத்தி விளையாடல் உற்றார்
இருவர் விளையாட்டும் எல்லாம் விளைக்கும்
பருவங்கள் தோறும் பயன்பல வான
திருவொன்றிற் செய்கை செகமுற்று மாமே.396.

புகுந்தறி வான்புவ னாபதி அண்ணல்
புகுந்தறி வான்புரி சக்கரத் தண்ணல்
புகுந்தறி வான்மலர் மேலுறை புத்தேள்
புகுந்தறி யும்முடிக் காகிநின் றாரே.397.

ஆணவச் சத்தியும் ஆம்அதில் ஐவருங்
காரிய காரண ஈசர் கடைமுறை
பேணிய ஐந்தொழி லால்விந்து விற்பிறந்து
ஆணவம் நீங்கா தவரென லாகுமே.398.

உற்றமுப் பாலொன்று மாயாள் உதயமா
மற்றைய மூன்று மாயோ தயம்விந்து
(1)
பெற்றவன் நாதம் பரையிற் பிறத்தலால்
துற்ற பரசிவன் தொல்விளை யாட்டிதே.399.

(1)
பெற்றவள்

ஆகாய மாதி சதாசிவ ராதியென்
போகாத சத்தியுட் போந்துடன் போந்தனர்
மாகாய ஈசன் அரன்மால் பிரமனாம்
ஆகாயம் பூமி காண (1)அளித்தலே.400.

(1)
அளித்ததே

அளியார் முக்கோணம் வயிந்தவந் தன்னில்
அளியார் திரிபுரை யாமவள் தானே
அளியார் சதாசிவ மாகி அமைவாள்
அளியார் கருமங்கள் ஐந்துசெய் வாளே.401.

வாரணி கொங்கை மனோன்மணி மங்கலி
காரணி காரிய மாகக் கலந்தவள்
வாரணி ஆரணி வானவர் மோகினி
பூரணி (1)போதாதி போதமு மாமே
(1)
பூதாதி.402.

நின்றது தானாய் நிறைந்த மகேசுரன்
சென்றங் கியங்கும் அரந்திரு மாலவன்
மன்றது செய்யும் மலர்மிசை மேலயன்
என்றிவ ராக இசைந்திருந் தானே.403.

ஒருவனு மேஉல கேழும் படைத்தான்
ஒருவனு மேஉல கேழும் அளித்தான்
ஒருவனு மேஉல கேழுந் துடைத்தான்
ஒருவனு (1)மேஉல கோடுயிர் தானே.404.

(1)
மேஉடலோடுயிர்

செந்தா மரைவண்ணன் தீவண்ணன் எம் இறை
மைந்தார் முகில்வண்ணன் மாயஞ்செய் பாசத்தும்
கொந்தார் குழலியர் கூடிய கூட்டத்தும்
(1)
அந்தார் பிறவி அறுத்துநின் றானே
(1)
ஐந்தார் பிறவி அமைத்து நின்றானே.405.

தேடுந் திசைஎட்டுஞ் சீவன் உடல்உயிர்
கூடும் பிறவிக் குணஞ்செய்த மாநந்தி
ஊடும் அவர்தம் துள்ளத்துள் ளேநின்று
நாடும் வழக்கமும் நான்அறிந் தேனே.406.

ஓராய மேஉல கேழும் படைப்பதும்
ஓராய மேஉல கேழும் அளிப்பதும்
ஓராய மேஉல கேழுந் துடைப்பதும்
ஓராய மே(1)உல கோடுயிர் தானே.407.

(1)
உடலோடுயிர் தானே

நாதன் ஒருவனும் நல்ல இருவருங்
கோது குலத்தொடுங் கூட்டிக் குழைத்தனர்
ஏது பணியென் றிசையும் இருவருக்
காதி இவனே அருளுகின் றானே.408.

அப்பரி செண்பத்து நான்குநூ றாயிரம்
மெய்ப்பரி செய்தி விரிந்துயி ராய்நிற்கும்
பொய்ப்பரி செய்திப் புகலும் மனிதர்கட்
கிப்பரி சேஇருள் மூடிநின் றானே.409.

ஆதித்தன் சந்திரன் அங்கிஎண் பாலர்கள்
போதித்த வானொலி பொங்கிய நீர்ப்புவி
வாதித்த சத்தாதி வாக்கு மனாதிகள்
ஓதுற்ற மாயையின் விந்துவின் உற்றதே.410.

10. (1)
காத்தல்
(1)
திதி

புகுந்துநின் றான்வெளி யாய்இரு ளாகிப்
புகுந்துநின் றான்புகழ் வாய்இகழ் வாகிப்
புகுந்துநின் றான்உட லாய்உயி ராகிப்
புகுந்துநின் றான்புந்தி மன்னிநின் றானே.411.

தானே திசையொடு தேவரு மாய்நிற்குந்
தானே உடலுயிர் தத்துவ மாய்நிற்குந்
தானே கடல்மலை யாதியு மாய்நிற்குந்
தானே உலகில் தலைவனு மாமே.412.

உடலாய் உயிராய் உலகம தாகிக்
கடலாய் கார்முகில் நீர்ப்பொழி வானாய்
இடையாய் உலப்பிலி எங்குந்தா னாகி
அடையார் (1)பெருவழி அண்ணல் நின்றானே.413.

(1)
பெருவெளி

தேடுந் திசைஎட்டுஞ் சீவன் உடல்உயிர்
(1)
கூடு மரபிற் குணஞ்செய்த மாநந்தி
ஊடும் அவர்தம துள்ளத்து ளேநின்று
நாடும் வழக்கமும் நான்அறிந் தேனே
(1)
கூடும்பிறவிக்.414.

தானொரு காலந் தனிச்சுட ராய்நிற்குந்
தானொரு கால்சண்ட மாருத மாய்நிற்குந்
தானொரு காலந் தண்மழை யாய்நிற்குந்
தானொரு காலந்தண் மாயனு மாமே.415.

அன்பும் அறிவும் அடக்கமு மாய்நிற்கும்
இன்பமும் இன்பக் கலவியு மாய்நிற்கும்
முன்புறு காலமும் ஊழியு மாய்நிற்கும்
அன்புற ஐந்தில் அமர்ந்துநின் றானே.416.

உற்று வனைவான் அவனே உலகினைப்
பெற்று வனைவான் அவனே பிறவியைச்
சுற்றிய சாலுங் குடமுஞ் சிறுதூதை
மற்றும் அவனே வனையவல் லானே.417.

உள்ளுயிர்ப் பாயுட லாகிநின் றான்நந்தி
வெள்ளுயி ராகும் வெளியான் நிலங்கொளி
உள்ளுயிர்க் கும்உணர் வேயுட லுட்பரந்
தள்ளுயி ராவண்ணந் தாங்கிநின் றானே.418.

தாங்கருந் தன்மையுந் தானவை பல்லுயிர்
வாங்கிய காலத்து மற்றோர் பிறிதில்லை
ஓங்கி எழுமைக்கும் யோகாந்த மவ்வழி
தாங்கிநின் றானும்அத் தாரணி தானே.419.

அணுகினுஞ் சேயவன் அங்கியிற் கூடி
நணுகினும் ஞானக் கொழுந்தொன்று நல்கும்
பணுகினும் பார்மிசைப் பல்லுயி ராகித்
தணிகினும் மண்ணுடல் அண்ணல்செய் வானே.420.


11. (1)
அழித்தல்
(1)
சங்காரம்

அங்கிசெய் தீசன் அகலிடஞ் சுட்டது
அங்கிசெய் தீசன் அலைகடற் சுட்டது
அங்கிசெய் தீசன் அசுரரைச் சுட்டது
அங்கியவ் வீசற்குக் கைஅம்பு தானே.421.

இலயங்கள் மூன்றினும் ஒன்றுகற் பாந்த
நிலையன் றழிந்தமை நின்றுணர்ந் தேனால்
உலைதந்த மெல்லா஢ போலும் உலகம்
மலைதந்த மானிலந் தான்வெந் ததுவே.422.

பதஞ்செய்யும் பாரும் பனிவரை எட்டும்
உதஞ்செய்யும் ஏழ்கடல் ஓதம் முதலாங்
குதஞ்செய்யும் அங்கி கொளுவியா காசம்
விதஞ்செய்யும் நெஞ்சில் வியப்பில்லை தானே.423.

கொண்டல் வரைநின் றிழிந்த குலக்கொடி
அண்டத்துள் ஊறி யிருந்தெண் டிசையாதி
ஒன்றின் பதந்செய்த ஓம்என்ற அப்புறக்
குண்டத்தின் மேலங்கி கோலிக் கொண்டானே.424.

நித்தசங் காரம் உறக்கத்து நீள்மூடம்
வைத்தசங் காரமுஞ் சாக்கிரா தீதமாஞ்
சுத்தசங் காரந் தொழிலற்ற கேவலம்
உய்த்தசங் காரம் பரன் அருள் உண்மையே.425.

நித்தசங் காரம் இரண்டுடல் நீவுதல்
வைத்தசங் காரமும் மாயாசங் காரமாஞ்
சுத்தசங் காரம் மனாதீதந் தோய்வுறல்
உய்த்தசங் காரஞ் சிவன் அருள் உண்மையே.426.

நித்தசங் காரம் கருவிடர் நீக்கினால்
ஒத்தசங் காரமும் உடலுயிர் நீவுதல்

சுத்தசங் காரம் அதீதத்துட் டோ ய்வுறல்
உய்த்தசங் காரம் பரனருள் உண்மையே

(1)
வைத்தசங் காரங் கேவலம் ஆன்மாவுக்
குய்த்தசங் காரம் சிவமாகும் உண்மையே. .427.

நித்தசங் காரமும் நீடிளைப் பாற்றலின்
வைத்தசங் காரமும் மன்னும் அனாதியிற்
சுத்தசங் காரமுந் தோயாப் பரன்அருள்
உய்த்தசங் காரமும் நாலா மதிக்கிலே.428.

பாழே முதலா எழும்பயிர் அப்பயிர்
பாழாய் அடங்கினும் பண்டைப்பாழ் பாழாகா
வாழாச்சங் காரத்தின் மாலயன் செய்தியாம்
பாழாம் பயிராய் அடங்கும்அப் பாழிலே.429.

தீயவைத் தார்மிங்கள் சேரும் வினைதனை
மாயவைத் தான்வைத்த வன்பதி ஒன்றுண்டு
காயம்வைத் தாங்கலந் தெங்கும் நினைப்பதோர்
ஆயம்வைத் தானுணர் வாரவைத் தானே.430.

12. (1)
மறைத்தல்
(1)
திரோபவம்

உள்ளத் தொருவனை உள்ளுறு சோதியை
உள்ளம்விட் டோ ரடி (1)நீங்கா ஒருவனை
(2)
உள்ளமுந் தானும் உடனே இருக்கினும்
உள்ளம் அவனை உருவறி யாதே
(1)
நீங்கா தொருவனை
(2)
உள்ளமும் அவனும் உறவா யிருந்தும்.431.

இன்பப் பிறவி படைத்த இறைவனுந்
துன்பஞ்செய் பாசத் துயருள் (1)அடைத்தனன்
என்பிற் கொளுவி இசைந்துறு தோற்றசை
முன்பிற் கொளுவி முடிகுவ தாமே
(1)
அடைந்தனன்.432.

இறையவன் மாதவன் இன்பம் படைத்த
மறையவன் மூவரும் வந்துடன் கூடி
இறையவன் செய்த இரும்பொறி யாக்கை
மறையவன் வைத்த (1)பரிசறி யாதே
(1)
பரிசறி யாரே.433.

காண்கின்ற கண்ணொளி காதல்செய் தீசனை
ஆண்பெண் அலியுரு வாய்நின்ற ஆதியை
ஊண்படு நாவுடை நெஞ்சம் உணர்ந்திட்டுச்
சேண்படு பொய்கைச் செயலணை யாரே.434.

தெருளும் உலகிற்குந் தேவர்க்கும் இன்பம்
அருளும் வகைசெய்யும் ஆதிப் பிரானுஞ்
சுருளுஞ் சுடருறு தூவெண் சுடரும்
இருளும் அறநின் றிருட்டறை யாமே.435.

அரைகின் றருள்தரும் அங்கங்கள் ஓசை
உரைக்கின்ற ஆசையும் ஒன்றோடொன் றொவ்வாப்
பரக்கும் உருவமும் பாரகந் தானாய்க்
கரகின் றவைசெய்த காண்டகை யானே. .436.

ஒளித்துவைத் தேனுள் ளுறவுணர்ந் தீசனை
வெளிப்பட்டு நின்றருள் செய்திடு மீண்டே
களிப்பொடுங் காதன்மை என்னும் பெருமை
வெளிப்பட் டிறைஞ்சினும் வேட்சியு மாமே.437.

நின்றது தானாய் நிறைந்த மகேசுரன்
சென்றங் (1)கியங்கும் அரந்திரு மாலவன்
மன்றது செய்யும் மலர்மிசை மேலயன்
என்றிவ ராகி இசைந்திருந் தானே
(1)
கியங்கி யயந்திரு.438.

ஒருங்கிய பாசத்துள் உத்தமச் (1)சித்தன்
இருங்கரை மேலிருந் தின்புற நாடி
வருங்கரை ஓரா வகையினிற் கங்கை
அருங்கரை பேணில் அழுக்கற லாமே
(1)
சித்தின்.439.

மண்ணொன்று தான்பல நற்கல மாயிடும்
உண்ணின்ற யோனிகட் கெல்லாம் ஒருவனே
கண்ணொன்று தான்பல காணுந் தனைக்காணா
அண்ணலும் இவ்வண்ண மாகிநின் றானே. .440.

13(1)
அருளல்
(1)
அநுக்கிரகம்

எட்டுத் திசையும் எறிகின்ற காற்றொடு
வட்டத் திரையனல் மாநிலம் ஆகாயம்
ஒட்டி உயிர்நிலை என்னுமிக் காயப்பை
கட்டி (1)அவிழ்ப்பான் கண்ணுதல் காணுமே.441.

(1)
அவிழ்க்கின்ற

உச்சியில் ஓங்கி ஒளிதிகழ் நாதத்தை
நச்சியே இன்பங்கொள் வார்க்கு நமன்இல்லை
விச்சும் விரிசுடர் மூன்றும் உலகுக்குத்
தச்சு மவனே சமைக்கவல் லானே.442.

(1)
குசவன் திரிகையில் ஏற்றிய மண்ணைக்
(1)
குசவன் மனத்துற்ற தெல்லாம் வனைவன்
(2)
குசவனைப் போல்எங்கள் கோன்நந்தி வேண்டில்
(3)
அசைவில் உலகம் அதுயிது வாமே
(1)
குயவன்
(2)
குயவனைப்
(3)
அயைவில்.443.

விரியுடை யான்விகிர் தன்மிகு பூதப்
படையுடை யான்பரி சேஉல காக்குங்
கொடையுடை யாங்குணம் எண்குண மாகுஞ்
சடையுடை யாஞ்சிந்தை சார்ந்துநின் றானே.444.

உகந்துநின் றேபடைத் தான்உல கேழும்
உகந்துநின் றேபடைத் தான்பல ஊழி
உகந்துநின் றேபடைத் தான்ஐந்து பூதம்
உகந்துநின் றேஉயிர் ஊன்படைத் தானே.445.

படைத்துடை யான்பண் டுலகங்கள் ஏழும்
படைத்துடை யான்பல தேவரை முன்னே
படைத்துடை யான்பல சீவரை முன்னே
படைத்துடை யான்பர மாகிநின் றானே.446.

(1)
ஆதி படைத்தனன் ஐம்பெரும் (2)பூதம்
(1)
ஆதி படைத்தனன் (3)ஆசில்பல் ஊழி
(1)
ஆதி படைத்தனன் எண்ணிலி தேவரை
(1)
ஆதி படைத்தவை தாங்கிநின் றானே
(1)
அனாதி
(2)
பூதங்கள்
(3)
ஆயபல் ஊழிகள்.447.

அகன்றான் (1)அகலிடம் ஏழுமொன் றாகி
இவன்றா னெனநின் றெளியனும் அல்லன்
சிவன்றான் பலபல (2)சீவனும் ஆகி
நவின்றான் உலகுறு நம்பனு மாமே
(1)
கடலிடம்
(2)
சீவரும்.448.

உண்ணின்ற சோதி உறநின்ற ஓருடல்
விண்ணின் றமரர் விரும்பும் விழுப்பொருள்
மண்ணின்ற வானோர் புகழ்திரு மேனியன்
கண்ணின்ற மாமணி (1)மாபோத மாமே
(1)
மாபோதகமே.449.

ஆரும் அறியாத அண்டத் திருவுருப்
பார்முத லாகப் பயிலுங் கடத்திலே
நீரினிற் பால்போல நிற்கின்ற நேர்மையைச்
சோராமற் காணுஞ் சுகம்அறிந் தேனே.450.

14. (1)
கரு உற்பத்தி
(1)
கர்ப்பக்கிரியை

ஆக்குகின் றான்முன் பிரிந்த இருபத்தஞ்
சாக்குகின் றானவ னாதிஎம் ஆருயிர்
ஆக்குகின் றான்கர்ப்பக் கோளகை யுள்ளிருந்
தாக்குகின் றான்அவன் ஆவ தறிந்தே.451.

அறிகின்ற மூலத்தின் மேல்அங்கி அப்புச்
செறிகின்ற ஞானத்துச் செந்தாள் கொளுவிப்
பொறைநின்ற இன்னுயிர் போந்துற நாடிப்
பறிகின்ற பத்தெனும் பாரஞ்செய் தானே.452.

இன்புறு காலத் திருவர்முன் பூறிய
துன்புறு பாசத் துயர்மனை வானுளன்
பண்புறு காலமும் பார்மிசை வாழ்க்கையும்
அன்புறு காலத் தமைத்தொழிந் தானே.453.

கருவை ஒழிந்தவர் கண்டநால் மூவேழ்
புருடன் உடலில் பொருந்துமற் றோரார்
திருவின் கருக்குழி தேடிப் புகுந்த
உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே.454.

விழுந்தது லிங்கம் விரிந்தது யோனி
ஒழிந்த முதல்ஐந்தும் ஈரைந்தொ டேறிப்
பொழிந்த புனல்பூதம் போற்றுங் கரணம்
ஒழிந்த நுதல்உச்சி உள்ளே ஒளித்ததே.455.

பூவின் மணத்தைப் பொருந்திய வாயுவுந்
தாவி உலகில் தரிப்பித்த வாறுபோல்
மேவிய சீவனில் மெல்லநீள் வாயுவுங்
கூவி அவிழுங் குறிக்கொண்ட போதே.456.

போகின்ற எட்டும் புகுகின்ற பத்தெட்டும்
(1)
மூழ்கின்ற முத்தனும் ஒன்பது வாய்தலும்
நாகமும் எட்டுடன் நாலு புரவியும்
பாகன் (2)விடானெனிற் (3)பன்றியு மாமே
(1)
ஆகிப்படைத்தன
(2)
விடாவிடிற்
(3)
பந்தியு.457.

ஏற எதிர்க்கில் இறையவன் றானாகும்
மாற எதிர்க்கில் (1)அரியவன் றானாகும்
நேரொக்க வைக்கின் நிகர்ப்போதத் தானாகும்
பேரொத்த மைந்தனும் பேரர சாளுமே
(1)
அரியயன்.458.

ஏயங் கலந்த இருவர்தஞ் சாயத்துப்
பாயுங் கருவும் உருவா மெனப்பல
காயங் கலந்தது காணப் பதிந்தபின்
மாயங் கலந்த மனோலய மானதே.459.

கர்ப்பத்துக் கேவல மாயாள் (1)கிளைகூட்ட
நிற்குந் துரியமும் பேதித்து நினைவெழ
வற்புறு காமியம் எட்டாதல் மாயேயஞ்
சொற்புறு தூய்மறை வாக்கினாஞ் சொல்லே
(1)
கிளைக்கூட்ட.460.

என்பால் மிடைந்து நரம்பு வா஢க்கட்டிச்
செம்பால் இறைச்சி திருந்த மனைசெய்து
இன்பால் உயிர்நிலை செய்த இறையோங்கும்
(1)
நன்பால் ஒருவனை நாடுகின் றேனே
(1)
நண்பால்.461.

பதஞ்செய்யும் பால்வண்ணன் மேனிப் பகலோன்
இதஞ்செய்யு மொத்துடல் எங்கும் புகுந்து
குதஞ்செய்யும் அங்கியின் கோபந் தணிப்பான்
விதஞ்செய்யு மாறே விதித்தொழிந் தானே.462.

ஒழிபல செய்யும் வினையுற்ற நாளே
வழிபல நீராடி வைத்தெழு வாங்கிப்
பழிபல செய்கின்ற பாசக் கருவைச்
சுழிபல வாங்கிச் சுடாமல்வைத் தானே.463.

சுக்கில நாடியில் தோன்றிய வெள்ளியும்
அக்கிர மத்தே தோன்றுமவ் வியோனியும்
புக்கிடும் எண்விரல் புறப்பட்டு நால்விரல்
அக்கரம் எட்டும்எண் சாணது வாகுமே.464.

போகத்துள் ஆங்கே புகுந்த புனிதனுங்
(1)
கோசத்துள் ஆகங்கொணர்ந்த கொடைத்தொழில்
ஏகத்துள் ஆங்கே இரண்டெட்டு மூன்றைந்து
மோகத்துள் ஆங்கொரு முட்டைசெய் தானே
(1)
கோகத்துள்.465.

பிண்டத்தில் உள்ளுறு பேதைப் புலன்ஐந்தும்
பிண்டத்தி னூடே பிறந்து மா஢த்தது
அண்டத்தின் உள்ளுறு சீவனும் அவ்வகை
அண்டத்து நாதத் தமர்ந்திருந் தானே.466.

இலைபொறி யேற்றி யெனதுடல் ஈசன்
துலைப்பொறி யிற்கரு ஐந்துட னாட்டி
நிலைபொறி முப்பது நீர்மை கொளுவி
உலைப்பொறி ஒன்பதில் ஒன்றுசெய் தானே.467.

இன்புற் றிருவர் இசைவித்து வைத்தமண்
துன்பக் கலசம் அணைவான் ஒருவனே
ஒன்பது நீர்ச்சால் கலசம் பதினெட்டு
வெந்தது சூளை விளைந்தது தானே.468.

அறியீ ருடம்பினி லாகிய வாறும்
பிறியீ ரதனிற் பெருகுங் குணங்கள்
செறியீ ரவற்றினுட் சித்திகள் இட்ட
தறியவீ ரைந்தினு ளானது பிண்டமே.469.

உடல்வைத்த வாறும் உயிர்வைத்த வாறும்
மடைவைத்த ஒன்பது வாய்தலும் வைத்துத்
திடம்வைத்த தாமரைச் சென்னியுள் அங்கிக்
கடைவைத்த ஈசனைக் கைகலந் தேனே.470.

கேட்டுநின் றேன்எங்குங் கேடில் பெருஞ்சுடர்
மூட்டுகின் றான்முதல் யோனி மயனவன்
கூட்டுகின் றான்குழம் பின்கரு வையுரு
நீட்டுநின் றாகத்து நேர்ப்பட்ட வாறே.471.

பூவுடன் மொட்டுப் பொருந்த அலர்ந்தபின்
காவுடைத் தீபங் கலந்து பிறந்திடும்
நீரிடை நின்ற குமிழி நிழலதாய்ப்
பாருடல் எங்கும் பரந்தெட்டும் பற்றுமே.472.

எட்டினுள் ஐந்தாகும் இந்திரி யங்களும்
கட்டிய மூன்று கரணமு மாய்விடும்
ஒட்டிய பாச உணர்வென்னுங் காயப்பை
கட்டி அவிழ்த்திடுங் கண்ணுதல் காணுமே.473.

கண்ணுதல் நாமங் கலந்துடம் பாயிடைப்
பண்ணுதல் செய்து பசுபாசம் நீங்கிட
எண்ணிய வேதம் இசைந்த பரப்பினை
மண்முத லாக வகுத்துவைத் தானே.474.

அருளல்ல தில்லை அரனவன் அன்றி
அருளில்லை யாதலி னவ்வோர் உயிரைத்
தருகின்ற போதிரு கைத்தாயர் தம்பால்
வருகின்ற நண்பு வகுத்திடுந் தானே.475.

வகுத்த பிறவியை மாதுநல் லாளுந்
தொகுத்திருள் நீக்கிய சோதி யவனும்
பகுத்துணர் வாக்கிய பல்லுயிர் எல்லாம்
வகுத்துள்ளும் நின்றதோர் மாண்பது வாமே.476.

மாண்பது வாக வளர்கின்ற (1)வன்னியுங்
காண்பது ஆண்பெண் அலியெனுங் கற்பனை
பூண்பது மாதா பிதாவழி போலவே
ஆம்பதி செய்தானச் சோதிதன் ஆண்மையே
(1)
வன்னியைக்.477.

ஆண்மிகில் ஆணாகும் பெண்மிகிற் பெண்ணாகும்
பூணிரண் டொத்துப் பொருந்தில் அலியாகும்
தாண்மிகு மாகில் தரணி முழுதாளும்
பாணவ மிக்கிடில் பாய்ந்ததும் இல்லையே.478.

பாய்ந்தபின் னஞ்சோடில் ஆயுளும் நூறாகும்
பாய்ந்தபின் நாலோடில் பாரினில் எண்பதாம்
பாய்ந்திடும் வாயுப் பகுத்தறிந் திவ்வகை
பாய்ந்திடும் யோகிக்குப் பாய்ச்சலு மாமே.479.

பாய்கின்ற வாயுக் குறையிற் குறளாகும்
பாய்கின்ற வாயு விளைக்கின் முடமாகும்
பாய்கின்ற வாயு நடுப்படிற் கூனாகும்
பாய்கின்ற வாயுமா தர்க்கில்லை பார்க்கிலே.480.

மாதா உதரம் மலமிகில் மந்தனாம்
மாதா உதரம் சலமிகில் மூங்கையாம்
மாதா உதரம் இரண்டொக்கில் கண்ணில்லை
மாதா உதரத்தில் வந்த குழவிக்கே. .481.

குழவியும் ஆணாம் வலத்தது வாகில்
குழவியும் பெண்ணாம் இடத்தது வாகில்
குழவியும் இரண்டாம் அபான னெதிர்க்கில்
குழவி அலியாகுங் கொண்டகால் ஒக்கிலே.482.

கொண்டநல் வாயு இருவர்க்கும் (1)ஒத்தெழில்
கொண்ட குழவியுங் கோமள மாயிடுங்
கொண்டநல் வாயு இருவர்க்குங் குழறிடில்
கொண்டதும் இல்லையாங் கோள்வளை யாட்கே
(1)
ஒத்தேறில்.483.

கோள்வளை உந்தியிற் கொண்ட குழவியுந்
தால்வளை யுள்ளே தயங்கிய சோதியாம்
பால்வளர்ந் துள்ளே பகலவன் பொன்னுருப்
போல்வளர்ந் துள்ளே பொருந்துரு வாமே.484.

உருவம் வளர்ந்திடும் ஒண்டிங்கள் பத்திற்
பருவம தாகவே பாரினில் வந்திடும்
மருவி வளர்ந்திடு மாயையி னாலே
அருவம தாவதிங் காரறி வாரே.485.

இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள்
தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்திலன்
பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்
கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே.486.

இன்புற நாடி இருவருஞ் (1)சந்தித்துத்
துன்புறு பாசத்தில் தோன்றி வளர்ந்தபின்
முன்புற நாடி நிலத்தின்முன் தோன்றிய
தொன்புற நாடிநின் றோதலு மாமே
(1)
சிந்தித்துத்.487.

குயிற்குஞ்சு முட்டையைக் காக்கைக் கூட்டிட்டால்
அயிர்ப்பின்றிக் காக்கை வளர்க்கின் றதுபோல்
இயக்கில்லை போக்கில்லை ஏனென்ப தில்லை
மயக்கத்தால் காக்கை வளர்க்கின்ற வாறே.488.

முதற்கிழங் காய்முளை யாயம் முளைப்பின்
அதற்புத லாய்ப்பல மாய்நின் றளிக்கும்
அதற்கது வாயின்ப மாவதுபோல
அதற்கது வாய்நிற்கும் ஆதிப் பிரானே.489.

ஏனோர் பெருமைய னாகிலும் எம்மிறை
ஊனே சிறுமையுள் உட்கலந் தங்குளன்
வானோர் அறியும் அளவல்லன் மாதேவன்
தானே அறியுந் தவத்தினி னுள்ளே.490.

பரத்திற் கரைந்து பதிந்தநற் காயம்
உருத்தரித் திவ்வுடல் ஓங்கிட வேண்டித்
திரைக்கடல் உப்புத் திரண்டது போலத்
திரித்துப் பிறக்குந் திருவரு ளாலே.491.

15.
மூவகைச்சீவ வர்க்கம்

சத்தி சிவன்விளை யாட்டால் உயிராக்கி
ஒத்த இருமாயா கூட்டத் திடைப்பூட்டிச்
சுத்தம தாகுந் துரியம் புரிவித்துச்
சித்தம் புகுந்து சிவமய மாக்குமே.492.

விஞ்ஞானர் நால்வரு மெய்ப்பிரள யாகலத்
தஞ்ஞானர் மூவருந் தாங்கு சகலத்தின்
அஞ்ஞானர் மூவரு மாகும் பதின்மராம்
விஞ்ஞான ராதியர் வேற்றுமை தானே.493.

விஞ்ஞானர் கேவலத் தாரது விட்டவர்
தஞ்ஞானர் அட்டவித் தேசராஞ் சார்ந்துளோர்
எஞ்ஞானர் ஏழ்கோடி மந்திர நாயகர்
மெய்ஞானர் ஆணவம் விட்டுநின் றாரே.494.

இரண்டா வதில்முத்தி எய்துவர் அத்தனை
இரண்டாவ துள்ளே இருமல பெத்தர்
இரண்டாகு நூற்றெட்டு ருத்திரர் என்பர்
முரண்சேர் சகலத்தர் மும்மலத் தாரே.495.

பெத்தெத்த சித்தொடு பேண்முத்தச் சித்தது
ஒத்திட் டிரண்டிடை யூடுற்றார் சித்துமாய்
மத்தது மும்மலம் வாட்டுகை மாட்டாதார்
சத்தத் தமிழ்ந்து சகலத்து ளாரே.496.

சிவமாகி ஐவகைத் திண்மலஞ் செற்றோர்
அவமாகார் சித்தர்முத் தாந்தத்து வாழ்வார்
பவமான தீர்வோர் பசுபாசம் அற்றோர்
நவமான தத்துவம் (1)நாடிக்கண் டோ ரே
(1)
நாடிக்கொண் டாரே.497.

விஞ்ஞானர் ஆணவ கேவல மேவுவோர்
விஞ்ஞானர் மாயையில் தங்கும் இருமலர்
அஞ்ஞானர் அச்சக லத்தர் சகலராம்
விஞ்ஞான ராதிகள் ஒன்பான்வே றுயிர்களே.498.

விஞ்ஞான கன்மத்தால் மெய்யகங் கூடிய
அனையான கன்மத்தி நால்சுவர் யோனிபுக்
கெஞ்ஞான மெய்தீண்டி யேயிடை யிட்டுப்போய்
மெய்ஞ்ஞான ராகிச் சிவமேவல் உண்மையே.499.

ஆணவந் துற்ற வவித்தா நனவற்றோர்
காணிய விந்துவா நாத சகலாதி
ஆணவ மாதி யடைந்தோ ரவரன்றே
சேணுயர் சத்தி சிவதத் துவமாமே
வரன்றே
சேணுயர் சத்தி சிவதத் துவமாமே.500.

16.
பாத்திரம்.

திலமத் தனைபொன் சிவஞானிக்கு ஈந்தால்
பலமுத்தி சித்தி பரபோக மும்
தரும்நிலமத் தனைபொன்னை நின்மூடர்க்கு ஈந்தால்
பலமும்அற் றெபர போகமும் குன்றுமே. 501.

கண்டிருந் தாருயிர் உண்டிடுங் காலனைக்
கொண்டிருந் தாருயிர் கொள்ளும் குணத்தனை
நன்றுணர்ந் தார்க்கருள் செய்திடு நாதனைச்
சென்றுணர்ந் தார்சிலர் தேவரு மாமே. .502.

கைவிட்டி லேன்கரு வாகிய காலத்து
மெய்விட்டி லேன்விகிர் தன்அடி தேடுவன்
பொய்விட்டு நானே புரிசடை யானடி
நெய்விட் டிலாத விடிஞ்சிலு மாமே. 503.

ஆவன ஆவ அழிவ அழிவன
போவன போவ புகுவ புகுவன
காவலன் பேர்நந்தி காட்டித்துக் கண்டவன்
ஏவன செய்யும் இளங்கிளை யோனே. 504.

17.
அபாத்திரம்.

கோல வறட்டைக் குனிந்து குளகிட்டுப்
பாலைக் கறந்து பருகுவதே ஒக்கும்
சீலமும் நோன்பும் இலாதவர்க்கு ஈந்தது
காலங் கழிந்த பயிரது ஆகுமே. 505.

ஈவது யோக இயம நியமங்கள்
சார்வ தறிந்தன்பு தங்கு மவர்க்கன்றி
ஆவ தறிந்தன்பு தங்கா தவர்க்களுக்கு
ஈவ பெரும்பிழை என்றுகொள் ளீரே. 506.

ஆமாறு அறியான் அதிபஞ்ச பாதகன்
தோமாறும் ஈசற்குந் தூய குரவற்கும்
காமாதி விட்டோ ர்க்குந் தரல்தந்து கற்பிப்போன்
போமா நரகில் புகான்போதங் கற்கவே. 507.

மண்மலை யத்தனை மாதனம் ஈயினும்
அண்ணல் இவனென்றே அஞ்சலி அத்தனாய்
எண்ணி இறைஞ்சாதார்ககு ஈந்த இருவரும்
நண்ணுவர் ஏழா நரகக் குழியிலே. 508.

18.
தீர்த்தம்.

உள்ளத்தின் உள்ளே உளபல தீர்த்தங்கள்
மெள்ளக் குடைந்துநின் றாடார் வினைகெடப்
பள்ளமும் மேடும் பரந்து திரிவரே
கள்ள மனமுடைக் கல்வியி லோரே. 509.

தளியறி வாளர்க்குத் தண்ணிதாய்த் தோன்றும்
குளியறி வாளர்க்குக் கூடவும் ஒண்ணான்
வளியறி வாளர்க்கு வாய்க்கினும் வாய்க்கும்
தெளியறி வாளர்தம் சிந்தையு ளானே. 510.

உள்ளத்தின் உள்ளே உணரும் ஒருவனைக்
கள்ளத்தி னாரும் கலந்தறி வார்இல்லை
வெள்ளத்தை நாடி விடும்அவர் தீவினைப்
பள்ளத்தல் இட்டதோர் பத்துள் ளாமே. 511.

அறிவார் அமரர்கள் ஆதிப் பிரானைச்
செறிவான் உறைபதம் சென்று வலங்கொள்
மறியார் வளைக்கை வருபுனல் கங்கைப்
பொறியார் புனல்மூழ்கப் புண்ணிய ராமே. 512.

கடலில் கெடுத்துக் குளத்தினில் காண்டல்.
(1)
உடலுற்றுத் தேடுவார் தம்மைஒப் பாரிலர்
திடமுற்ற நந்தி திருவரு ளால்சென்று
உடலிற் புகுந்தமை ஒன்றறி யாரே.
(1)
உடலுறத். 513.

கலந்தது நீரது உடம்பில் கறுக்கும்
கலந்தது நீரது உடம்பில் சிவக்கும்
கலந்தது நீரது உடம்பில் வெளுக்கும்
கலந்தது நீர்அனல் காற்றது வாமே. 514.

19.. (1)
திருக்கோயில்.
(1)
திருக்கோயிலிழிவு.

தாவர லிங்கம் பறித்தொன்றில் தாபித்தால்
ஆவதன் முன்னே அரசு நிலைகெடும்
சாவதன் முன்னே பெருநோய் அடுத்திடும்
காவலன் பேர்நந்தி கட்டுரைத் தானே. 515.

கட்டுவித் தார்மதில் கல்லொன்று வாங்கிடில்
வெட்டுவிக் கும்அபி டேகத்து அரசரை
முட்டுவிக் கும்முனி வேதிய ராயினும்
வெட்டுவித் தேவிடும் விண்ணவன் ஆணையே. 516.

ஆற்றரு நோய்மிக்கு அவனி மழையின்றிப்
போற்றரு மன்னரும் போர்வலி குன்றுவர்
கூற்றுதைத் தான்திருக் கோயில்கள் எல்லாம்
சாற்றிய பூசைகள் தப்பிடில் தானே. 517.

முன்னவ னார்கோயில் பூசைகள் முட்டிடின்
மன்னர்க்குத் தீங்குள (1)வாரி வளம்குன்றும்
கன்னம் களவு மிகுத்திடும் காசினி
என்னரு நந்தி எடுத்துரைத் தானே.
(1)
மாரி. 518.

பேர்கொண்ட பார்ப்பான் பிரான்தன்னை அர்ச்சித்தால்
போர்கொண்ட வேந்தர்க்குப் பொல்லா வியாதியாம்
பார்கொண்ட நாட்டுக்குப் பஞ்சமு மாம்என்றே
சீர்க்கொண்ட நந்தி தொ஢ந்துரைத் தானே. 519.

20.
அதோமுக தெரிசனம்.

எம்பெரு மான்இறை வாமுறை யோஎன்று
வம்பவிழ் வானோர் அசுரன் வலிசொல்ல
அம்பவள மேனி அறுமுகன் போயவர்
தம்பகை கொல்லென்ற தற்பரன் தானே. 520.

அண்டமொடு எண்டிசை தாங்கும் அதோமுகம்
கண்டங் கறுத்த கருத்தறி வாரில்லை
உண்டது நஞ்சென்று உரைப்பர் உணர்விலோர்
வெண்டலை மாலை விரிசடை யோற்கே. 521.

செய்தான் அறியுஞ் செழுங்கடல் வட்டத்துப்
பொய்யே யுரைத்துப் புகழும் மனிதர்கள்
மெய்யே உரைக்கில் விண்ணோர் தொழச்செய்வன்
மைதாழ்ந்து இலங்கும் மிடறுடை யோனே. 522.

நந்தி எழுந்து நடுவுற ஓங்கிய
செந்தீக் கலந்துள் சிவனென நிற்கும்
முந்திக் கலந்தங்கு உலகம் வலம்வரும்
அந்தி இறைவன் அதோமுகம் ஆமே. 523.

அதோமுகம் கீழண்ட மான புராணன்
அதோமுகம் தன்னொடும் எங்கும் முயலும்
சதோமுகத் து ஒண்மலர்க் கண்ணிப் பிரானும்
அதோமுகன் ஊழித் தலைவனு மாமே. 524.

அதோமுகம் மாமல ராயது கேளும்
அதோமுகத் தால் ஒரு நூறாய் விரிந்து
அதோமுகம் ஆகிய அந்தமில் சத்தி
அதோமுகம் ஆகி அமர்ந்திருந் தானே. 525.

21.
சிவ நிந்தை.

தெளிவுறு ஞானத்துச் சிந்தையின் உள்ளே
அளிவுறு வார்அம ராபதி நாடி
எளியனென்று ஈசனை நீசர் இகழில்
கிளியொன்று பூஞையால் கீழது வாகுமே. 526.

முளிந்தவர் வானவர் தானவர் எல்லாம்
விளிந்தவர் மெய்ந்நின்ற ஞானம் உணரார்
அளிந்தமுது ஊறிய ஆதிப் பிரானைத்
தளிந்தவர்ககு அல்லது தாங்கஒண் ணாதே. 527.

அப்பகை யாலே அசுரரும் தேவரும்
நற்பகை செய்து நடுவே முடிந்தனர்
எப்பகை யாகிலும் எய்தார் இறைவனைப்
பொய்ப்பகை செய்யினும் ஒன்றுபத் தாமே. 528.

போகமும் மாதர் புலவி அதுநினைந்து
ஆகமும் உள்கலந்து அங்குஉள ராதலில்
வேதிய ராயும் விகிர்தன்நாம் என்கின்ற
நீதியுள் ஈசன் நினைப்பொழி வாரே. 529.

22.
குரு நிந்தை.

பெற்றிருந் தாரையும் பேணார் கயவர்கள்
உற்றிருந் தாரை உளைவன சொல்லுவர்
கற்றிருந் தார்வழி உற்றிருந் தாரவர்
பெற்றிருந் தார்அன்றி யார்பெறும் பேறே. 530.

ஓரெழுத்து ஒருபொருள் உணரக் கூறிய
சீரெழுத் தாளரைச் சிதையச் செப்பினோர்
ஊரிடைச் சுணங்கனாய்ப் பிறந்தங் கு ஓர்உகம்
(1)
வாரிடைக் கிருமியாய் (2)மாய்வர் மண்ணிலே.
(1)
பாரிடைக்.
(2)
படிகுவர், பழகுவர். 531.

பத்தினி பத்தர்கள் தத்துவ ஞானிகள்
சித்தங் கலங்கச் சிதைவுகள் செய்தவர்
அத்தமும் ஆவியும் ஆண்டொன்றில் (1) மாண்டிடும்
சத்தியம் (2)ஈது சதாநந்தி ஆணையே. 532.
(1)
மாய்ந்திடுஞ்.
(2)
சொன்னோம்.

மந்திரம் ஓரெழுத்து உரைத்த மாதவர்
சிந்தையில் நொந்திடத் தீமைகள் செய்தவர்
நுந்திய சுணங்கனாய்ப் பிறந்து நூறுரு
வந்திடும் புலையராய் மாய்வர் மண்ணிலே. 533.

ஈசன் அடியார் இதயம் கலங்கிடத்
தேசமும் நாடும் சிறப்பும் அழிந்திடும்
வாசவன் பீடமும் மாமன்னர் பீடமும்
நாசமது ஆகுமே நம்நந்தி ஆணையே. 534.

சன்மார்க்க சற்குருச் சந்நிதி பொய்வா஢ன்
நன்மார்க்க மும்குன்றி ஞானமும் தங்காது
தொன்மார்க்க மாய துறையும் மறந்திட்டுப்
பன்மார்க்க மும்கெட்டுப் பஞ்சமும் ஆமே. 535.

கைப்பட்ட மாமணி தானிடை கைவிட்டு
மெய்ப்பட்ட கல்லைச் சுமப்போன் விதிபோன்றும்
கைப்பட்ட நெய்பால் தயிர்நிற்கத் தானறக்
கைப்பிட்டுண் பான்போன்றுங் கன்மிஞானிக் கொப்பே. 536.

23.
மயேசுர நிந்தை.

ஆண்டான் அடியவர் ஆர்க்கும் விரோதிகள்
ஆண்டான் அடியவர் ஐயமேற் (1)றுண்பவர்
ஆண்டான் அடியரை வேண்டாது பேசினோர்
தாம்தாம் விழுவது தாழ்நர காமே.
(1)
றுண்பார். 537.

ஞானியை நிந்திப் பவனும் நலன் என்றே
ஞானியை வந்திப் பவனுமே நல்வினை
யான கொடுவினை தீர்வார் அவன்வயம்
போன பொழுதே புகுஞ்சிவ போகமே. 538.

24.
பொறையுடைமை.

பற்றிநின் றார்நெஞ்சில் பல்லிதான் ஒன்றுண்டு
முற்றிக் கிடந்தது மூக்கையும் (1) நாவையும்
தெற்றிக் கிடந்து சிதைக்கின்ற சிந்தையுள்
வற்றா தொழிவது மாகமை யாமே.
(1)
நாவியும். 539.

ஓலக்கம் சூழ்ந்த உலப்பிலி தேவர்கள்
பாலொத்த (1)மேனியன் பாதம் பணிந்துய்ய
மாலுக்கும் ஆதி பிரமற்கும் (2)மன்னவன்.
(3)
ஞாலத் திவன்மிக நல்லன்என் றாரே
(1)
மேனி பணிந்தடியேன் தொழ.
(2)
ஒப்புநீ.
(3)
ஞாலத்து நம்மடி நல்கிடென்றாலே. 540.

ஞானம் விளைந்தவர் நம்மிடம் மன்னவர்
சேனை வளைந்து திசைதொரும் கைதொழ
ஊனை விளைத்திடும் உம்பர்தம் ஆதியை
ஏனை (1)விளைந்தருள் எட்டலு மாமே.
(1)
வளைந்தருள். 541.

வல்வகை யானும் மனையிலும் மன்றிலும்
பல்வகை யானும் பயிற்றி பதஞ்செய்யும்
கொல்லையி னின்று குதிகொள்ளும் கூத்தனுக்கு
எல்லையி லாத இலயம்உண் டாமே. 542.

25.
பெரியாரைத் துணைகோடல்.

ஓடவல் லார்தம ரோடு நடாவுவன்
பாடவல் லாரொளி பார்மிசை வாழ்குவன்
தேடவல் லார்க்கருள் தேவர் பிரானொடும்
கூடவல் லாரடி கூடுவன் யானே. 543.

தாமிடர்ப் பட்டுத் தளிர்போல் தயங்கினும்
மாமனதது அங்குஅன்பு வைத்தது இலையாகும்
நீஇடர்ப் பட்டிருநது என்செய்வாய் நெஞ்சமே
போமிடத் து என்னொடும் போதுகண் டாயே. 544.

அறிவார் அமரர் தலைவனை நாடிச்
செறிவார் பெறுவர் (1) சிலர்தத் துவத்தை
நெறிதான் மிகமிக நின்றருள் செய்யும்
பெரியார் உடன்கூடல் போ஢ன்ப மாமே.
(1)
சிவதத்துவத்தை. 545.

தார்சடை யான்தன் தமராய் உலகினில்
போர புகழா எந்தை பொன்னடி சேருவர்
வாயடை யாவுள்ளம் தேர்வார்ககு அருள்செய்யும்
கோவந்தடைந் து அந்நெறி கூடலு மாமே. 546.

உடையான் அடியார் அடியா ருடன்போய்ப்
படையார் அழல்மேனிப் பதிசென்று புக்கேன்
கடையார நின்றவர் கண்டறி விப்ப
உடையான் வருகென ஓலம் என் றாரே. 547.

அருமைவல் லோன்கலை (1)ஞானத்துள் தோன்றும்
பெருமைவல் லோன்பிற விச்சுழி நீந்தும்
உரிமைவல் லோன்உணர்ந்து ஊழி இருக்கும்
திருமைவல் லாரொடு சேர்ந்தனன் யானே.
(1)
ஞாலத்துள்.548.

இரண்டாம் தந்திரம் முற்றிற்று

10ம் திருமுறை

திருமந்திரம் (திருமூலர் அருளியது)
மூன்றாம் தந்திரம் (549 - 883)

1. அட்டாங்க யோகம்

(1)
உரைத்தன வற்கரி ஒன்று மூடிய
நிரைத்த இராசி நிரைமுறை எண்ணிப்
(2)
பிரச்சதம் எட்டும் பேசியே நந்தி
நிரைத்த இயமம் நியமஞ்செய் தானே
(1)
உரைத்த நவாக்கிரி
(2)
பிரைச்சதம்.549.

செய்த இயம நியமஞ் சமாதிசென்
றுய்யப் பராசக்தி உத்தர பூருவ
மெய்த கவச நியாசங்கள் முத்திரை
எய்த வுரைசெய்வன் இந்நிலை தானே.550.

அந்நெறி இந்நெறி என்னாதட் டாங்கத்
தன்னெறி சென்று சமாதியி லேநின்மின்
நன்னெறி செல்வார்க்கு ஞானத்தி லேகலாம்
புன்னெறி (1) யாகத்திற் போக்கில்லை யாகுமே
(1)
யாக்கத்திற்.551.

இயம நியமமே எண்ணிலா ஆதனம்
நயமுறு பிராணாயா மம்(1)பிரத்தி யாகாரஞ்
சயமிகு தாரணை தியானஞ் சமாதி
அயமுறும் அட்டாங்க மாவது மாமே
(1)
நண்பிரத்தி.552.

2.
இயமம்

எழுந்துநீர் பெய்யினும் எட்டுத் திசையுஞ்
செழுந்த ணியமங்கள் செய்மினென் றண்ணல்
கொழுந்தண் பவளக் குளிர்சடை யோடே
அழுந்திய நால்வர்க் கருள்புரிந் தானே.553.

கொல்லான்பொய் கூறான் களவிலான் எண்குணன்
நல்லான் அடக்க முடையான் நடுச்செய்ய
வல்லான் பகுந்துண்பான் மாசிலான் கட்காமம்
இல்லான் இயமத் திடையில்நின் றானே.554.

3.
நியமம்

ஆதியை வேதத்தின் அப்பொரு ளானைச்
சோதியை ஆங்கே சுடுகின்ற அங்கியைப்
பாதியுள் மன்னும் பரசக்தி யோடுடன்
நீதி (1) யுணர்ந்து நியமத்த னாமே
(1)
யுணர்ந்த.555.

தூய்மை (1) அருளூண் சுருக்கம் பொறைசெவ்வை
வாய்மை நிலைமை வளர்த்தலே மற்றிவை
காமங் களவு கொலையெனக் காண்பவை
நேமியீ ரைந்து நியமத்த னாமே
(1)
அருளுண்.556.

தவஞ்செபஞ் சந்தோடம் ஆத்திகந் தானஞ்
சிவன்றன் விரதமே சித்தாந்தக் கேள்வி
மகஞ்சிவ பூசையொண் மதிசொல்லீர் ஐந்து
நிவம்பல செய்யின் நியமத்த னாமே.557.

4.
ஆதனம்

பங்கய மாதி பரந்தபல் ஆதனம்
அங்குள வாம்இரு நாலும் அவற்றினுள்
சொங்கில்லை யாகச் சுவத்திக மெனமிகத்
தங்க இருப்பத் தலைவனு மாமே.558.

ஓரணை யப்பத மூருவின் மேலேறிட்
டார வலித்ததன் மேல்வைத் தழகுறச்
சீர்திகழ் கைகள் அதனைத்தன் மேல்வைக்கப்
பார்திகழ் பத்மா சனமென லாகுமே.559.

துரிசில் வலக்காலைத் தோன்றவே மேல்வைத்து
அரிய முழந்தாளி லங்கையை நீட்டி
உருசி யொடுமுடல் செவ்வே யிருத்திப்
பரிசு பெறுமது பத்திரா சனமே.560.

ஒக்க அடியிணை யூருவில் ஏறிட்டு
முக்கி யுடலை முழங்கை தனில்ஏற்றித்
தொக்க அறிந்து துளங்கா திருந்திடிற்
குக்குட ஆசனங் கொள்ளலு மாமே.561.

பாத முழந்தாளிற் பாணி களைநீட்டி
ஆதர வோடும்வாய் அங்காந் தழகுறக்
கோதில் நயனங் கொடிமூக்கி லேயுறச்
சீர்திகழ் சிங்கா தனமெனச் செப்புமே.562.

பத்திரங் கோமுகம் பங்கயங் கேசரி
சொத்திரம் வீரஞ் சுகாதனம் ஓரேழு
(1)
முத்தம மாமுது ஆசனம் எட்டெட்டுப்
பத்தொடு நூறு பலஆ சனமே
(1)
முத்த மயூரமுது.563.

5.
பிராணாயாமம்

ஐவர்க்கு நாயகன் அவ்வூர்த் தலைமகன்
உய்யக்கொண்டேறுங் குதிரைமற் றொன்றுண்டு
மெய்யர்க்குப்பற்றுக்கொடுக்குங் கொடாதுபோய்ப்
பொய்யரைத் துள்ளி விழுத்திடுந் தானே.564.

ஆரிய னல்லன் குதிரை இரண்டுள
வீசிப் பிடிக்கும் விரகறி வாரில்லை
கூரிய நாதன் குருவின் அருள்பெற்றால்
வாரிப் பிடிக்க வசப்படுந் தானே.565.

புள்ளினும் மிக்க புரவியை மேற்கொண்டாற்
கள்ளுண்ண வேண்டாந் தானே களிதருந்
துள்ளி நடப்பிக்குஞ் சோம்பு தவிர்ப்பிக்கும்
உள்ளது சொன்னோம் உணர்வுடை யோருக்கே.566.

பிராணன் மனத்தொடும் பேரா (1)தடங்கிப்
பிராண னிருக்கிற் பிறப்பிறப் பில்லை
பிராணன் மடைமாறிப் பேச்சறி வித்துப்
பிராண னடைபேறு பெற்றுண்டீர் நீரே
(1)
தடக்கிப்.567.

ஏறுதல் பூரகம் ஈரெட்டு வாமத்தால்
ஆறுதல் (1) கும்பம் அறுபத்து நாலதில்
ஊறுதல் முப்பத் திரண்டதி ரேசகம்
மாறுதல் ஒன்றின்கண் வஞ்சக மாமே
(1)
கும்பகம்.568.

வளியினை வாங்கி (1) வயத்தில் அடக்கில்
பளிங்கொத்துக் காயம் பழுக்கினும் பிஞ்சாந்
தௌiயக் குருவின் திருவருள் பெற்றால்
வளியினும் வேட்டு வளியனு மாமே
(1)
வயிற்றில்.569.

எங்கே இருக்கினும் பூரி இடத்திலே
அங்கே யதுசெய்ய ஆக்கைக் கழிவில்லை
அங்கே பிடித்தது விட்டள வுஞ்செல்லச்
சங்கே குறிக்கத் தலைவனு மாமே.570.

ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்குங்
காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாரில்லை
காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாளர்க்குக்
கூற்றை யுதைக்குங் குறியது வாமே.571.

மேல்கீழ் நடுப்பக்க மிக்குறப் பூரித்துப்
பாலாம் இரேசகத் தாலுட் பதிவித்து
மாலாகி யுந்தியுட் கும்பித்து வாங்கவே
ஆலாலம் உண்டான் அருள்பெற லாமே.572.

வாமத்தில் ஈரெட்டு மாத்திரை பூரித்தே
ஏமுற்ற முப்பத் திரண்டும் இரேசித்துக்
காமுற்ற பிங்கலைக் கண்ணாக இவ்விரண்
டோ மத்தால் எட்டெட்டுக் கும்பிக்க உண்மையே.573.

இட்ட தவ்வீ டிளகா திரேசித்துப்
புட்டிப் படத்தச நாடியும் பூரித்துக்
கொட்டிப் பிராணன் அபானனுங் கும்பித்து
நட்டம் இருக்க நமனில்லை நமக்கே.574.

புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை
நெறிப்பட வுள்ளே நின்மல மாக்கில்
உறுப்புச் சிவக்கும் உரோமங் கறுக்கும்
புறப்பட்டுப் போகான் புரிசடை யோனே.575.

கூடம் எடுத்துக் குடிபுக்க மங்கையர்
ஓடுவர் மீளுவர் பன்னிரண் டங்குலம்
நீடுவர் எண்விரல் கண்டிப்பர் நால்விரல்
கூடிக் கொளிற்கோல அஞ்செழுத் தாமே.576.

பன்னிரண் (1) டானை பகலஇர வுள்ளது
பன்னிரண் டானையைப் பாகன் அறிகிலன்
பன்னிரண் டானையைப் பாகன் அறிந்தபின்
பன்னிரண் டானைக்குப் பகல்இர வில்லையே
(1)
டானைக்குப்.577.

6.
பிரத்தியாகாரம்

கண்டுகண் டுள்ளே கருத்துற வாங்கிடிற்
கொண்டுகொண் டுள்ளே குணம்பல காணலாம்
பண்டுகந் தெங்கும் பழமறை தேடியை
இன்றுகண் டிங்கே இருக்கலு மாமே.578.

நாபிக்குக் கீழே (1) பன்னிரெண் டங்குலந்
தாபிக்கு மந்திரந் தன்னை அறிகிலர்
தாபிக்கு மந்திரந் தன்னை அறிந்தபின்
கூவிக்கொண் டீசன் (2) குடியிருந் தானே
(1)
நாலிரண்டண்-குலம்
(2)
குடிபுகுந்தானே.579.

மூலத் திருவிரல் மேலுக்கு முன்நின்ற
பாலித்த யோனிக் கிருவிரற் கீழ்நின்ற
கோலித்த குண்டலி யுள்ளேழுஞ் செஞ்சுடர்
ஞாலத்து நாபிக்கு நால்விரற் கீழதே.580.

நாசிக் கதோமுகம் பன்னிரண் டங்குலம்
நீசித்தம் வைத்து நினையவும் வல்லையேல்
மாசித்த மாயோகம் வந்து தலைப்பெய்துந்
தேகத்துக் கென்றுஞ் சிதைவில்லை (1) யாமே
(1)
யாகுமே
(1)
தானே.581.

சோதி இரேகைச் சுடரொளி தோன்றிடிற்
கோதில் பரானந்தம் என்றே குறிக்கொண்மின்
நேர்திகழ் கண்டத்தே நிலவொளி எய்தினால்
ஓதுவ துன்னுடல் உன்மத்த மாமே.582.

மூலத் துவாரத்தை மொக்கர மிட்டிரு
மேலைத் துவாரத்தின் மேல்மனம் வைத்திரு
வேலொத்த கண்ணை வௌiயில் விழித்திரு
காலத்தை வெல்லுங் கருத்திது தானே.583.

எருவிடும் வாசற் கிருவிரன் மேலே
கருவிடும் வாசற் கிருவிரற் கீழே
உருவிடுஞ் சோதியை உள்கவல் லார்க்குக்
கருவிடுஞ் சோதி கலந்துநின் றானே.584.

ஒருக்கால் உபாதியை ஒண்சோதி தன்னைப்
பிரித்துணர் வந்த உபாதிப் பிரிவைக்
கரைத்துணர் வுன்னல் கரைதல்உள் நோக்கல்
பிரத்தியா காரப் பெருமைய தாமே.585.

புறப்பட்ட வாயுப் புகவிடா வண்ணந்
திறப்பட்டு நிச்சயஞ் சேர்ந்துடன் நின்றால்
உறப்பட்டு நின்றது உள்ளமும் அங்கே
புறப்பட்டுப் போகான் பெருந்தகை யானே.586.


குறிப்பினின் உள்ளே குவலயந் தோன்றும்
வெறுப்பிருள் நங்கி விகிர்தனை நாடுங்
சிறப்புறு சிந்தையைச் சிக்கென் றுணரில்
அறிப்புறு காட்சி அமரரு மாமே.587.

7.
தாரணை

கோணா மனத்தைக் குறிக்கொண்டு கீழ்க்கட்டி
வீணாத்தண் டூடே வௌiயுறத் தானோக்கிக்
காணாக்கண் கேளாச் செவியென் றிருப்பார்க்கு
வாணாள் அடைக்கும் வழியது வாமே.588.

மலையார் சிரத்திடை வானீர் அருவி
நிலையாரப் பாயும் நெடுநாடி யூடே
சிலையார் பொதுவில் திருநட மாடுந்
தொலையாத ஆனந்தச் சோதிகண் டேனே.589.

.
மேலை நிலத்தினாள் வேதகப் பெண்பிள்ளை
மூல நிலத்தில் எழுகின்ற மூர்த்தியை
ஏல எழுப்பி இவளுடன் சந்திக்கப்
பாலனும் ஆவான் (1) பராநந்தி ஆணையே
(1)
பார்நந்தி 590.

கடைவாச லைக்கட்டிக் காலை எழுப்பி
இடைவாசல் நோக்கி இனிதுள் இருத்தி
மடைவாயிற் கொக்குப்போல் வந்தித் திருப்பார்க்
குடையாமல் ஊழி இருக்கலு மாமே.591.

கலந்த உயிருடன் காலம் அறியில்
கலந்த உயிரது காலின் நெருக்கங்
கலந்த உயிரது காலது கட்டிற்
கலந்த உயிருடல் காலமும் நிற்குமே.592.

வாய்திற வாதார் மனத்திலோர் மாடுண்டு
வாய்திறப் பாரே வளியிட்டுப் பாய்ச்சுவர்
வாய்திற வாதார் மதியிட்டு மூட்டுவர்
கோய்திற வாவிடிற் கோழையுமாமே.593.

வாழலு மாம்பல காலும் மனத்திடைப்
போழ்கின்ற வாயு புறம்படாப் பாய்ச்சுறில்
எழுசா லேகம் இரண்டு பெருவாய்தல்
பாழி பெரியதோர் பள்ளி அறையே.594.

நிரம்பிய ஈரைந்தில் ஐந்திவை போனால்
இரங்கி விழித்திருந் தென்செய்வை பேதாய்
வரம்பினைக் கோலி வழிசெய்கு வார்க்குக்
குரங்கினைக் (1) கொட்டை பொதியலு மாமே
(1)
கோட்டைப்.595.

முன்னம் வந்தனர் எல்லாம் முடிந்தனர்
பின்னை வந்தவர்க் கென்ன பிரமாணம்
முன்னுறு கோடி உறுகதி பேசிடில்
என்ன மாயம் இடிகரை நிற்குமே.596.

அரித்த வுடலைஐம் பூதத்தில் வைத்துப்
பொருத்தஐம் பூதஞ்சத் தாதியிற் போந்து
தெரித்த மனாதிசத் தாதியிற் செல்லத்
தரித்தது தாரணை தற்பரத் தோடே.597.

8.
தியானம்

வருமாதி யீரெட்டுள் வந்த தியானம்
பொருவாத புந்தி புலன்போக மேவல்
உருவாய சத்தி பரத்தியான முன்னுங்
குருவார் சிவத்தியானம் யோகத்தின் கூறே.598.

கண்ணாக்கு மூக்குச் செவஞானக் கூட்டத்துட்
பண்ணாக்கி நின்ற பழம்பொருள் ஒன்றுண்(டு)
அண்ணாக்கின் உள்ளே அகண்ட ஔiகாட்டிப்
(1)
புண்ணாக்கி நம்மைப் பிழைப்பித்த வாறே
(1)
பிண்ணாக்கி.599.

ஒண்ணா நயனத்தில் உற்ற ஔiதன்னைக்
கண்ணாரப் பார்த்துக் கலந்தங் கிருந்திடில்
விண்ணாறு வந்து வௌiகண் டிடவோடிப்
பண்ணாமல் நின்றது பார்க்கலு மாமே.600.

ஒருபொழு துன்னார் உடலோ டுயிரை
ஒருபொழு துன்னார் உயிருட் சிவனை
ஒருபொழு துன்னார் சிவனுறை சிந்தையை
ஒருபொழு துன்னார் சந்திரப் (1) பூவே
(1)
பூவையே.601.

மனத்து விளக்கினை மாண்பட ஏற்றிச்
சினத்து விளக்கினைச் செல்ல நெருக்கி
அனைத்து விளக்குந் திரியொக்கத் தூண்ட
மனத்து விளக்கது மாயா விளக்கே.602.

எண்ணா யிரத்தாண்டு யோகம் இருக்கினும்
கண்ணார் அமுதினைக் கண்டறி வாரில்லை
உண்ணாடிக் குள்ளே ஔiயுற (1) நோக்கினால்
கண்ணாடி போலக் (2) கலந்துநின் றானே
(1)
நோக்கிற்
(1)
நோக்கிடிற்
(2)
கலந்திருந்தானே.603.

நாட்டமும் இரண்டும் நடுமூக்கில் வைத்திடில்
வாட்டமும் இல்லை மனைக்கும் அழிவில்லை
ஓட்டமும் இல்லை உணர்வில்லை தானில்லை
(1)
தேட்டமும் இல்லை சிவனவ நாமே
(1)
வேட்டமும்.604.

நயனம் இரண்டும் நாசிமேல் வைத்திட்
டுயர்வெழா வாயுவை உள்ளே அடக்கித்
துயரற நாடியே தூங்கவல் லார்க்குப்
பயனிது காயம் பயமில்லை தானே.605.

மணிகடல் யானை (1) வார்குழல் மேகம்
அணிவண்டு தும்பி வளைபேரி கையாழ்
தணிந்தெழு நாதங்கள் தாமிவை பத்தும்
பணிந்தவர்க் கல்லது பார்க்கஒண் ணாதே
(1)
வளர்க்குழல்.606.

கடலொடு மேகங் களிறொடும் ஓசை
அடவெழும் வீணை அண்டரண் டத்துச்
(1)
சுடர்மன்னு வேணுச் சுரிசங்கின் ஓசை
திடமறி யோகிக்கல் லாற்றெறி யாதே
(1)
சுடர்மனு
(1)
சுடர்மணி.607.

ஈசன் இயல்பும் இமையவர் ஈட்டமும்
பாசம் இயங்கும் பரிந்துய ராய்நிற்கும்
ஓசை யதன்மணம் போல விடுவதோர்
ஓசையாம் ஈசன் உணரவல் லார்க்கே.608.

நாத முடிவிலே நல்லாள் இருப்பது
நாத முடிவிலே நல்யோகம் இருப்பது
நாத முடிவிலே நாட்டம் இருப்பது
நாத முடிவிலே நஞ்சுண்ட கண்டனே.609.

உதிக்கின்ற ஆறினும் உள்ளங்கி ஐந்துந்
துதிக்கின்ற தேசுடைத் தூங்கிருள் நீங்கி
அதிக்கின்ற (1) ஐவருள் நாதம் ஒடுங்கக்
கதிக்கொன்றை ஈசன் கழல்சேர லாமே
(1)
ஐவர் அருள்நாதமோடும்.610.

பள்ளி அறையிற் பகலே இருளில்லை
கொள்ளி அறையிற் கொளுந்தாமற் காக்கலாம்
ஒள்ளி தறியிலோ ரோசனை நீளிது
வெள்ளி அறையில் விடிவில்லை தானே.611.

கொண்ட விரதங் குறையாமற் றானொன்றித்
தண்டுடன் ஓடித் தலைப்பட்ட யோகிக்கு
மண்டல மூன்றினும் ஒக்க வளர்ந்தபின்
பிண்டமும் ஊழி பிரியா திருக்குமே.612.

அவ்வவர் மண்டல மாம்பரி சொன்றுண்டு
அவ்வவர் மண்டலத் தவ்வவர் தேவராம்
அவ்வவர் மண்டலம் அவ்வவர்க் கேவரில்
அவ்வவர் மண்டல மாயமற் றோர்க்கே.613.

இளைக்கின்ற நெஞ்சத் திருட்டறை உள்ளே
முளைக்கின்ற மண்டலம் மூன்றினும் ஒன்றித்
துளைப்பெரும் பாசந் துருவிடு மாகில்
இளைப்பின்றி மார்க்கழி ஏற்றம தாமே.614.

முக்குண மூடற வாயுவை மூலத்தே
சிக்கென மூடித் திரித்துப் பிடித்திட்டுத்
தக்க வலமிடம் நாழிகை சாதிக்க
வைக்கும் உயர்நிலை வானவர் கோனே.615.

நடலித்த நாபிக்கு நால்விரன் மேலே
மடலித்த வாணிக் கிருவிரல் உள்ளே
கடலித் திருந்து கருதவல் லார்கள்
சடலத் தலைவனைத் தாமறிந் தாரே.616.

(1)
அறிவாய சத்தென்னு மாறா றகன்று
செறிவான மாயை சிதைத்தரு ளாலே
பிறியாத பேரரு ளாயிடும் பெற்றி
நெறியான அன்பர் நிலையறிந் தாரே
(1)
அறியா யசந்தென்னு.617.

9.
சமாதி

சமாதி யமாதியிற் றான்செல்லக் கூடும்
சமாதி யமாதியிற் றானெட்டுச் சித்தி
சமாதி யமாதியில் தங்கினோர்க் கன்றே
சமாதி யமாதி தலைப்படுந் தானே.618.

விந்துவும் நாதமும் மேருவில் ஓங்கிடிற்
சந்தியி லான சமாதியிற் கூடிடும்
அந்த மிலாத அறிவின் அரும்பொருள்
சுந்தரச் சோதியுந் தோன்றிடுந் தானே.619.

மன்மனம் எங்குண்டு வாயுவும் அங்குண்டு
மன்மனம் எங்கில்லை வாயுவும் அங்கில்லை
மன்மனத் துள்ளே மகிழ்ந்திருப் பார்க்கு
மன்மனத் துள்ளே மனோலய மாமே.620.

விண்டலர் கூபமும் விஞ்சத் தடவியுங்-
கண்டுணர் வாகக் கருதி யிருப்பர்கள்
செண்டு வௌiயிற் செழுங்கிரி யத்திடை
கொண்டு குதிரை குசைசெறுத் தாரே.621.

மூல நாடி (1) முகட்டல குச்சியுள்
நாலு வாசல் நடுவுள் இருப்பிர்காள்
மேலை வாசல் வௌiயுறக் கண்டபின்
காலன் வார்த்தை கனாவிலும் இல்லையே
(1)
முக்கடல்.622.

மண்டலம் ஐந்து வரைகளும் ஈராறு
கொண்டிட நிற்குங் குடிகளும் ஆறெண்மர்
கண்டிட நிற்குங் கருத்து நடுவாக
உண்டு நிலாவிடும் ஓடும் பதத்தையே.623.

பூட்டொத்து மெய்யிற் பொறிபட்ட வாயுவைத்
தேட்டற்ற வந்நிலஞ் சேரும் படிவைத்து
நாட்டத்தை மீட்டு நயனத் திருப்பார்க்குத்
தோட்டத்து மாம்பழந் தூங்கலு மாமே.624.

உருவறி யும்பரி சொன்றுண்டு வானோர்
கருவரை பற்றிக் கடைந்தமு துண்டார்
அருவரை யேறி அமுதுண்ண மாட்டார்
திருவரை யாமனந் தீர்ந்தற்ற வாறே.625.

நம்பனை யாதியை நான்மறை ஓதியைச்
செம்பொனின் உள்ளே திகழ்கின்ற சோதியை
அன்பினை யாக்கி யருத்தி ஒடுக்கிப்போய்க்
கொம்பேறிக் கும்பிட்டுக் கூட்டமிட் டாரே.626.

மூலத்து மேலது முச்சது ரத்தது
காலத் திசையிற் கலக்கின்ற சந்தினில்
மேலைப் பிறையினில் நெற்றிநேர் நின்ற
கோலத்தின் கோலங்கள் வெவ்வேறு கொண்டதே.627.

கற்பனை யற்றுக் கனல்வழி யேசென்று
சிற்பனை எல்லாஞ் சிருட்டித்த பேரொளிப்
பொற்பினை நாடிப் புணர்மதி யோடுற்றுத்
தற்பர மாகத் தகுந்தண் சமாதியே.628.

தலைப்பட் டிருந்திடத் தத்துவங் கூடும்
வலைப்பட் டிருந்திடும் மாதுநல் லாளுங்
குலைப்பட் டிருந்திடுங் கோபம் அகலுந்
துலைப்பட் டிருந்திடுந் தூங்கவல் லார்க்கே.629.

சோதித் தனிச்சுட ராய்நின்ற தேவனும்
ஆதியும் (1) உள்நின்ற சீவனு மாகுமால்
ஆதிப் பிரமன் பெருங்கடல் வண்ணனும்
ஆதி அடிபணிந் தன்புறு வாரே
(1)
முன்நின்ற.630.

சமாதிசெய் வார்க்குத் தகும்பல யோகஞ்
சமாதிகள் வேண்டாம் இறையுட னேகிற்
சமாதிதா னில்லை தானவ னாகிற்
சமாதியில் எட்டெட்டுச் சித்தியும் எய்துமே.631.

10.
அட்டாங்கயோகப் பேறு

இயமம்
போதுகந் தேறும் புரிசடை யானடி
யாதுகந் தாரம ராபதிக் கேசெல்வர்
ஏதுகந் தானிவன் என்றருள் செய்திடு
மாதுகந் தாடிடு மால்விடை யோனே.632.

நியமம்
பற்றிப் பதத்தன்பு வைத்துப் பரன்புகழ்
கற்றிருந் தாங்கே கருது மவர்கட்கு
முற்றெழுந் தாங்கே முனிவர் எதிர்வரத்
தெற்றுஞ் சிவபதஞ் சேரலு மாமே.633.

ஆதனம்
வந்தித் தவஞ்செய்து வானவர் கோவாய்த்
திருந்தம ராபதிச் செல்வன் இவனெனத்
தருந்தண் முழவங் குழலும் இயம்ப
இருந்தின்பம் எய்துவர் ஈசன் அருளே.634.

பிராணாயாமம்
செம்பொற் சிவகதி சென்றெய்துங் காலத்துக்
கும்பத் தமரர் குழாம்வந் தெதிர்கொள்ள
எம்பொற் றலைவன் இவனா மெனச்சொல்ல
இன்பக் கலவி இருக்கலு மாமே.635.

பிரத்தியாகாரம்
சேருறு காலந் திசைநின்ற தேவர்கள்
ஆரிவன் என்ன அரனாம் இவனென்ன
ஏருறு தேவர்கள் எல்லாம் எதிர்கொள்ளக்
காருறு கண்டனை மெய்கண்ட வாறே.636.

தாரணை
நல்வழி நாடி நமன்வழி மாற்றிடுஞ்
சொல்வழி யாளர் சுருங்காப் பெருங்கொடை
இல்வழி யாளர் இமையவர் எண்டிசைப்
பல்வழி எய்தினும் பார்வழி யாகுமே.637.

தியானம்
தூங்க(1)வல் லார்க்கும் துணையேழ் புவனமும்
வாங்கவல் லார்க்கும் வலிசெய்து (2) நின்றிடுந்
தேங்க(3)வல் லார்க்கும் திளைக்கும் அமுதமுந்
தாங்கவல் லார்க்குந் தன்னிட மாமே
(1)
வல்லார்க்குத்
(1)
நின்றிட்டுத்
(1)
வல்லார்க்குத்.638.

சமாதி
காரிய மான உபாதியைத் தாங்கடந்
தாரிய காரணம் ஏழுந்தன் பாலுற
ஆரிய காரண மாய தவத்திடைத்
தாரியல் தற்பரஞ் சேர்தல் சமாதியே.639.

11.
அட்டமா சித்தி

பரகாயப் பிரவேசம்
பணிந்தெண் திசையும் பரமனை நாடித்
துணிந்தெண் திசையுந் தொழுதெம் பிரானை
அணிந்தெண் திசையினும் அட்டமா சித்தி
தணிந்தெண் திசைசென்று தாபித்த வாறே.640.

பரிசறி வானவர் பண்பன் அடியெனத்
துரிசற நாடியே தூவௌi கண்டேன்
அரிய தெனக்கில்லை அட்டமா சித்தி
பெரிதருள் செய்து பிறப்பறுத் தானே.641.

குரவன் அருளிற் குறிவழி மூலன்
பரையின் (1) மணமிகு சங்கட்டம் பார்த்துத்
தெரிதரு சாம்பவி கேசரி சேரப்
பெரிய சிவகதி பேறெட்டாஞ் சித்தியே
(1)
மனமிகு சக்கட்ட மார்த்துத்.642.

காயாதி பூதங் கலைகால மாயையில்
ஆயா தகல அறிவொன் றனாதியே
ஓயாப் பதியதன் உண்மையைக் கூடினால்
வீயாப் பரகாயம் மேவலு மாமே.643.

இருபதி நாயிரத் தெண்ணூறு பேதம்
மருவிய கன்ம மாமந்த யோகந்
தருமிவை காய உழைப்பாகுந் தானே
(1)
அருமிகு நான்காய் அடங்குமா சித்திக்கே
(1)
அருமிரு.644.

மதிதனில் ஈராறாய் மன்னுங் கலையின்
உதய மதுநா லொழியவோ ரெட்டுப்
பதியுமஈ ராறாண்டு பற்றறப் பார்க்கில்
திதமான ஈராறு சித்திக ளாமே.645.

நாடும் பிணியாகு நஞ்சனஞ் சூழ்ந்தக்கால்
நீடுங் கலைகல்வி நீள்மேதை கூர்ஞானம்
பீடொன்றி னால்வாயாச் சித்திபே தத்தின்
நீடுங் துரங்கேட்டல் நீண்முடி வீராறே.646.

ஏழா னதிற்சண்ட வாயுவின் வேகியாந்
தாழா நடைபல யோசனை சார்ந்திடுஞ்
சூழான ஓரெட்டில் தோன்றா நரைதிரை
தாழான ஒன்பதிற் றான்பர காயமே.647.

ஈரைந்திற் பூரித்துத் தியான உருத்திரன்
(1)
ஏர்வொன்று பன்னொன்றில் ஈராறாம் எண்சித்தி
சீரொன்று மேலேழ் கீழேழ் புவிச்சென்று
(2)
ஏருன்று வியாபியாய் நிற்றல்ஈ ராறே
(1)
நேரொன்று
(2)
ஓரொன்று
(3)
ஏரொன்று.648.

தானே அணுவுஞ் சகத்துத்தன் (1) நொய்ம்மையும்
மானாக் (2) கனமும் பரகாயத் தேகமுந்
தானாவ தும்பர காயஞ்சேர் தன்மையும்
ஆனாத வுண்மையும் (3) வியாபியு மாம்எட்டே
(1)
நோன்மையும்
(2)
ககனமும்
(3)
வியாப்பிய.649.

தாங்கிய தன்மையுந் தானணுப் பல்லுயிர்
வாங்கிய காலத்து மற்றோர் குறையில்லை
யாங்கே எழுந்தோம் அவற்றுள் எழுந்துமிக்
(1)
கோங்கி வரமுத்தி முந்திய வாறே
(1)
கோண்-கிய வாமுத்தி.650.

முந்திய முந்நூற் றறுபது காலமும்
வந்தது நாழிகை வான்முத லாயிடச்
சிந்தை (1) செயச்செய மண்முதல் தேர்ந்தறிந்
துந்தியில் நின்று உதித்தெழு மாறே
(1)
செய் மண் முதல் தேர்ந்தறி வார்வல முந்தியுள்
(2)
துந்தியுள்.651.

சித்தந் திரிந்து சிவமய மாகியே
முத்தந் தெரிந்துற்ற மோனர் சிவமுத்தர்
சுத்தம் பெறலாம் ஐந்தில் தொடக்கற்றோர்
சித்தம் பரத்தில் திருநடத் தோரே.652.

ஒத்தஇவ் வொன்பது வாயுவும் ஒத்தன
ஒத்தஇவ் வொன்பதின் மிக்க தனஞ்செயன்
ஒத்தஇவ் வொன்பதில் ஒக்க இருந்திட
ஒத்த வுடலும் உயிரும் இருந்ததே.653.

இருக்குந் தனஞ்செயன் ஒன்பது காலில்
இருக்கும் இருநூற் றிருபத்து மூன்றாய்
இருக்கு (1) முடலி லிருந்தில வாகில்
இருக்கும் உடலது வீங்கி வெடித்ததே
(1)
முடலீ திருந்தில.654.

வீங்குங் கழலை சிரங்கொடு குட்டமும்
வீங்கும் வியாதிகள் சோகை பலவதாய்
வீங்கிய வாதமுங் கூனு (1) முடமதாய்
வீங்கு வியாதிகள் கண்ணில் மருவியே
(1)
முடமதாம்.655.

கண்ணில் வியாதி யுரோகந் தனஞ்செயன்
கண்ணிலிவ் வாணிகள் காச மவனல்லன்
கண்ணினிற் கூர்மன் கலந்தில நாதலாற்
கண்ணினிற் சோதி கலந்ததும் இல்லையே.656.

நாடியின் ஓசை நயனம் இருதயந்
தூடி யளவுஞ் சுடர்விடு சோதியைத்
தேவருள் ஈசன் திருமால் பிரமனும்
ஓவற நின்றங் குணர்ந்திருந் (1)தாரே
(1)
தார்க்களே.657.

ஒன்பது வாசல் உடையதோர் பிண்டத்துள்
ஒன்பது நாடி யுடையதோ ரோரிடம்
ஒன்பது நாடி ஒடுங்கவல் லார்கட்(கு)
ஒன்பது (1) காட்சி யிலைபல வாமே
(1)
வாசல் உலைநலமாமே.658.

ஓங்-கிய அங்கிக்கீழ் ஒண்சுழு னைச்செல்ல
வாங்கி இரவி மதிவழி ஓடிடத்
தாங்கி உலகங்கள் ஏழுந் தரித்திட
ஆங்கது சொன்னோம் (1) அருவழி யோர்க்கே
(1)
அறிவுடை.659.

தலைப்பட்ட வாறண்ணல் தையலை நாடி
வலைப்பட்ட பாசத்து வன்பிணை மான்போல்
துலைப்பட்ட நாடியைத் தூவழி செய்தால்
விலைக்குண்ண வைத்ததோர் வித்தது வாமே.660.

ஓடிச்சென் றங்கே ஒருபொருள் கண்டவர்
நாடியி னுள்ளாக நாதம் எழுப்புவர்
தேடிச்சென் றங்கே தேனை முகந்துண்டு
பாடியுள் நின்ற பகைவரைக் கட்டுமே.661.

கட்டிட்ட தாமரை ஞாளத்தில் ஒன்பது
மட்டிட்ட (1) கன்னியர் மாதுடன் சேர்ந்தனர்
(2)
கட்டிட்டு நின்று களங்கனி யூடுபோய்ப்
பொட்டிட்டு நின்று பூரண மானதே
(1)
கண்ணியர்
(2)
தட்டிட்டு நின்று தளண்-களி னுடுபோய்ப்.662.

பூரண சத்தி ஏழுமூன் றறையாக
ஏரணி கன்னியர் எழுநூற்றஞ் சாக்கினார்
நாரணன் நான்முக னாதிய ஐவர்க்குங்
காரண மாகிக் கலந்து விரிந்ததே.663.

விரிந்து குவிந்து விளைந்தஇம் மங்கை
கரந்துள் எழுந்து கரந்தங் கிருக்கிற்
பரந்து குவிந்தது பார்முதற் பூதம்
இரைந்தெழு வாயு விடத்தினில் (1) ஒடுங்கே
(1)
ஓண்-கே.664.

இடையொடு பிங்கலை என்னும் இரண்டு
மடைபடு வாயுவு மாறியே நிற்குந்
தடையவை (1) யாறேழுந் தண்சுட ருள்ளே
மிடைவளர் மின்கொடி தன்னில் ஒடுங்கே
(1)
யாறெழுந்.665.

ஒடுங்கி ஒருங்கி யுணர்ந்தங் கிருக்கில்
மடங்கி அடங்கிடும் வாயு வதனுள்
மடங்கி மடங்கிடு மன்னுயி ருள்ளே
நடங்கொண்ட (1) கூத்தனும் நாடுகின் றானே
(1)
கூத்தனை நாடுகின் றேனே.666.

நாடியின் உள்ளே நாதத் தொனியுடன்
தேடி யுடன்சென்றத் திருவினைக் கைக்கொண்டு
பாடியுள் நின்ற பகைவரைக் கட்டிட்டு
மாடி ஒருகை மணிவிளக் கானதே.667.

அணுமாதி சித்திக ளானவை கூறில்
அணுவில் அணுவின் பெருமையில் நேர்மை
இணுகாத வேகார் பரகாய மேவல்
(1)
அணுவத் தனையெங்குந் (2)தானாத லென்றெட்டே
(1)
அணுமைத்
(2)
தானாக.668.

எட்டா கியசித்தி யோரெட்டி யோகத்தாற்
கிட்டாப் பிராணனே செய்தாற் கிடைத்திடும்
ஒட்டா நடுநாடி மூலத்த னல்பானு
விட்டான் மதியுண்ண வும்வரு மேலதே.669.

சித்திக ளெட்டன்றிச் சேரெட்டி யோகத்தாற்
புத்திக ளானவை எல்லாம் புலப்படுஞ்
சித்திகள் எண்சித்தி தானாந் திரிபுரை
சத்தி அருள்தரத் தானுள வாகுமே.670.

அணிமா
எட்டிவை தன்னோ டெழிற்பரங் கைகூடப்
பட்டவர் சித்தர் பரலோகஞ் சேர்தலால்
இட்டம துள்ளே (1) இறுக்கல் பரகாட்சி
எட்டு வரப்பு மிடந்தானின் றெட்டுமே
(1)
இருக்கல்.671.

மந்தர மேறு மதிபானு வைமாற்றிக்
கந்தாய்க் குழியிற் கசடற வல்லார்க்குத்
தந்தின்றி நற்(1)கா மியலோகஞ் சார்வாகும்
அந்த வுலகம் அணிமாதி யாமே
(1)
காய மிய.672.

முடிந்திட்டு வைத்து முயங்கிலோ ராண்டில்
அணிந்த அணிமாகை தானாம் இவனுந்
தணிந்தவப் பஞ்சினுந் தானொய்ய தாகி
மெலிந்தங் கிருந்திடும் வெல்லவொண் ணாதே.673.

லகிமா

ஆகின்ற வத்தனி நாயகி தன்னுடன்
போகின்ற தத்துவம் எங்கும் புகல தாய்ச்
சாகின்ற காலங்கள் தன்வழி நின்றிடின்
மாய்கின்ற தையாண்டின் மாலகு வாகுமே.674.

மாலகு வாகிய மாயனைக் கண்டபின்
தானொளி யாகித் தழைத்தங் கிருந்திடும்
பாலொளி யாகிப் பரந்தெங்கு நின்றது
மேலொளி யாகிய மெய்ப்பொருள் காணுமே.675.

மகிமா
மெய்ப்பொருள் சொல்லிய மெல்லிய லாளுடன்
தற்பொரு ளாகிய தத்துவங் கூடிடக்
கைப்பொரு ளாகக் கலந்திடு மோராண்டின்
மைப்பொரு ளாகு மகிமாவ தாகுமே.676.

ஆகின்ற காலொளி யாவது கண்டபின்
போகின்ற காலங்கள் போவது மில்லையாம்
மேனின்ற காலம் வௌiயுற (1) நின்றன
(2)
தானின்ற காலங்கள் தன்வழி யாகுமே
(1)
நின்றபின்
(2)
தாழ்கின்ற.677.

தன்வழி யாகத் தழைத்திடு ஞ்aனமுந்
தன்வழி (1) யாகத் தழைத்திடும் வையகந்
தன்வழி யாகத் தழைத்த பொருளெல்லாந்
தன்வழி தன்னரு ளாகிநின் றானே
(1)
மீதாகத்.678.

பிராத்தி
நின்றன தத்துவ நாயகி தன்னுடன்
கண்டன பூதப் (1) படையவை யெல்லாங்
கொண்டவை யோராண்டு கூட இருந்திடில்
விண்டது வேநல்ல பிராத்தி யதாகுமே
(1)
படையானவையெலாண்-.679.

கரிமா
ஆகின்ற மின்னொளி யாவது கண்டபின்
பாகின்ற பூவிற் பரப்பவை காணலா
(1)
மேகின்ற காலம் வௌiயுற நின்றது
போகின்ற காலங்கள் போவது மில்லையே
(1)
மேனின்ற.680.

போவதொன் றில்லை வருவது தானில்லை
சாவதொன் றில்லை தழைப்பது தானில்லை
தாமத மில்லை தமரகத் தின்னொளி
யாவது மில்லை யறிந்துகொள் வார்க்கே.681.

அறிந்த பராசத்தி யுள்ளே அமரில்
பறிந்தது பூதப் படையவை யெல்லாங்
குவிந்தவை யோராண்டு கூட இருக்கில்
(1)
விரிந்தது பரகாய மேவலு மாமே
(1)
விரிந்த.682.

பிராகாமியம்
ஆன விளக்கொளி யாவ தறிகிலர்
மூல விளக்கொளி முன்னே யுடையவர்
கான விளக்கொளி கண்டுகொள் வார்கட்கு
மேலை விளக்கொளி வீடௌi தாநின்றே.683.

ஈசத்துவம்
நின்ற சதாசிவ நாயகி தன்னுடன்
கண்டன பூதப் படையவை எல்லாங்
கொண்டவை யோராண்டு கூடி யிருந்திடிற்
பண்டையவ் வீசன் தத்துவ மாகுமே.684.

ஆகின்ற சந்திரன் (1) தன்னொளி யாயவன்
ஆகின்ற சந்திரன் தட்பமு மாயிடும்
ஆகின்ற சந்திரன் தன்கலை கூடிடில்
ஆகின்ற சந்திரன் தானவ நாமே
(1)
தண்ணளி.685.

தானே படைத்திட வல்லவ னாயிடுந்
தானே யளித்திட வல்லவ னாயிடுந்
தானே சங்காரத் தலைவனு மாயிடுந்
தானே யிவனெனுந் தன்மைய னாமே.686.

தன்மைய தாகத் தழைத்த கலையினுள்
பன்மைய தாகப் பரந்தஐம் பூதத்தை
வன்மைய தாக மறித்திடில் ஓராண்டின்
மென்மைய தாகிய மெய்பொருள் காணுமே.687.

வசித்துவம்
மெய்ப்பொரு ளாக விளைந்தது வேதெனின்
நற்பொரு ளாகிய நல்ல வசித்துவங்
கைப்பொரு ளாகக் கலந்த உயிர்க்கெல்லாந்
தற்பொரு ளாகிய தன்மைய னாகுமே.688.

தன்மைய தாகத் தழைத்த பகலவன்
மென்மைய தாகிய மெய்ப்பொருள் கண்டிடின்
பொன்மைய தாகப் புலன்களும் போயிட
நன்மைய தாகிய நற்கொடி காணுமே.689.

நற்கொடி யாகிய நாயகி தன்னுடன்
அக்கொடி யாகம் அறிந்திடில் ஓராண்டு
பொற்கொடி யாகிய புவனங்கள் போய்வருங்
கற்கொடி யாகிய காமுக னாமே.690.

காமரு தத்துவ மானது வந்தபின்
பூமரு கந்தம் புவனம தாயிடும்
மாமரு (2) வுன்னிடை மெய்த்திடு மானனாய்
நாமரு வுமஔi நாயக மானதே
(1)
வுன்னிடம் எய்திடு.691.

நாயக மாகிய நல்லொளி கண்டபின்
தாயக மாகத் தழைத்தங் கிருந்திடும்
போயக மான புவனங்கள் கண்டபின்
பேயக மாகிய பேரொளி காணுமே.692.

பேரொளி யாகிய பெரியஅவ் (1) வேட்டையும்
பாரொளி யாகப் பதைப்புறக் கண்டவன்
தாரொளி யாகத் தரணி முழுதுமாம்
ஓரொளி யாகிய காலொளி காணுமே
(1)
வெட்டையும்.693.

காலோ டுயிருங் கலக்கும் வகைசொல்லிற்
காலது அக்கொடி நாயகி தன்னுடன்
காலது ஐஞ்நூற் றொருபத்து மூன்றையங்
காலது (1) வேண்டிக் கொண்டஇவ் வாறே
(1)
பெண்மண்டிக்.694.

ஆறது வாகும் அமிர்தத் தலையினுள்
ஆறது ஆயிர முந்நூற் றொடைஞ்சுள
ஆறது வாயிர மாகு மருவழி
ஆறது வாக வளர்ப்ப திரண்டே.695.

இரண்டினின் மேலே சதாசிவ நாயகி
இரண்டது கால்கொண் டெழுவகை சொல்லில்
இரண்டது ஆயிரம் ஐம்பதோ டொன்றாய்த்
திரண்டது காலம் எடுத்ததும் அஞ்சே.696.

அஞ்சுடன் அஞ்சு முகமுள நாயகி
அஞ்சுடன் அஞ்சது வாயுத மாவது
அஞ்சது வன்றி இரண்டது வாயிரம்
அஞ்சது காலம் எடுத்துளும் ஒன்றே.697.

ஒன்றது வாகிய தத்துவ நாயகி
ஒன்றது கால்கொண் டூர்வகை சொல்லிடில்
ஒன்றது வென்றிகொள் ஆயிரம் ஆயிரம்
ஒன்றது காலம் எடுத்துளும் முன்னே.698.

முன்னெழும் அக்கலை நாயகி தன்னுடன்
முன்னுறு வாயு முடிவகை சொல்லிடின்
முன்னுறும் (1) ஐம்பத் தொன்றுடன் அஞ்சுமாய்
முன்னுறு வாயு முடிவகை யாமே
(1)
ஐம்பதொ டொன்றுடன்.699.

ஆய்வரும் அத்தனி நாயகி தன்னுடன்
ஆய்வரு வாயு அளப்பது சொல்லிடில்
ஆய்வரும் ஐஞ்நூற்று முப்பதொ டொன்பது
மாய்வரு வாயு வளப்புள் ளிருந்ததே.700.

இருநிதி யாகிய எந்தை யிடத்து
இருநிதி வாயு இயங்கு நெறியில்
இருநூற்று முப்பத்து மூன்றுடன் அஞ்சாய்
இருநிதி வாயு இயங்கும் எழுத்தே.701.

எழுகின்ற சோதியுள் நாயகி தன்பால்
எழுகின்ற வாயு இடமது சொல்லில்
எழுநூற் றிருபத் தொன்பா னதுநாலாய்
எழுந்துடன் அங்கி இருந்ததிவ் வாறே.702.

ஆறது கால்கொண் டிரதம் விளைத்திடும்
ஏழது கால்கொண் டிரட்டி இறக்கிட
எட்டது கால்கொண் டிடவகை (1) யொத்தபின்
ஒன்பது மாநிலம் ஒத்தது வாயுவே
(1)
ஏற்றபின்.703.

சந்திரன் சூரியன் தற்பரன் தாணுவிற்
சந்திரன் தானுந் தலைப்படுந் தன்மையைச்
சந்தியி லேகண்டு தானாஞ் சகமுகத்
துந்திச் சமாதி யுடையொளி யோகியே.704.

அணங்கற்ற மாதல் அருஞ்சன நீவல்
வணங்குற்ற கல்விமா ஞான மிகுத்தல்
(1)
சுணங்குற்ற வாயர் சித்திதூரங் கேட்டல்
நுணங்கற் றிரோதல்கால் வேகத்து நுந்தலே
(1)
சிணண்-குற்ற வாயர் சித்திதாண்- கேட்டல்.705.

மரணஞ் (1) சரைவிடல் வண்பர காயம்
இரணஞ் சேர்பூமி இறந்தோர்க் களித்தல்
அரணன் (2) திருவுற வாதன்மூ வேழாங்
(3)
கரனுறு கேள்வி கணக்கறிந் தோனே
(1)
சிறைவிடல்
(2)
திருவுரு
(3)
கரணுறு.706.

ஓதம் ஒலிக்கும் உலகை வலம்வந்து
பாதங்கள் நோவ நடந்தும் பயனில்லை
காதலில் அண்ணலைக் காண இனியவர்
நாதன் இருந்த நகரறி வாரே. .707.

மூல முதல்வேதா மாலரன் முன்னிற்கக்
கோலிய ஐம்முகன் கூறப் பரவிந்து
சாலப் பரநாதம் விந்துத் தனிநாதம்
பாலித்த சத்தி பரைபரன் பாதமே.708.

ஆதார யோகத் ததிதே வொடுஞ்சென்று
மீதான தற்பரை மேவும் பரனொடு
மேதாதி யீரெண் கலைசெல்ல மீதொளி
ஓதா அசிந்தமீ தானந்த யோகமே.709.

மதியமும் ஞாயிறும் வந்துடன் கூடித்
துதிசெய் பவரவர் தொல்வா னவர்கள்
விதியது செய்கின்ற மெய்யடி யார்க்குப்
பதியது காட்டும் பரமன்நின் றானே.710.

பொட்டெழக் குத்திப் பொறியெழத் தண்டிட்டு
(2)
நட்டறி வார்க்கு நமனில்லை தானே
கட்டவல் லார்கள் (1) கரந்தெங்குந் தானாவர்
மட்டவிழ் தாமரை யுள்ளே மணஞ்செய்து
(1)
கலந்தெண்-குந்
(2)
நட்டிடு.711.

12.
கலை நிலை

காதல் வழிசெய்த கண்ணுதல் அண்ணலைக்
காதல் வழிசெய்து கண்ணுற நோக்கிடிற்
காதல் வழிசெய்து கங்கை வழிதருங்
காதல் வழிசெய்து காக்கலு மாமே.712.

காக்கலு மாகுங் கரணங்கள் நான்கையுங்
காக்கலு மாகுங் கலைபதி நாறையுங்
காக்கலு மாகுங் கலந்தநல் வாயுவுங்
காக்கலு மாகுங் கருத்துற நில்லே.713.

நிலைபெற நின்றது நேர்தரு வாயு
சிலைபெற நின்றது தீபமும் ஒத்துக்
கலைவழி நின்ற கலப்பை அறியில்
(1)
அலைவற வாகும் வழியிது வாமே
(1)
மலைவறி.714.

புடையொன்றி நின்றிடும் பூதப் பிரானை
மடையொன்றி நின்றிட வாய்த்த வழியுஞ்
சடையொன்றி நின்றஅச் சங்கர நாதன்
விடையொன்றி லேறியே வீற்றிருந் தானே.715.

இருக்கின்ற காலங்கள் ஏதும் அறியார்
பெருக்கின்ற காலப் பெருமையை நோக்கி
ஒருக்கின்ற வாயு வொளிப்பெற நிற்கத்
தருக்கொன்றி நின்றிடுஞ் சாதக னாமே.716.

சாதக மானஅத் தன்மையை நோக்கியே
மாதவ மான வழிபாடு செய்திடும்
போதக மாகப் புகலுறப் பாய்ச்சினால்
வேதக மாக விளைந்து கிடக்குமே.717.

கிடந்தது தானே கிளர்பயன் மூன்று
நடந்தது தானேஉள் நாடியுள் நோக்கிப்
படர்ந்தது தானே பங்கய மாகத்
தொடர்ந்தது தானேஅச் சோதியுள் நின்றே.718.

தனே எழுந்தஅத் தத்துவ நாயகி
ஊனே வழிசெய்தெம் உள்ளே யிருந்திடும்
வானோர் உலகீன்ற அம்மை மதித்திடத்
தேனே பருகிச் சிவாலய மாகுமே.719.

திகழும் படியே செறிதரு வாயு
அழியும் படியை அறிகில ராரும்
அழியும் படியை அறிந்தபின் நந்தி
திகழ்கின்ற வாயுவைச் சேர்தலு மாமே.720.

சோதனை தன்னில் துரிசறிக் காணலாம்
நாதனும் நாயகி தன்னிற் பிரியுநாள்
(1)
சாதன மாகுங் குருவை வழிபட்டு
மாதன மாக மதித்துக்கொள் ளீரே
(1)
சாதக மாகுண்- குருவழி பட்டு.721.

ஈராறு கால்கொண் டெழுந்த புரவியைப்
பேராமற் கட்டிப் பெரிதுண்ண வல்லீரேல்
நீரா யிரமும் நிலமாயி ரத்தாண்டும்
பேராது காயம் பிரான்நந்தி ஆணையே.722.

ஓசையில் ஏழும் ஔiயிங்கண் ஐந்தும்
நாசியில் மூன்றும் நாவில் இரண்டுந்
தேசியுந் தேசனுந் தன்னிற் பிரியுநாள்
மாசறு சோதி வகுத்துவைத் தானே.723.

13.
காயசித்தி உபாயம்

உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே.724.

உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்
உடம்பினுக் குள்ளே யுறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான் என்று
உடம்பினை யானிருந் தோம்புகின் றேனே.725.

(1)
சுழற்றிக் கொடுக்கவே சுத்திக் கழியுங்
கழற்றி மலத்தைக் கமலத்துப் பூரித்து
உழற்றிக் கொடுக்கும் உபாயம் அறிவார்க்கு
அழற்றித் தவிர்ந்துடல் அஞ்சன மாமே
(1)
சுழித்துக்.726.

அஞ்சனம் போன்றுட லையறு மந்தியில்
வஞ்சக வாத மறுமத்தி யானத்திற்
செஞ்சிறு காலையிற் செய்திடிற் பித்தறும்
நஞ்சறச் சொன்னோம் நரைதிரை நாசமே.727.

மூன்று மடக்குடைப் பாம்பிரண் டெட்டுள
வேன்ற வியந்திரம் பன்னிரண் டங்குலம்
(1)
நான்றவிம் முட்டை யிரண்டையங் கட்டியிட்டு
ஊன்றி யிருக்க உடம்பழி யாதே.728.

(1)
நான்றவிழ்

நூறும் அறுபதும் ஆறும் வலம்வர
நூறும் அறுபதும் ஆறும் இடம்வர
நூறும் அறுபதும் ஆறும் எதிரிட
நூறும் அறுபது மாறும் புகுவரே.729.

சத்தியார் கோயி லிடம்வலஞ் சாதித்தான்
மத்தியா னத்திலே (1) வாத்தியங் கேட்கலாந்
தித்தித்த கூத்துஞ் சிவனும் வௌiப்படுஞ்
சத்தியஞ் (2) சொன்னோஞ் சதாநந்தி ஆணையே
(1)
வாக்கியண்-
(2)
சொன்னேன்.730.

திறத்திறம் விந்து திகழு மகார
முறப்பெற வேநினைந் தோதுஞ் சகார
மறிப்பது மந்திர மன்னிய நாத
மறப்பெற யோகிக் கறநெறி யாமே.731.

உந்திச் சுழியி (1) னுடனேர் பிராணனைச்
சிந்தித் தெழுப்பிச் சிவமந திரத்தினால்
முந்தி முகட்டின் நிறுத்தி அபானனைச்
சிந்தித் தெழுப்பச் சிவனவ நாமே
(1)
னுடனே.732.

மாறா மலக்குதந் தன்மே லிருவிரற்
கூறா இலங்கத்தின் கீழே குறிக்கொண்மின்
ஆறா உடம்பிடை அண்ணலும் அங்குளன்
கூறா உபதேசங் கொண்டது காணுமே.733.

நீல நிறனுடை நேரிழை யாளொடுஞ்
சாலவும் புல்லிச் சதமென் றிருப்பார்க்கு
ஞாலம் அறிய நரைதிரை மாறிடும்
பாலனு மாவர் பராநந்தி ஆணையே.734.

அண்டஞ் சுருங்கில் அதற்கோ ரழிவில்லை
பிண்டஞ் சுருங்கிற் பிராணன் நிலைபெறும்
உண்டி சுருங்கில் உபாயம் பலவுள
கண்டங் கறுத்த கபாலியு மாமே.735.

பிண்டத்துள் உற்ற பிழக்கடை வாசலை
அண்டத்துள் உற்று அடுத்தடுத் தேகிடில்
வண்டிச் சிக்கு மலர்க்குழல் மாதரார்
கண்டிச் சிக்குநற் காயமு மாமே.736.

சுழலும் பெருங்கூற்றுத் தொல்லைமுன் சீறி
அழலும் இரத்ததுள் அங்கியுள் ஈசன்
கழல்கொள் திருவடி காண்குறில் ஆங்கே
நிழலுளுந் தெற்றுளும் நிற்றலு மாமே.737.

நான்கண்ட வன்னியும் நாலு கலையேழுந்
தான்கண்ட (1) வாயுச் சரீர முழுதொடும்
ஊன்கண்டு கொண்ட வுணர்வு மருந்தாக
மாங்கன்று நின்று வளர்க்கின்ற வாறே
(1)
வாயுவுன்ய் சரீர.738.

ஆகுஞ் சனவேத சத்தியை அன்புற
(1)
நீகொள்ளின் நெல்லின் வளர்கின்ற நேர்மையைப்
பாகு படுத்திப் பல்கோடி களத்தினால்
ஊழ்கொண்ட மந்திரத் தன்னால் ஒடுங்கே
(1)
நீர்க்கொள நெல்லின்.739.

14.
கால சக்கரம்

மதிவட்ட மாக வரையைந்து நாடி
இதுவிட்டிங் கீரா றமர்ந்த அதனாற்
பதிவட்டத் துள்நின்று பாலிக்கு மாறு
மதுவிட்டுப் போமாறு மாயலுற் றேனே.740.

உற்றறி வைந்தும் உணர்ந்தறி வாறேழுங்
கற்றறி வெட்டுங் கலந்தறி வொன்பதும்
பற்றிய பத்தும் பலவகை நாழிகை
(1)
அற்ற தறியா தழிகின்ற வாறே
(1)
அற்றறியா.741.

அழிகின்ற ஆண்டவை ஐயைஞ்சு மூன்று
மொழிகின்ற முப்பத்து மூன்றென்ப தாகுங்
கழிகின்ற காலறு பத்திரண் டென்ப
தெழுகின்ற ஈரைம்ப தெண்ணற் றிருந்தே.742.

திருந்து தினமத் தினத்தி நொடுநின்
றிருந்தறி நாளொன் றிரண்டெட்டு மூன்று
பொருந்திய நாளொடு புக்கறிந் தோங்கி
வருந்துத லின்றி மனைபுக லாமே.743.

மனைபுகு வீரும் மகத்திடை நீராடி
எனவிரு பத்தஞ்சும் ஈரா றதனால்
தனையறிந் தேறட்டுத் தற்குறி யாறு
வினையறி யாறு விளங்கிய நாலே.744.

நாலுங் கடந்தது நால்வரும் நாலைந்து
பாலங் கடந்தது பத்துப் பதினைந்து
கோலங் கடந்த குணத்தாண்டு மூவிரண்
டாலங் கடந்ததொன் றாரறி வாரே.745.

ஆறும் இருபதுக் கையஞ்சு மூன்றுக்குந்
தேறு மிரண்டு மிருபத்தொ டாறிவை
கூறு மதியொன் றினுக்கிரு பத்தேழு
வேறு பதியங்க ணாள்விதித் தானே.746.

விதித்த இருபத்தெட் டொடுமூன் றறையாகத்
தொகுத்தறி முப்பத்து மூன்று தொகுமின்
பதித்தறி (1) பத்தெட்டும் பாரா திகணால்
உதித்தறி மூன்றிரண் டொன்றின் முறையே
(1)
பத்தெட்டுப்.747.

முறைமுறை யாய்ந்து முயன்றில ராகில்
இறையிறை யார்க்கும் இருக்க அரிது
மறையது காரண மற்றொன்று மில்லை
பறையறை யாது பணிந்து முடியே.748.

முடிந்த தறியார் முயல்கின்ற மூர்க்கர்
இட்ஞ்சில் இருக்க விளக்கெரி கொண்டு
கடிந்தனன் மூளக் கதுவவல் லார்க்கு
நடந்திடும் பாரினில் நண்ணலு மாமே.749.

நண்ணு சிறுவிர னாணாக மூன்றுக்கும்
பின்னிய மார்பிடைப் பேராமல் ஒத்திடுஞ்
சென்னியின் மூன்றுக்குன்ய் சேரவே (1) நின்றிடும்
உன்னி (2) யுணர்ந்திடும் ஓவியந் தானே
(1)
நின்றிடில்
(2)
அணைந்திடும்.750.

ஓவிய மான வுணர்வை அறிமின்கள்
பாவிக ளித்தின் பயனறி வாரில்லை
தீவினை யாமுடன் மண்டல மூன்றுக்கும்
பூவில் இருந்திடும் புண்ணியத் தண்டே.751.

தண்டுடன் ஓடித் தலைப்பெய்த யோகிக்கு
மண்டல மூன்று (1) மகிழ்ந்துடல் ஒத்திடுங்
கண்டவர் கண்டனர் காணார் வினைப்பயன்
பிண்டம் பிரியப் பிணங்குகின் றாரே
(1)
மகிழ்ந்துடன்.752.

பிணங்கி அழிந்திடும் பேறது கேள்நீ
அணங்குட னாதித்த னாறு விரியின்
வணங்குட னேவந்த வாழ்வு குலைந்து
சுணங்கனுக் காகச் சுழல்கின்ற வாறே.753.

சுழல்கின்ற வாறின் துணைமலர் காணான்
தழலிடைப் புக்கிடுந் தன்னு ளிலாமற்
கழல்கண்ட போம்வழி காணவல் லார்க்குக்
குழல்வழி நின்றிடுங் கூத்தனு மாமே.754.

கூத்தன் குறியிற் குணம்பல கண்டவர்
சாத்திரந் தன்னைத் தலைப்பெய்து நிற்பர்கள்
பார்த்திருந் துள்ளே அனுபோக நோக்கிடில்
ஆத்தனு மாகி யலர்ந்திரு மொன்றே.755.

ஒன்றில் வளர்ச்சி உலப்பிலி கேளினி
நன்றென்று மூன்றுக்கு நாளது சென்றிடுஞ்
சென்றிடு முப்பதுஞ் சேர இருந்திடிற்
குன்றிடைப் பொன்திகழ் கூத்தனு மாமே.756.

கூத்தவன் ஒன்றிடுங் கூர்மை அறிந்தங்கே
ஏத்துவர் பத்தினில் எண்டிசை தோன்றிடப்
பார்த்து மகிழ்ந்து பதுமரை நோக்கிடிற்
சாத்திடு நூறு தலைப்பெய்ய லாமே.757.

சாத்திடு நூறு தலைப்பெய்து நின்றவர்
காத்துடல் ஆயிரங் கட்டுறக் காண்பர்கள்
சேர்த்துடல் ஆயிரஞ் சேர இருந்தவர்
மூத்துடன் (1) கோடி யுகமது வாமே.758.

(1)
கூடி

உகங்கோடி கண்டும் ஒசிவற நின்று
அகங்கோடி (1) கண்டு ளயலறக் காண்பர்கள்
சிவங்கோடி விட்டுச் செறிய இருந்தங்
குகங்கோடி கண்டல் குயருறு வாரே
(1)
கண்டு ளயர்வறக்.759.

உயருறு வாருல கத்தொடுங் கூடிப்
பயனுறு வார்பலர் தாமறி யாமற்
செயலுறு வார்சிலர் சிந்தையி லாமற்
கயலுறு கண்ணியைக் காணகி லாரே.760.

காணகி லாதார் கழிந்தோடிப் போவர்கள்
நாணகி லாதார் நயம்பேசி விடுவர்கள்
காணகி லாதார் கழிந்த பொருளெலாங்
காணகி லாமற் கழிகின்ற வாறே.761.

கழிகின்ற அப்பொருள் காணகி லாதார்
கழிகின்ற அப்பொருள் காணலு மாகுங்
கழிகின்ற வுள்ளே கருத்துற நோக்கிற்
கழியாத அப்பொருள் காணலு மாமே.762.

கண்ணன் பிறப்பிலி காணந்தி யாயுள்ளே
எண்ணுந் திசையுடன் ஏகாந்த னாயிடுந்
திண்ணென் றிருக்குஞ் சிவகதி (1) யாநிற்கும்
நண்ணும் பதமிது நாடவல் லார்கட்கே
(1)
யாய்நிற்கும்.763.

நாடவல் லார்க்கு நமனில்லை கேடில்லை
நாடவல் லார்கள் நரபதி யாய்நிற்பர்
தேடவல் லார்கள் தெரிந்த பொருளிது
கூடவல் லார்கட்குக் கூறலு மாமே.764.

கூறும் பொருளி தகார வுகாரங்கள்
தேறும் பொருளிது சிந்தையுள் நின்றிடக்
கூறு மகாரங் குழல்வழி யோடிட
ஆறும் அமர்ந்திடும் அண்ணலு மாமே.765.

அண்ணல் இருப்பிட மாரும் அறிகிலர்
அண்ணல் இருப்பிடம் ஆய்ந்துகொள் வார்களுக்
கண்ணல் அழிவின்றி உள்ளே அமர்ந்திடும்
அண்ணலைக் காணில் அவனிவ வாகுமே.766.

அவனிவ நாகும் பரிசறி வாரில்லை
அவனிவ நாகும் பரிசது கேள்நீ
அவனிவ நோசை ஔiயினுள் ஒன்றிடும்
அவனிவன் வட்டம தாகிநின் றானே.767.

வட்டங்க ளேழு மலர்ந்திடும் உம்முளே
சிட்டன் இருப்பிடஞ் சேர அறிகிலீர்
ஒட்டி யிருந்துள் உபாயம் உணர்ந்திடக்
கட்டி இருப்பிடங் காணலு மாகுமே.768.

காணலு மாகும் பிரமன் அரியென்று
காணலு மாகுங் கறைக்கண்டன் ஈசனைக்
காணலு மாகுஞ் சதாசிவ சத்தியங்
காணலு மாகுங் கலந்துடன் வைத்ததே.769.

15.
ஆயுள் பரிட்சை

வைத்தகை சென்னியில் நேரிதாய்த் தோன்றிடில்
உத்தம மிக்கிடில் ஓராறு தங்களா
மத்த மிகுத்திட் டிரட்டிய தாயிடில்
நித்தல் உயிர்க்கொரு திங்களில் ஓசையே.770.

ஓசையும் ஈசனும் ஒக்கும் உணர்வின்கண்
ஓசை (1) யிறந்தவர் ஈசனை உள்குவர்
ஓசை யிறந்தவர் நெஞ்சினுள் ஈசனும்
ஓசை யுணர்ந்த உணர்விது வாமே
(1)
பிறந்தவர்.771.

ஆமே அழிகின்ற வாயுவை நோக்கிடில்
நாமே உறைகின்ற நன்மை யளித்திடும்
பூமேல் உறைகின்ற போதகம் வந்திடுந்
தாமே யுலகில் தலைவனு மாமே.772.

தலைவ னிடம்வலஞ் சாதிப்பார் இல்லை
தலைவ னிடம்வல மாயிடில் தையல்
தலைவ னிடம்வலந் தன்வழி யஞ்சில்
தலைவ நிடம்வலந் தன்வழி நூறே.773.

ஏறிய வாறினில் எண்பது சென்றிடுந்
தேறிய ஏழிற் சிறக்கும் வகையெண்ணில்
ஆறொரு பத்தாய் அமர்ந்த இரண்டையுந்
தேறியே நின்று தௌiயிவ் வகையே.774.

இவ்வகை எட்டும் இடம்பெற ஓடிடில்
அவ்வகை (1) ஐம்பதே யென்ன அறியலாஞ்
செவ்வகை ஒன்பதுஞ் சேரவே நின்றிடின்
முவ்வகை யாமது முப்பத்து மூன்றே
(1)
யையொன்பதே
(1)
யொன்பதே
(1)
யன்பதே.775.

மும்மூன்றும் ஒன்றும் முடிவுற நின்றிடிற்
(1)
எண்மூன்றும் நாலும் இடவகை யாய்நிற்கும்
ஐம்மூன்றும் ஓடி அகலவே நின்றிடிற்
பன்மூன்றொ டீராறு பார்க்கலு மாமே
(1)
எண்முன் றினாலும்.776.

பார்க்கலு மாகும் பகல்முப் பதுமாகில்
ஆக்கலு மாகுமவ் வாறிரண் டுள்ளிட்டுப்
போக்கலு மாகும் புகலற ஒன்றெனில்
தேக்கலு மாகுந் திருந்திய பத்தே.777.

ஏயிரு நாளும் இயல்புற ஓடிடிற்
பாயிரு நாலும் பகையற நின்றிடும்
தேய்வுற மூன்றுந் திகழவே நின்றிடில்
ஆயுரு வாறென் றளக்கலு மாமே.778.

அளக்கும் வகைநாலும் அவ்வழியே (1) ஓடில்
விளக்கும் ஒருநாலு மெய்ப்பட நிற்கும்
துளக்கும் வகையைந்துந் தூய்நெறி ஓடில்
களக்க மறமூன்றிற் காணலு மாமே
(1)
ஓடிடில்.779.

காணலு மாகுங் கருதிய பத்தோடிற்
காணலு மாகுங் கலந்த இரண்டையும்
காணலு மாகுங் (1) கலப்பற மூவைந்தேற்
காணலு மாகுங் கருத்துற ஒன்றே
(1)
கலப்புற மூவைந்தேழ்.780.

கருதும் இருபதிற் (1) காண ஆறாகும்
கருதிய (2) ஐயைந்திற் காண்பது மூன்றாம்
கருதும் இருப துடனாறு காணிற்
கருதும் இரண்டெனக் காட்டலு மாமே
(1)
ஈராறாகும்
(2)
ஐந்திற்.781.

காட்டலு மாகுங் கலந்திரு பத்தேழில்
காட்டலு மாகுங் கலந்தெழும் ஒன்றெனக்
காட்டலு மாகுங் கலந்திரு பத்தெட்டிற்
காட்டலு மாகுங் கலந்தஈ ரைந்தே.782.

ஈரைந்தும் ஐந்தும் இருமூன்றும் எட்டுக்கும்
பாரஞ்சி நின்ற பகைபத்து நாளாகும்
வாரஞ்செய் கின்ற (1) வகையாறஞ் சாமாகில்
ஓரஞ்சொ டொன்றொன் றெனவொன்று நாளே
(1)
வகையான்ய் சமாதியில்.783.

ஒன்றிய நாள்கள் ஒருமுப்பத் தொன்றாகிற்
கன்றிய நாலுங் கருத்துற மூன்றாகுஞ்
சென்றுயிர் நாலெட்டுஞ் சேரவே நின்றிடின்
மன்றியல் பாகு மனையில் இரண்டே.784.

மனையிலஒன் றாகும் மாதமு மூன்றுஞ்
சுனையில்ஒன் றாகத் தொனித்தனன் நந்தி
வினையற வோங்கி வௌiச்செய்து நின்றால்
தனையுற நின்ற தலைவனு மாமே.785.

ஆரு மறியார் அளக்கின்ற வன்னியை
ஆரு மறியார் அளக்கின்ற வாயுவை
ஆரு மறியார் அழிகின்ற அப்பொருள்
ஆரு மறியார் அறிவறிந் தேனே.786.

அறிவது வாயுவொ டைந்தறி வாய
அறிவா வதுதான் உலகுயி ரத்தின்
பிறிவுசெய் யாவகை பேணியுள் நாடிற்
செறிவது நின்று திகழு மதுவே.787.

அதுவரு ளும்மரு ளான துலகம்
பொதுவரு ளும்புக ழாளர்க்கு நாளு
மதுவரு ளும்மலர் மங்கையர் செல்வி
இதுவருள் செய்யும் இறையவ னாமே.788.

பிறப்பது சூழ்ந்த பெருந்தகை நந்தி
குறிப்பது கூடிய கோலக் குரம்பைப்
பழப்பதி யாவது பற்றறும் பாசம்
அழப்படி செய்வார்க் ககலு மதியே.789.

16.
வாரசரம்

வெள்ளிவெண் திங்கள் விளங்கும் புதனிடம்
ஒள்ளிய மந்தன் இரவிசெவ் வாய்வலம்
வள்ளிய பொன்னே வளரும் பிறையிடந்
தெள்ளிய தேய்பிறை தான்வல மாமே.790.

வெள்ளிவெண் திங்கள் விளங்கும் புதன்மூன்றுந்
தள்ளி இடத்தே தயங்குமே யாமாகில்
ஒள்ளிய காயத்துக் கூன மிலையென்று
வள்ளல் நமக்கு மகிழ்ந்துரைத் தானே.791.

செவ்வாய் வியாழஞ் சனிஞாயி றேஎன்னும்
இவ்வா றறிகின்ற யோகி இறைவனே
ஒவ்வாத வாயு வலத்துப் புரியவிட்
டவ்வா றறிவார்க்கவ் வானந்த மாமே.792.

மாறி வருமிரு பான்மதி வெய்யவன்
ஏறி இழியுந் இடைபிங் கலையிடை
ஊறும் உயிர்நடு வேயுயி ருக்கிரந்
தேறி அறிமின் தெரிந்து தௌiந்தே.793.

உதித்து வலத்திடம் போகின்ற போது
(1)
அதிர்த்தஞ்சி யோடுத லாமகன் றாரும்
உதித்தது வேமிக வோடிடு மாகில்
உதித்த விராசி யுணர்ந்துகொ ளுற்றே
(1)
அதிற்கஞ்சி
(1)
அதிற்றுஞ்சி.794.

நடுவுநில் லாமல் இடம்வலம் ஓடி
அடுகின்ற வாயுவை அந்தணன் கூடி
இடுகின்ற வாறுசென் றின்பணி சேர
முடிகின்ற தீபத்தின் முன்னுண்டென் றானே.795.

ஆயும் பொருளும் அணிமலர் மேலது
வாயு விதமும் பதினா றுளவலி
போய மனத்தைப் பொருகின்ற வாதாரம்
ஆயவு நாளு (1) முகுர்த்தமு மாமே
(1)
முகுத்தமு.796.

17.
வாரசூலம்

வாரத்திற் சூலம் வரும்வழி கூறுங்கால்
நேரொத்த திங்கள் சனிகிழக் கேயாகும்
பாரொத்த சேய்புதன் உத்தரம் பானுநாள்
நேரொத்த வெள்ளி குடக்காக நிற்குமே.797.

தெக்கண மாகும் வியாழத்துச் சேர்த்திசை
அக்கணி சூலமு மாமிடம் பின்னாகில்
துக்கமும் இல்லை வலமுன்னே தோன்றிடின்
மிக்கது மேல்வினை மேன்மேல் விளையுமே.798.

18.
கேசரி யோகம்

கட்டக் கழன்று கீழ்நான்று வீழாமல்
அட்டத்தைக் கட்டி அடுப்பை அணைகோலி
விட்டத்தைப் பூட்டி மேற்பையைத் தாட்கோத்து
நட்ட மிருக்க நமனில்லை தானே.799.

வண்ணான் ஒலிக்குஞ் சதுரப் பலகைமேற்
கண்ணாறு மோழை படாமற் கரைகட்டி
(1)
விண்ணாறு பாய்ச்சிக் குளத்தை (2) நிரப்பினால்
அண்ணாந்து பார்க்க அழுக்கற்ற வாறே
(1)
விண்ணாற்றைத் தேக்கி
(2)
நிரப்பிட்டு.800.

இடக்கை வலக்கை இரண்டையும் மாற்றித்
துதிக்கையால் உண்பார்க்குச் சோரவும் வேண்டாம்
உறக்கத்தை (1) நீக்கி உணரவல் லார்க்கட்
கிறக்கவும் வேண்டாம் இருக்கலு மாமே.801.

ஆய்ந்துரை செய்யில் அமுதநின் றூறிடும்
வாய்ந்துரை செய்யும் வருகின்ற காலத்து
நீந்துரை செய்யில் நிலாமண் டலமதாய்ப்
பாய்ந்துரை செய்தது பாலிக்கு மாறே.802.

நாவின் நுனியை நடுவே சிவிறிடிற்
சீவனும் அங்கே சிவனும் உறைவிடம்
மூவரு முப்பத்து மூவருந் தோன்றுவர்
சாவதும் இல்லை சதகோடி யூனே.803.

ஊனூறல் பாயும் உயர்வரை உச்சிமேல்
வானூறல் பாயும் வகையறி வாரில்லை
வானூறல் பாயும் வகையறி வாளர்க்குத்
தேனூறல் உண்டு தௌiயலு மாமே.804.

மேலையண் ணவில் விரைந்திரு காலிடிற்
காலனும் இல்லை கதவுந் திறந்திடும்
ந்யாலம் அறிய நரைதிரை மாறிடும்
பாலனு மாவான் பராநந்தி ஆணையே.805.

நந்தி முதலாக நாமேலே யேறிட்டுச்
சந்தித் திருக்கில் தரணி முழுதாளும்
பந்தித் திருக்கும் பகலோன் வௌiயாகச்
சிந்தித் திருப்பவர் தீவினை யாளரே.806.

தீவினை யாடத் திகைத்தங் கிருந்தவர்
நாவினை நாடின் நமனுக் கிடமில்லை
பாவினை நாடிப் பயனறக் கண்டவர்
தேவினை யாடிய தீங்கரும் பாமே.807.

தங்கரும் பாகவே செய்தொழி லுள்ளவர்
ஆங்கரும் பாக அடையநா வேறிட்டுக்
கோங்கரும் பாகிய கோணை நிமிர்த்திட
ஊங்கரும் பாகியே ஊனீர் வருமே.808.

ஊனீர் வழியாக வுண்ணாவை யேறிட்டுத்
தேனீர் பருகிச் சிவாய நமவென்று
கானீர் வரும்வழி கங்கை தருவிக்கும்
வானீர் வரும்வழி வாய்ந்தறி வீரே.809.

வாய்ந்தறிந் துள்ளே வழிபாடு செய்தவர்
காய்ந்தறி வாகக் கருணை பொழிந்திடும்
பாய்ந்தறிந் துள்ளே படிக்கத வொன்றிட்டுக்
(1)
கூய்ந்தறிந் துள்ளுறை கோயிலு மாமே
(1)
கோய்ந்தறிந் .810.

கோயிலின் உள்ளே குடிசெய்து வாழ்பவர்
தாயினும் நல்லார் தரணி முழுதுக்குங்
காயினும் நல்லவர் காய்ந்தவர் தம்முளுந்
தீயினுந் தீயரத் தீவினை யாளர்க்கே.811.

தீவினை யாளர்த்தஞ் சென்னியி லுள்ளவன்
பூவினை யாளர்த்தம் பொற்பதி யானவன்
பாவினை யாளர்த்தம் பாகவத் துள்ளவன்
மாவினை யாளர்த்தம் மதியிலுள் ளானே.812.

மதியி நெழுங்கதிர் போலப் பதினாறாய்ப்
பதிமனை நூறு(1)நூற் றிருபத்து நாலாய்க்
கதிமனை யுள்ளே கணைகள் பரப்பி
எதிர்மலை யாமல் இருந்தனன் தானே
(1)
நூற்றைம்பதோ டொன்றாய்க் கதிமன வுள்ளே.813.

இருந்தனள் சத்தியு மக்கலை சூழ
இருந்தனள் கன்னியு மந்நடு வாக
இருந்தனள் மானேர் முகநில வார
இருந்தனள் தானும் அமுதம் பொழிந்தே.814.

பொழிந்த இருவெள்ளி பொன்மண் ணடையில்
வழிந்துள் ளிருந்தது வான்முத லங்குக்
கழிந்தது போகாமற் காக்கவல் லார்க்குக்
கொழுந்தது வாகுண்- குணமது தனே.815.

குணமது வாகிய கோமள வல்லி
மணமது வாக மகிழ்ந்தங் கிருக்கில்
தனமது வாகிய தத்துவ ஞானம்
இனமது வாக இருந்தனன் தானே.816.

இருந்த பிராணனும் உள்ளே எழுமாம்
பரிந்தஇத் தண்டுடன் அண்டம் பரிய
விரிந்தஅப் பூவுடன் மேலெழ வைக்கின்
மலர்ந்தது மண்டலம் வாழலு மாமே.817.

மண்டலத் துள்ளே மனவொட்டி யாணத்தைக்
கண்டகத் தங்கே கருதியே கீழ்க்கட்டிப்
பண்டகத் துள்ளே பகலே ஔiயாகக்
குண்டலக் காதனுங் கூத்தொழிந் தானே.818.

ஒழிகின்ற வாயுவும் உள்ளே அமருங்
கழிகின்ற வாயுவுங் காக்கலு மாகும்
வழிகின்ற காலத்து வட்டக் கழலைப்
பழிக்கின்ற காலத்துப் பையகற் றீரே.819.

பையினி னுள்ளே படிக்கத வொன்றிடின்
மெய்யினி னுளே விளங்கும் ஔiயதாங்
கையினுள் வாயுக் கதித்தங் கெழுந்திடின்
மையணி கோயில் மணிவிளக் காமே.820.

விளங்கிடும் வாயுவை மேலெழ உன்னி
(1)
நலங்கிடுங் கண்டத்து நாபியி நுள்ளே
வணங்கிடு மண்டலம் வாய்த்திடக் கும்பிச்
சுணங்கிட நின்றவை சொல்லலு மாமே
(1)
நலண்-கிடுண்- காமத்து நாடியி நுள்ளே.821.

சொல்லலு மாயிடு மாகத்து வாயுவுஞ்
சொல்லலு மாகு மண்ணீர்க் கடினமுஞ்
சொல்லலு மாகும் இவையஞ்சுங் கூடிடிற்
சொல்லலு மாந்தூர தெரிசனந் தானே.822.

தூர தெரிசனஞ் சொல்லுவன் காணலாங்
காராருங் கண்ணி கடைன்யான முட்பெய்தி
ஏராருந் தீபத் தெழிற்சிந்தை வைத்திடிற்
பாரா ருலகம் பகன்முன்ன தாமே.823.

முன்னெழு நாபிக்கு முந்நால் விரற்கீழே
பன்னெழு வேதப் பகலொளி யுண்டென்னும்
நன்னெழு நாதத்து நற்றீபம் வைத்திடத்
தன்னெழு கோயில் தலைவனு மாமே.824.

19. (1)
பரியண்-க யோகம்
(1)
பரியண்-கி யோகம்

பூசு வனவெல்லாம் பூசிப் புலர்த்திய
வாச நறுங்குழல் மாலையுஞ் சாத்திக்
காயக் குழலி கலவி யொடுங்கலந்
(1)
தூசித் துளையுறத் தூங்காது (2) போகமே
(1)
தூசத் துணையறத்
(2)
யோகமே
(2)
போதமே
(2)
மோகமே.825.

போகத்தை யுன்னவே போகாது வாயுவு
மோகத்தை வெள்ளியு மீளும் வியாழத்தில்
சூதொத்த மென்முலை யாளுநற் சூதனுந்
தாதிற் குழைந்து தலைகண்ட வாறே.826.

கண்டனுங் கண்டியுங் காதல்செய் யோகத்து
மாண்டலங் கொண்டிரு பாலும் வௌiநிற்கும்
வண்டியை மேற்கொண்டு வானீர் உருட்டிடத்
தண்டொரு காலுந் தளராது அங்கமே.827.

அங்கப் புணர்ச்சியு மாகின்ற தத்துவ
மங்கத்தில் விந்து வருகின்ற போகத்துப்
பங்கப் படாமற் பரிகரித் துத்தம்மைத்
தங்கிக் கொடுக்கத் தலைவனு மாமே.828.

தலைவனு மாயிடுந் தன்வழி ஞானந்
தலைவனு மாயிடுந் தன்வழி போகந்
தலைவனு மாயிடுந் தன்வழி யுள்ளே
தலைவனு மாயிடுந் தன்வழி அஞ்சே.829.

அஞ்சு (1) கடிகைமேல் ஆறாங் கடிகையில்
துஞ்சுவ தொன்றத் துணைவி துணைவன்பால்
நெஞ்சு நிறைந்தது வாய்கொளா தென்றது
பஞ்ச கடிகை பரியங்க யோகமே
(1)
கடிகையில் ஆறாண்- கடிகைமேற்.830.

பரியங்க யோகத்துப் பஞ்ச கடிகை
அரியஇவ் வியோகம் அடைந்தவர்க் கல்லது
சரிவளை முன்கைச்சி சந்தனக் கொங்கை
உருவித் தழுவ ஒருவற்கொண் ணாதே.831.

ஒண்ணாத யோகத்தை உற்றவ ராரென்னில்
விண்ணந்த கங்கை விரிசடை வைத்தவன்
பண்ணார் அமுதினைப் பஞ்ச கடிகையில்
எண்ணா மெனஎண்ணி இருந்தான் இருந்தே.832.

ஏய்ந்த பிராயம் இருபது முப்பதும்
வாய்ந்த குழலிக்கு மன்னர்க்கு மானந்தம்
வாய்ந்த குழலியோ டைந்து மலர்ந்திடச்
சோர்ந்தன சித்தமுன்ய் சோர்வில்லை வெள்ளிக்கே.833.

வெள்ளி யுருகிப் பொன்வழி ஓடாமே
கள்ளத்தட் டானார் கரியிட்டு மூடினார்
கொள்ளி பறியக் குழல்வழி யேசென்று
வள்ளியுண் ணாவில் அடக்கிவைத் தாரே.834.

வைத்த இருவருந் தம்மின் மகிழ்ந்துடன்
சித்தங் கலங்காது செய்கின்ற ஆனந்தம்
பத்து வகைக்கும் பதினெண் கணத்துக்கும்
வித்தக நாய்நிற்கும் வெங்கதி ரோனே.835.

வெங்கதி ருக்குஞ் சனிக்கும் இடைநின்ற
நங்கையைப் புல்லிய நம்பிக்கோ ரானந்தந்
தங்களிற் பொன்னிடை வெள்ளிதா ழாமுனந்
தங்களிற் செவ்வாய் (1) புதைத்திருந் தாரே
(1)
புதனிருந் தானே.836.

திருத்திப் புதனைத் திருத்தல்செய் வார்க்குக்
கருத்தழ காலே கலந்தங் கிருக்கில்
வருத்தமு மில்லையா மங்கை பங்கற்குந்
துருத்தியுள் வெள்ளியஞ் சோரா தெழுமே.837.

எழுகின்ற தீயை முன்னே கொண்டு சென்றிட்டால்
மெழுகுரு கும்பரி செய்திடும் மெய்யே
உழுகின்ற தில்லை ஔiயை அறிந்தபின்
விழுகின்ற தில்லை வௌiயறி வார்க்கே.838.

வௌiயை அறிந்து வௌiயி னடுவே
(1)
iயை அறியி நுளிமுறி யாமே
தௌiவை அறிந்து செழுநந்தி யாலே
வௌiயை அறிந்தனன் மேலறி யேனே
(1)
உளியை.839.

மேலாந் தலத்தில் விரிந்தவ ராரெனின்
மாலாந் திசைமுகன் மாநந்தி யாயவர்
நாலா நிலத்தி நடுவான வப்பொருள்
மேலா யுரைத்தனர் மின்னிடை யாளுக்கே.840.

மின்னிடை யாளுமின் னாளனுங் கூட்டத்துப்
பொன்னிடை வட்டத்தின் உள்ளே புகப்பெய்து
தன்னொடு தன்னை தலைப்பெய்ய (1) வல்லாரேன்
மண்ணிடைப் பல்லூழி வாழலு மாமே
(1)
வல்லீரே.841.

வாங்க லிறுதலை வாங்கலில் வாங்கிய
வீங்க வலிக்கும் விரகறி வாரில்லை
வீங்க வலிக்கும் விரகறி வாளரும்
ஓங்கிய தன்னை உதம்பண்ணி னாரே.842.

உதமறிந் தங்கே ஒருசுழிப் பட்டாற்
கதமறிந் தங்கே கபாலங் கறுக்கும்
இதமறிந் தென்றும் இருப்பாள் ஒருத்தி
பதமறிந் தும்முளே பார்க்கடிந் தாளே.843.

பாரில்லை நீரில்லை பங்கயம் ஒன்றுண்டு
தாரில்லை வேரில்லை தாமரை பூத்தது
ஊரில்லை காணும் ஔiயது (1) ஒன்றுண்டு
கீழில்லை மேலில்லை கேள்வியிற் பூவே
(1)
ஒன்றில்லை.844.

20.
அமுரிதாரணை

உடலிற் கிடந்த வுறுதிக் குடிநீர்க்
கடலிற் சிறுகிணற் றேற்றமிட் டாலொக்கும்
உடலில் ஒருவழி ஒன்றுக் கிறைக்கில்
நடலைப் படாதுயிர் நாடலு மாமே.845.

தௌiதரும் இந்தச் சிவநீர் பருகில்
iதரு மோராண்டில் ஊனமொன் றில்லை
வளியுறும் எட்டின் மனமும் ஒடுங்குங்
களிதருங் காயங் கனகம தாமே.846.

நூறு மிளகு நுகருஞ் சிவத்தினீர்
மாறும் இதற்கு மருந்தில்லை மாந்தர்கள்
தேறில் இதனைத் தௌiயுச்சி கப்பிடின்
மாறும் இதற்கு மறுமயி ராமே.847.

கரையரு கேநின்ற கானல் உவரி
வரைவரை என்பர் மதியிலா மாந்தர்
நுரைதிரை நீக்கி நுகரவல் லார்க்கு
நரைதிரை மாறு நமனுமங் கில்லையே.848.

அளக நன்னுத லாயோ ரதிசயங்
களவு காயங் கலந்தஇந் நீரிலே
மிளகு நெல்லியும் மஞ்சளும் வேம்பிடில்
(1)
இளகும் மேனி இருளுங் கபாலமே
(1)
இளகிடு.849.

வீர மருந்தென்றும் விண்ணோர் மருந்தென்றும்
நாரி மருந்தென்றும் நந்தி அருள்செய்தான்
ஆதி மருந்தென் றறிவார் அகலிடஞ்
சோதி மருந்திது சொல்லவொண் ணாதே.850.

21.
சந்திர யோகம்

எய்து (1) மதிக்கலை சூக்கத்தி லேறியே
எய்துவ தூலம் இருவகைப் பக்கத்துள்
எய்துங் கலைபோல ஏறி இறங்குமாந்
துய்யது சூக்கத்து தூலத்த காயமே
(1)
மதிநிலை.851.

ஆகின்ற சந்திரன் சூரியன் அங்கியுள்
ஆகின்ற ஈரெட்டா டாறிரண் டீரைந்துள்
ஏகின்ற வக்கலை யெல்லா மிடைவழி
ஆகின்ற யோகி அறிந்த அறிவே.852.

ஆறாத தாங்கலை ஆதித்தன் சந்திரன்
நாறா நலங்கினார் ஞாலங் கவர்க்கொளப்
பேறாங் கலைமுற்றும் பெருங்கால் ஈரெட்டு
மாறாக் கதிர்க்கொள்ளு மற்றங்கி கூடவே.853.

பத்தும் இரண்டும் பகலோன் உயர்க்கலை
பத்தினொ டாறும் உயர்க்கலை பான்மதி
ஒத்தநல் அங்கிய தெட்டெட் டுயர்க்கலை
அத்திறன் நின்றமை ஆய்ந்துகொள் வீரே.854.

எட்டெட் டனலின் கலையாகும் ஈராறுட்
சுட்டப் படுங்கதி ரோனுக்குஞ் சூழ்கலை
கட்டப் படுமீ ரெட்டா மதிக்கலை
ஒட்டப் படாஇவை ஒன்றோடொன் றாவே.855.

எட்டெட்டும் ஈராறும் (1) ஈரெட்டுந் தீக்கதிர்
சுட்டிட்ட சோமனில் தோன்றுங் கலையெனக்
கட்டப் படுந்தார கைகதிர் நாலுள
கட்டிட்ட தொண்ணூற்றொ டாறுங் கலாதியே
(1)
ஈரெட்டுத்.856.

எல்லாக் கலையும் இடைபிங் கலைநடுச்
சொல்லா நடுநாடி யூடே தொடர்மூலஞ்
செல்லா எழுப்பிச் சிரத்துடன் சேர்தலால்
நல்லோர் திருவடி நண்ணிநிற் போரே.857.

அங்கியிற் சின்னக் கதிரிரண் டாட்டத்துத்
தங்கிய தாரகை யாகுஞ் சசிபானு
வங்கிய தாரகை யாகும் பரையொளி
தங்கு நவசக்ர மாகுந் தரணிக்கே.858.

தரணி சலங்கனல் கால்தக்க வானம்
அரணிய பானு அருந்திங்கள் அங்கி
முரணிய தாரகை முன்னிய ஒன்பான்
பிரணவ மாகும் பெருநெறி தானே.859.

தாரகை மின்னுஞ் சசிதேயும் பக்கத்துத்
தாரகை மின்னா சசிவளர் பக்கத்துத்
தாரகை பூவிற் சகலத்தி யோனிகள்
தாரகைத் தாரகை தானான்ய் சொரூபமே.860.

முற்பதி னைஞ்சின் முளைத்துப் பெருத்திடும்
பிற்பதி னைஞ்சிற் பெருத்துச் சிறுத்திடும்
அப்பதி னைஞ்சும் அறியவல் லார்க்கட்குச்
செப்பரி யாங்கழல் சேர்தலு மாமே.861.

அங்கி எழுப்பி யருங்கதிர் ஊட்டத்துத்
தங்குஞ் சசியால் தாமம்ஐந் தைந்தாகிப்
பொங்கிய தாரகை யாம்புலன் போக்கறத்
திங்கள் கதிரங்கி சேர்க்கின்ற யோகமே.862.

ஒன்றிய ஈரெண் கலையும் உடலுற
நின்றது கண்டும் நினைக்கிலர் நீதர்கள்
கன்றிய காலன் (1) கருத்துழி வைத்தபின்
சென்றதில் வீழ்வர் திகைப்பொழி யாரே
(1)
கருக்குழி
(1)
கழுக்குறி.863.

அங்கி மதிகூட வாகும் கதிரொளி
அங்கி கதிர்க்கூட வாகு மதியொளி
அங்கி (1) சசிகதிர் கூடவத் தாரகை
தங்கி யதுவே சகலமு மாமே
(1)
சிவத்தினிற்.864.

ஈராறு பெண்கலை எண்ணிரண் டாண்கலை
பேராமற் புக்குப் பிடித்துக் கொடுவந்து
நேராகத் தோன்றும் நெருப்புற வேபெய்யில்
ஆராத ஆனந்தம் ஆனந்த மானதே.865.

காணும் பரிதியின் காலை இடத்திட்டு
மாணும் மதியதன் காலை வலத்திட்டுப்
பேணியே யிவ்வாறு பிழையாமற் செய்வீரேல்
ஆணி கலங்காதவ் வாயிரத் தாண்டே.866.

பாலிக்கும் நெஞ்சம் (1) பறையோசை ஒன்பதில்
ஆலிக்கும் அங்கே அமரர் பராபரன்
மேலைக்கு முன்னே விளக்கொளி யாய்நிற்குங்
காலைக்குச் சங்கு கதிரவன் தானே
(1)
பரையோசை.867.

கதிரவன் சந்திரன் காலம் அளக்கும்
பொதிரவ னுள்ளே பொழிமழை நிற்கும்
அதிரவ னண்டப் புறஞ்சென் றடர்ப்ப
எதிரவ நீச நிடமது தானே.868.

உந்திக் கமலத் துதித்தெழுஞ் சோதியை
(1)
அந்திக்கு மந்திர மாரும் அறிகிலார்
(2)
அந்திக்கு மந்திர மாரும் அறிந்தபின்
தந்தைக்கு முன்னே (3) மகன்பிறந் தானே
(1)
அந்தித்த வண்ணம் அறிவா லறிந்திலர்
(2)
அந்தித்த வண்ணம் அறிவா லறிந்தபின்
(3)
மகனிருந் தானே.869.

ஊதியம் ஏதும் அறியார் உரைப்பினும்
ஓதியும் ஏதும் அறியாத ஊமர்கள்
ஆதியும் அந்தமும் அந்திக்க வல்லீரேல்
வேதியன் அங்கே வௌiப்படுந் தானே.870.

பாம்பு மதியைத் (1) தினலுறும் பாம்பினைத்
தங்கு கதிரையஞ் (2) சோதித் தனலுறும்
பாம்பு மதியும் பகைதீர்த் (3) துடங்கொளீஇ
நீண்-கல் (4) கொடானே நெடுந்தகை யானே
(1)
தினலுறு மப்பாம்பு
(2)
சேரத் தினலுறும்
(3)
துடங்கொளின்
(4)
கொடானெம்.871.

அயின்றது வீழ்வள வுந்துயில் இன்றிப்
பயின்ற சசிவீழ் பொழுதில் துயின்று
நயந்தரு பூரணை உள்ள நடத்தி
வியந்தரு பூரணை மேவுன்ய் சசியே.872.

சசியுதிக் குமஅள வுந்துயி இன்றிச்
சசியுதித் தானேல் தனதூண் அருந்திச்
சசிசரிக் கின்றள வுந்துயி லாமற்
சசிசரிப் (1) பிங்கட்டன் கண்டுயில் கொண்டதே(1) பிங்கட் டன்றுயில்.873.

ஊழி பிரியா திருக்கின்ற யோகிகள்
நாழிகை யாக நமனை அளப்பர்க்கள்
ஊழி முதலாய் உயர்வார் உலகினில்
தாழவல் லார்.க்(1)இச் சசிவன்ன ராமே
(1)
இன் வழிச்சைவ ராமே.874.

தண்மதி பானுச் சரிபூமி யேசென்று
மண்மதி காலங்கள் மூன்றும் வழிகண்டு
வெண்மதி தோன்றிய நாளில் விளைந்தபின்
தண்மதி வீழ்வள விற்கண மின்றே.875.

வளர்க்கின்ற ஆதித்தன் தங்கலை யாறுந்
தளர்க்கின்ற சந்திரன் தங்கலை யாறு
(1)
மலர்ந்தெழு பன்னிரண் டங்குலம் ஓடி
அலர்ந்து விழுந்தமை யாரறி வாரே
(1)
மலர்ந்தேறு பன்னிரண்டோ டெட்டு நாலாம்.876.

ஆமுயிர்த் தேய்மதி நாளே யெனல்விந்து
போம்வழி எங்கணும் போகாது யோகிக்குக்
காமுற இன்மையிற் கட்டுண்ணு மூலத்தில்
ஓமதி யத்துள்விட் டுரையுணர் வாலே.877.

வேறுறச் செங்கதிர் மெய்க்கலை யாறொடுஞ்
சூறுற நாங்குந் தொடர்ந்துற வேநிற்கும்
ஈறிலி நங்கலை யீரைந்தொ டேமதித்
தாறுட் கலையுள் அகலுவா வாமே.878.

உணர்விந்து சோணி உறவினன் வீசும்
புணர்விந்து வீசுங் கதிரிற் குறையில்
உணர்வும் உடம்பும் உவையொக்க நிற்கில்
உணர்வும் உடம்பும் ஒருகால் விடாவே.879.

விடாத மனம்பவ நத்தொடு மேவி
நடாவு சிவசங்கின் நாதங் கொளுவிக்
கடாவிடா ஐம்புலன் கட்டுண்ணும் வீடு
படாதன இன்பம் பருகார் அமுதமே.880.

அமுதப் புனல்வரு மாற்றங் கரைமேற்
குமிழிக் குட்சுட ரைந்தையுங் கூட்டிச்
சமையத்தண் டோ ட்டித் தரிக்கவல் லார்க்கு
நமன்இகில்லை நற்கலை நாளனஇல்லை தானே.881.

உண்ணீ ரமுத முறுமூ றலைத்திறந்
தெண்ணீர் இணையடித் தாமரைக் கேசெலத்
தெண்ணீர்ச் சமாதி யமர்ந்துதீ ராநலங்
கண்ணாற் றொடேசென்று கால்வழி மாறுமே.882.

மாறு (1) மதியும் (2) மதித்திரு மாறின்றித்
தாறு படாமல் தண்டோ டே தலைப்படில்
ஊறு படாதுடல் வேண்டும் உபாயமும்
பாறு படாஇன்பம் பார்மிசை பொங்குமே.
(1)
மதியுமா தித்தனு மாறின்றித்
(2)
ஆதித்தனு
(2)
மதித்திடு.883.

மூன்றாம் தந்திரம் முற்றிற்று

No comments:

Post a Comment